குழிவண்டு என்று ஒன்றிருந்தது தெரியுமா?
த. அரவிந்தன்
சிட்டுக்குருவிகளைப் பார்க்க முடிவதேயில்லை தெரியுமா?
கரிச்சான்குருவிகளைப் பார்க்க முடிவதேயில்லை தெரியுமா?
கம்பளிப்பூச்சுகளைக்கூட அவ்வளவாகக் காணவில்லை தெரியுமா?
ரயில்பூச்சிகளைக்கூட அவ்வளவாகக் காணவில்லை தெரியுமா?
குழிவண்டு என்று ஒன்றிருந்தது தெரியுமா?
மலஉருட்டி என்று ஒன்றிருந்தது தெரியுமா?
மூஞ்சுறுகள் அரிதாகி வருகிறது தெரியுமா?
பன்றிகள் அரிதாகி வருகிறது தெரியுமா?
ஓணான்கள் நிற்க இடமில்லாமல் தலைமறைவு
ஓட்டத்திலேயே இருக்கிறது தெரியுமா?
அரணைகளும் அப்படியேதான் தெரியுமா?
ஈக்கள்கூட எப்போதாவதுதான் வருகிறது தெரியுமா?
புழுக்கள்கூட எப்போதாவதுதான் கண்ணில் படுகிறது தெரியுமா?
இரவில் படைபோல சூழ்ந்து ஒலியெழுப்பிய பூச்சிகளில்
பாதியைக்கூட இப்போது காணவில்லை தெரியுமா?
கருக்கலில் ஒரேயரு மரத்திலிருந்துகூட
ஆயிரக்கணக்கான பட்சிகளின் முதல் சிறகடிப்போசையை
முன்னெல்லாம் கேட்கலாம் தெரியுமா?
மிதிபட்டு செத்த எறும்புகளின் சிரிப்புகளோடு
சிற்றுண்டி உரையாடல் முடிந்தது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|