அன்பாதவன் கவிதைகள்
கனவுரையாடல்
மனச்சுழலின் வேகத்தோடு
பரந்த கித்தானில் நீயெழுதும்
ஓவியங்களின் பொருள் புரியாமல் போனாலும்
பரந்த வண்ணங்களில் மேயுமுன் தூரிகையின்
இயக்கம் புரிகிறதெனக்கு
உணர்கிறேன்; கனத்த படிமங்களாலும்
அடத்தியானக் குறியீடுகளாலும்
வலிய மொழியில் நீ படைத்த
கவிதைகளின் வலியவஸ்தையை
தூவியச் சொற்களை விடவும்
வார்த்தைகளின் இடைவெளியில்
மையங்கொண்ட மௌனகணம்
உட்புகுமெனக்குள்
உனக்கானப் படகில் சகபயணியாய்
துடுப்பு வலிக்கும் தோழமையாய்
பயணிக்கும் கனவை
தூக்கியெறியவியலாமல் உறக்கவில்லை நாட
தூங்கவிடாமல் கதைக்கிறாய் நீ.
நாகம்
மகுடியை பிடுங்கி
வாசிக்கத் தொடங்கிவிட்டது
பாதம் சுற்றிய நாகம்
வடிவம் குறித்த கணிப்புத்தவற
ஐந்து தலை விரித்து ஆடுகையில்
உயிரில் இறங்குகிறது ஈட்டி.
முழுதாயெனை விழுங்க
யத்தனிக்கும் நாகத்தினின்று
விடுபடும் வித்தை தெரியாது
கழிகிறது நீண்ட ராப்போது
நீல விஷம்
இச்சையாய்ப் பரவ...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|