Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஜனவரி 2007

இந்துக்களாக்கும் சதித்திட்டம்!
அய். இளங்கோவன்

மதமாற்றம் - இந்திய அரசியல் அரங்கில் இடையறாது விவாதிக்கப்படும் ஒரு பிரச்சினையாகவே நீடித்து வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால், இது வெறும் மதமாற்றம் என்பது போலத் தோன்றினாலும், இது மக்களின் சிந்தனையில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. தெளிவாகச் சொன்னால், இது ஜாதி மாற்றம். சாதிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் வழிமுறை தொடர்புடையது. அதனால்தான் மதமாற்றம் என்றதும், ஆளும் வர்க்கங்களும் ஆட்சியாளர்களும் அலறுகின்றனர். இந்து மதத்தில் இருந்தால்தான் இடஒதுக்கீடு என்று சொல்வதற்குக் காரணமும் அதுதான். இந்து மதத்தில் இருந்தால்தானே ஒருவன் அடிமையாக கீழ் சாதியாக இருக்க முடியும். தலித் கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு விட்டால், அவர்கள் ஏன் இந்து மதத்தில் இருந்து தொலைக்கப் போகிறார்கள். இடஒதுக்கீடுதான் இந்த மக்களை அம்மதத்தில் இருக்கும்படி கட்டாயப்படுத்துகிறது.

Christians அ.இ.அ.தி.மு.க. அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெறப்பட்டதற்கு இச்சட்டத்தைக் கொண்டுவந்த ஜெயலலிதா அரசும், அதற்கு காரணமாக இருந்த கருணாநிதி அரசும் மாறி மாறி உரிமை கொண்டாடின. மேலும், மதம் மாறிய பட்டியல் சாதியினருக்கும் - அனைத்து அரசியல் சட்ட உரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென, கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மய்ய அரசிற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போலவும், சில அறிவுஜீவிகள் சொல்வது போலவும் - தலித் கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கூட - கடந்த தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்தபோது வெளியிட்ட ‘தலித் மதமாற்றத் தடை ஆணை' (சுவீகரதாஸ் எதிர் இந்திய உணவுக் கழகம் வழக்கில் 1996 இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட அரசுக் கடிதம் எண்.81 நாள் 19.9.2000) இருக்கும் வரை, மதம் மாறிய தலித்துகள் இடஒதுக்கீட்டைத் துய்க்க முடியாது. ஏனெனில், தி.மு.க. அரசு ரத்து செய்யப் பிடிவாதமாக மறுக்கும் அந்த ஆணை இப்படிக் கூறுகிறது : "பிறப்பால் கிறித்துவராக இருப்பவர் இந்துவாக மாறினால், அவர் ஆதிதிராவிடர் சாதிச் சான்றிதழ் பெறவோ இட ஒதுக்கீட்டுக்குரிய சலுகைகளை அனுபவிக்கவோ தகுதி இல்லை.'' இந்த ஆணை மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகும் இன்றளவும் உயிர்ப்புடன் உள்ளது.

இந்த அரசுக் கடிதத்தால், பல்லாயிரக்கணக்கான மதம் மாறிய தலித்துகளுக்கு, ஆதிதிராவிடர் சான்றிதழ் வருவாய்த் துறையால் மறுக்கப்படுகிறது. இந்துவாக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், ஆதிதிராவிடர் சான்றிதழ் பெற்று அரசு வேலையில் இருக்கும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு, சாதிச்சான்று மெய்த்தன்மை சரி பார்த்தல் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்படுவதும், இறுதியாக இவர்களின் சான்றுகள் ரத்து செய்யப்பட்டு வேலை நீக்கம் செய்யப்படுவதும் இன்றைக்கு வாடிக்கையாகி விட்டது.

அரசுக் கடிதம் எண். 81/நாள் 19.9.2000 இன் சட்டப் பின்னணி என்ன? தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலர் பெ. கோலப்பன் கடிதம், ஆதிதிராவிடர்களின் வழிபாட்டு அடிப்படை உரிமையை மறுக்கிறது. எனவே, இது ஒருதலைப்பட்சமானது. அரசமைப்புச் சட்டம் பிரிவு 25க்கு எதிரானது. அவசர அவசரமாகத் திணிக்கப்பட்ட இந்த அநீதியை, தி.மு.க. அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.

