இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்
பட்சியின் சரிதம்
பீடிகை
நான் நினைத்திருக்கவில்லை
விரும்பிய இடத்திற்கு
எனை அழைத்துச் செல்லும்
சிறகுகள் எனக்கு முளைக்கும் என்று.
எனக்குத் தெரியாது
நான் ஒரு பறவை
ஆகிக்கொண்டிருந்தேன் என்று.
இது ஒரு மந்திரக் கிணறு என்பது
தெரியாமல் இதன் நீரைப் பருகினேன்.
சூதுரை காதை
இந்நீரின் ருசியில் மூளை இனிக்கிறது.
நாக்கு உன்மத்தம் கொள்கிறது.
பசி முற்றும் போதெல்லாம்
இதைப் பருகுகிறேன்.
என் மிருகன் விழித்துக் கொள்கிறான்
கனவின் முட்டைகளை அடைகாக்கும்
பறவையின் இதயம் அவன்
நான் கேட்டதெல்லாம் தருவான்.
கண்டு கேட்டு உண்டு உற்றறியும் புலன்கள்
அரூபத்தின் போதையில் கண் செருகி விம்ம
அவன் தருவதில் என்
இரத்தத்தின் வாசம் வீசும்.
மனமுரை காதை
இந்த சாலைகளை நான் நேசிக்கிறேன்.
கரிய பெரும் பாம்புகள்
ஊர்ந்து செல்லும் சாலைகள்.
இதில் மனம் காலில் பதிய
நடந்து செல்ல விரும்புகிறேன்.
இந்த மண் இந்த பூமி
இந்தக் களி உருண்டையை
முழுதாய் உண்டுவிட பசிக்கிறேன்
மண்ணை உண்டு மண்ணில் உண்டு
விண்ணில் கிளை பறக்கும் மரங்களைப் போல
அலருரை காதை - முதல் காண்டம்
என் சிறகுகளோ
எனை வானில் காவித் திரிகின்றன.
என் சக்கரங்கள் காற்றில்
உருளமுடியாமல் திணறுகின்றன.
வண்டியின் பாரம் எனை கீழே இழுக்கிறது.
அலருரை காதை - இரண்டாம் பாகம்
தரையில் விழுந்து புழுதி பறக்க
சகடமிட்டுப் போகிறதென் வண்டி.
கரும்பழுப்புச் சிறகுகள்
நிலமுரசிக் கிழிகின்றன.
அந்தம்
ரணம் பொறுக்காமல்
மீண்டும் சடசடக்கிறதென் சிறகுகள்
வானத்திலேறி மேகங்களை
பிழிந்து குடிப்பதாய் ஒரு கனவு
விடாய் தணிந்த பறவை மேகங்களுக்கு
மேல் பறக்கிறது.
ஒரு மரத்தை நம் வழிக்குக் கொண்டுவர
முதலில் அதை வெட்டிச் சாய்க்க வேண்டும்
ஆனால் அது அவ்வளவு எளிதல்ல
ஆயுதங்கள் எவ்வளவு மூர்கமாகப் பயன்படுத்த
முடியுமோ அவ்வளவு பயன்படுத்த வேண்டும்
எப்படியாவது அதை வேரோடு சாய்த்துவிட்டால் போதும்
பிறகு அலட்டிக்கொள்ள ஏதுமில்லை
வான் தொட தினவெடுத்து
வெளியெங்கும் கிளைபரப்பியிருந்த
அதன் பிரம்மாண்டமும் கம்பீரமும் சிதைக்கப்பட்டன
வெயிலைத் தின்று மதர்ந்திருந்த
அதன் சாத்தானின் பற்களும் நகங்களும்
பிடுங்கப்பட்டாயிற்று
இனி அது தீங்கற்றது
மரணத்தின் வாட்டமுற்று நிறமிழக்கும்
பச்சையிலைகளை ஆடுகள் மேயட்டும்
சிறு கிளைகளை சுள்ளிகளை விறகுகளாக்குவோம்
பருத்த அதன் பாகங்களை
என்ன செய்வதென முடிவெடுக்கும் ஏகபோகமும் நமதே
சன்னல்களாக்குவோம்
கதவுகள்
நாற்காலிகள்
மேசைகள் அல்லது சவப்பெட்டிகள்
என்ன வேண்டுமானாலும் செய்வோம்
இனி அது நமது கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|