முனைவர் நா. முத்துமோகனின் மார்க்சீய விவாதங்கள்
ரா. பாலகிருஷ்ணன்
முனைவர் நா. முத்துமோகன் திருநெல்வேலி மாவட்டத்துக் களக்காட்டுக்காரர். ரஷ்யாவில் ஆய்வுக் கல்வியை முடித்தவர். தற்போது மதுரை பல்கலைக்கழக குருநானக் பீடத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவரின், மார்க்சிய விவாதங்கள் என்ற சமூகவியல் ஆய்வு நூலை நான் சமீபத்தில் எடுத்தேன், எடுத்த வேகத்தில் முடித்தேன். இந்நூல் மார்க்சிய விவாதங்கள் என்று பெயரிடப்பட்டிருந்தாலும் சிவப்புத் துண்டு போட்டவர்களுக்காக எழுதப்பட்ட ஒன்று அல்ல. சமூக வியல், இலக்கியம், வரலாறு மற்றும் அரசியல் கற்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் பொதுவாக, திட்டமிட்ட வடிவில் எழுதப்பட்ட ஒன்று ஆகும். மார்க்சீயத்தை மையமாக வைத்துப் பல சமூக தத்துவவியலாளர்களை நா.முத்துமோகன் இதில் விவாதித்துச் செல்கிறார்.
கௌதம புத்தரைப் பற்றிய அணுகுமுறையில், பௌத்தம் ஆன்மா, உடல் என்ற பிளவுபட்ட நிலைகளை ஏற்பதில்லை என்று குறிப்பிடுகிறார். ஆகவே பௌத்த மதத்தில் உறவுகள், பொருண்மை ஆகியன முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மார்க்ஸ் கீழை நாடுகளில் (இந்தியா) மதம் ஒரு வலுவான சக்தியாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார். ஆனால் இந்திய வரலாறு முக்கிய மாக இனக்குழு வரலாறு என்பதை அவர் குறிப்பிட மறக்கவில்லை. ஆகவே இந்திய வரலாற்றில் திராவிட இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இனக்குழு உறவுகள் இயற்கை சார்ந்தவை. மதத்தின் வரலாறுகளைப் போல அவை கருத்துருவம் சார்ந்தவையல்ல.
மதங்கள் பற்றிய விவாதங்களை எழுப்பும் எமீல் டர்க்கீம் என்ற சமூகவியல் பேராசிரியர் புராதன இனக்குழு சமூகங்களை புரிந்து கொள்ளாமல் சமயங்களின் வரலாறுகளை அறிந்து கொள் வது சாத்தியமில்லை என்கிறார். சமயம் பற்றி இவரும் மார்க்சுக்கு நெருக்கமான ஒரு அபிப்பிராயத் தையே வைத்திருக்கிறார். குலக்குறி போன்ற புராதன இனக்குழு சமூகங்களின் கருத்தாடல்களே பிற்காலத்தில் பிரம்மம் இறைவன் என்ற நிலைகளை அடைந்திருக்கக்கூடும் என்பது அவருடைய யூகம். வளர்ச்சி அடைந்த நிலைகளில் மார்க்சீயத் தத்துவம் டிராட்ஸ்கி யிசத்தை எதிர் கொள்ள நேருகிறது. டிராட்ஸ்கி ஸ்டாலினுடன் முரண்பட்ட ஒரு ரஷ்ய (எதிர்ப்பு) புரட்சியாளர். அவரே ரஷ்ய சோஷலிசம் வெறும் அதிகார ஆட்சியாக மட்டுமே மாறிவிடும் என்று கணித்துச் சொன்னவர். ந.முத்துமோகன் இதனை நம் பார்வைக்கு விட்டுவிடுகிறார்.
பிரெஞ்சு மார்க்சியம் என்னும் அறிவார்ந்த நவீன அணுகுமுறைதான் இன்றைக்கு நவீன ஐரோப்பிய தத்துவங்கள், இலக்கிய விமர்சனங்கள் ஆகியவற்றிற்கு அடிப்டையாக அமைந்த ஒரு இயக்கம், அல்தூசரிலிருந்து தெரிதா எனப்படும் சமீபத்தில் மறைந்த மொழியியல் தத்துவவாதி வரைக்கும் இவ்வியக்கத்தையே அடிப்படை என்று கொள்ளலாம். இக்கட்டுரையில் விவாதிக்கப் படும் சார்த்தர், அல்தூசரின் இளைய மார்க்ஸ் போன்ற கருத்தாக்கங்கள் இன்று வரை அறிவு ஜீவிகள் மத்தியில் பெரிதும் விவாதிக்கப்படுபவை.
கடந்த சில வருடங்களுக்கு முன் மறைந்தவரான பூக்கோ மிக முக்கியமான ஒருவர். அவரே, முதலா ளித்துவ உற்பத்திக்குக் கருத்தியல் சட்டங்கள் பின்தடமாக அமைந்தன என்று சுட்டிக் காட்டுகிறார். அறிவுத்துறைகள் சகல குடிமக்களையும் அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்குச் செயல் படுகின்றன என்றும் மருத்துவமனைகள், சிறைகள் ஆகியவை பிறழ்வாளர்களைத் (பீமீஸ்வீணீஸீts) தனிமைப்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்தார். இவருக்குப் பின் வந்த பின்நவீனத்துவ வாதிகளான தெரிதா போன்றோர் உண்மை என்பது சொல்லின் இறுதியிலிருச்து தொடரும் பொருள் தேடல் என்று கூறுகின்றனர். இவ்வடிப்படையில் ஆதிசங்கரர் இம்முரண்பட்ட உலகை மறுத்தல் என்று தன்னுடைய தேடலை நிகழ்த்துகிறார். மாயாவாதம் என்ற அடிப்படையில் புனிதம், புனிதமற்றது என்ற அளவுகோல்களால் சமூகத்தைச் சகித்துக்கொள்ள இயலாதவர்கள் தரும் வர்ணனைகளின் முரண்பட்ட பதிவுகளே என்பது இவர் கருத்து.
(வெளியீடு : காவ்யா பதிப்பகம், சென்னை 24. விலை. ரூ. 110)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|