மக்களவைத் தேர்தல் 2009
ச.லெனின்
இந்த நாடாளுமன்றத் தேர்தல் எதிர்பாராத ஒரு வெற்றியை காங்கிரசுக்கு வழங்கியுள்ளது. வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்து பார்த்தால் நம்மை சிந்திக்க வைக்கும். 1991 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் 200க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெற்று உள்ளது இந்த தேர்தலில் தான். 28.6 சதவீத வாக்குகள் பெற்று 206 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த 2004 ஆம் அண்டு காங்கிரஸ் பெற்ற இடங்களை விட 61 இடங்கள் கூடுதலாகும். 1999 ஆம் ஆண்டு காங்கிரஸ் பெற்ற ஒவ்வொரு சதவீத வாக்கிற்கும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 2004 தேர்தலில் 5.5 உறுப்பினர்களையும், இத்தேர்தலில் 7.2 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.
தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் என்பது தேசம் முழுமைக்கும் ஒரே மாதிரியாக இல்லை என்பது புள்ளி விவரங்களை பார்த்தால் தெரியும். ஒரிசாவில் கடந்த முறையை விட இம்முறை 7.6சதவீத வாக்குகள் குறைந்துள்ளது. அதே சமயம் பஞ்சாபில் 11 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு வாக்குகளை காங்கிரஸ் இத்தேர்தலில் பெற்றுள்ளது. கவனிக்கத்தக்கது.
அடுத்த பிரதமர் நான் தான் என்று மேடைதோறும் முழங்கிய அத்வானி போன இடம் தெரியவில்லை. எதிர்கட்சி தலைவராக இருக்கமாட்டேன் என்று மானஸ்தன் வேடம் போட்டு ஒருவழியாக இறுதியில் எதிர்க்கட்சி தலைவராக ஒப்புக்கொண்டார். பா.ஜ.க 2004 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற இடங்கள் 134 ஆனால் இத்தேர்தலில் 116இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது. 3.4சதவீத வாக்குகளை பா.ஜ.க இத்தேர்தலில் இழந்ததுள்ளது. 1998 ல் இருந்து பா.ஜ.க வின் வாக்கு சதவீதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இது மதவாதத்தையும், தவரான பொருளாதார கொள்கையையும் முன்வைக்கும் பா.ஜ.க விற்கு கிடைத்த சரிவாகும்.
மலைவாழ் மக்கள் மத்தியிலும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் மத்தியிலும் இத்தேர்தலில் பா.ஜ.க வின் செல்வாக்கு சரிந்துள்ளது. கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசம் தவிர அனைத்து மாநிலங்களிலும் தனது செல்வாக்கை இழந்துள்ளது. குறிப்பாக இராஜஸ்தானில் 12.4 சதசீத வாக்கு கடந்த தேர்தலை விட இத்தேர்தலில் குறைந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க விற்கு மாற்றாக ஒரு மாற்று சக்தியை இடதுசாரிகள் முன்வைத்தனர். இத்தேர்தலில் இடதுசாரிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை யில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு இருந்த 61 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையில் இருந்து 24 ஆக குறைந்துள்ளது. வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துப்பார்த்தால் சிறு சரிவு மட்டுமே ஏற்ப்பட்டுள்ளது புலப்படும்.
நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு, ஜனநாயகம் பணத்தால் கேள்விக்குறியாக்கப்பட்ட பிறகு தேசத்தின் அரசியல் சூழலில் பெரிய மாற்றம் என்பது ஏற்ப்பட்டது. இடதுசாரிகள் எதிர்பார்த்தது போல் மாற்று அணி என்பது போராட்ட களத்திலிருந்து உருவாகாமல் வேறு வகையிலேயே உருவானது. முற்போக்கான மாற்று சக்தி என்பது நிச்சயமாக ஒட்டுப்போடும் வேலையால் நிகழ்ந்து விடாது அது போராட்ட களத்திலிருந்தே ஒருவாக வேண்டியுள்ளது. மக்கள் நலன்காக்க நிச்சயம் இம்மாற்று சக்தி உருவாகும். இத்தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பா.ஜ.க அல்லாத காங்கிரஸ் அல்லாத மாற்று கட்சிகள் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
காங்கிரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளையும், பெரும் முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு முதலாளிக்கு ஆதரவான செயல்பாட்டினையும், அணுசக்தி ஒப்பந்தத்தையும் எதிர்த்து போராடிய இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து போராடியுள்ளனர். இது இடதுசாரி கட்சிகளுக்கு எதிரான மிகப்பெரிய பெரு முதலாளிகள் மற்றும் அந்நிய சக்திகளை உருவாக்கியுள்ளது. இவர்களின் கூட்டு பணமாகவும், நேரடி செயல்பாடகவும் இடதுசாரிகளுக்கு எதிராக இத்தேர்தலில் வெளிப்பட்டுள்ளது.
பணப் பைகளும், பொய்களும், அதிகாரமும், ரவுடித்தனமும் பெரும்பாளான தொகுதிகளில் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமான வெற்றியை இத்தேர்தல் முடிவுகள் தந்துள்ளது. மக்கள் நலன் காக்க இளைஞர்களையும, வெகுமக்களையும் திரட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இன்று அதிகப்பட்டுள்ளது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|