ம. அருணாதேவி கவிதைகள்
இனம் புரியா இம்சை
உடம்பு கழன்று விடும் போல் இருக்கிறது
சுடிதாரை நான்தான் மாட்டினேனா? தெரியவில்லை
பொட்டு வைத்தேனா? ஞாபகம் வரவில்லை
காது கம்மல்கள் இருக்கின்றனவா? குழப்பமாய் இருக்கிறது
துவைத்து காய்ந்த துணி விழுவது போல் தரையில் விழுகிறேன்
உடம்பிற்குள் ஏதோ சாத்தான் புகுந்து விட்டது
உடம்பில் காய்ச்சல் சூடு உயர்ந்துகொண்டே இருக்கிறது
என் உடம்பு பிணமாகிவிட்டது போல் இருக்கிறது
என்னவோ நடக்கப் போகிறதுபோல் இருக்கிறது
என் அருகில் வந்து முகர்ந்து பார்க்கும் நாயை விரட்ட முடியவில்லை
நாயைப் போலவே பயத்தையும் மரணத்தையோ விரட்ட முடியவில்லை
வாகனத்தில் நசுங்கிய நாய் போல் உடம்பு கூழாகிறது
என் உடம்பை தொடவரும் நாய்
மரணமா? பயமா?
தெரியவில்லை.
தெரியாது
புது அலுவலகத்தில் நாற்காலி கிடைக்கவில்லை
நின்றுகொண்டு இருக்க வேண்டி இருக்கிறது
எதிரில் சிம்மாசனங்கள் இருக்கின்றன
தேக்கு மர நாற்காலிகள் இருக்கின்றன
குஷன் நாற்காலிகள் இருக்கின்றன
ஒவ்வொன்றிலிருந்தும் வெவ்வேறு வகையான
கேள்விகள் எனை நோக்கி
எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாது
மூக்கைத் தெடுவதற்கு தலையைச் சுற்றிவரச் சொல்லுகிறார்கள்
எந்த குறுக்கெழுத்துப் போட்டிக்கும் பதில் தெரியவில்லை
தெரியாது என்ற பதில்களால் எனை நிரப்புகிறார்கள்
நான் நின்றுகொண்டு இருக்கின்ற இடத்தில்
நின்றுகொள்ள அடுத்தவர் வரும் வரைக்கும்
நான் நின்றுகொண்டே இருக்க வேண்டும்
நான் இந்த அலுவலகத்திற்கு வந்த புது ஆள்
நாற்காலி இல்லாத ஆள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|