கிறித்துவப் பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகள், பிறப்பால் கிறித்துவர்களாக இருந்தாலும் அவர்கள் இந்துக்களாக மதம் மாறலாம்; இந்துக்களாக வாழலாம். ஆனால், இந்துக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமை மட்டும் கிடையாது. வாதத்திற்காக இடஒதுக்கீட்டு உரிமை மட்டும் இவர்களுக்கு கிடையாது என்பதை ஒப்புக் கொள்வதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால், இடஒதுக்கீட்டு உரிமைக்கு அப்பால் - இந்துவாக மாறிய பிறவி கிறித்துவர்களுக்கு - இந்து சொத்துரிமைச் சட்டம், இந்துக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தத்துரிமைச் சட்டம், இந்து திருமணச் சட்டம் ஆகியவை அளிக்கும் உரிமைகளைப் பெறத் தகுதியுண்டா? அரசால் நியமிக்கப்படும் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள், வன்கொடுமைத் தடைக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், அறங்காவலர்கள் இன்ன பிற நியமனங்கள் பெறவும் தகுதியுள்ளவர்களா, இல்லையா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

ஆனால், பெ. கோலப்பன் கடிதம் ‘இல்லை' என்கிறது.

"இந்து மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீட்டு உரிமை, பட்டியல் சாதியைச் சார்ந்தவரென சான்று பெற உரிமை உண்டா?'' என்ற கேள்விக்கு 1975, 1976 இல் இரு தீர்ப்புரைகள் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளன. "பிறப்பால் இந்துவாக இருந்த ஒருவர் கிறித்துவ மதத்திற்கு மாறி, மீண்டும் இந்து மதத்திற்கு மாறியவர் (reconversion) - பட்டியல் சாதியினருக்கான உரிமைகளைப் பெறத் தகுதியுள்ளவர்'' என்று சி.எம். ஆறுமுகம் எதிர் ராஜகோபால் மற்றும் சிலர், வழக்கு உரிமையியல் முறையீட்டு எண். 1172/1973 19.12.1975 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிறித்துவப் பெற்றோருக்குப் பிறந்தவர் (பிறப்பால் கிறித்துவர்) இந்துவாக மதம் மாறினால் பட்டியல் சாதியினருக்கான உரிமைகளைப் பெறலாமென்று (குண்டூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் சிலர் எதிர் ஒய். மோகன்ராவ் (உரிமையியல் முறையீடு எண்.984/1975) 6.4.1976 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சி.எம். ஆறுமுகம் எதிர் ராஜகோபால் வழக்கில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "அட்மினிஸ்ட்டிரேட்டர் ஜெனரல் ஆப் மெட்ராஸ் எதிர் அனந்தாச்சாரி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புரைக் காலத்திலிருந்து, அதாவது 1886 முதல் இந்து மதத்திற்கு மாறிய நபர், தான் வேறு மதத்திற்கு மாறியதற்கு முன்னர் அங்கம் வகித்த சாதியினர் ஏற்றுக் கொள்ளும் நிலையில், தான் வேறு மதத்திற்கு மாறியதற்கு முன்னர் இருந்த சாதி அங்கத்தினராக ஆக முடியும் என்பதே இந்நாட்டில் நடைமுறையாக உள்ளது. முதல் பிரதிவாதி இந்து மதத்திற்கு மீண்டும் மாறிய நிலையில், ஆதிதிராவிட சாதியினரால் ஏற்றுக் கொள்ளப்படும் நிலையில், அவர் மீண்டும் ஆதிதிராவிடர் சாதிக்குத் திரும்ப முடியும் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புரையுடன் நாங்கள் ஒத்துப்போகிறோம்'' (பத்தி 17).

குண்டூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் சிலர் எதிர் ஒய். மோகன்ராவ் வழக்கில், "சி.எம். ஆறுமுகம் எதிர் எஸ். ராஜகோபால் வழக்கில் எழுந்த முதன்மையான கேள்வி, மதமாற்றத்திற்கு முன்னர் ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த எஸ். ராஜகோபால் மீண்டும் இந்து மதத்திற்கு மாறியபோது, மீண்டும் ஆதிதிராவிட இனத்தவராக முடியுமா என்பதே. இந்த நீதிமன்றம் கொள்கை அடிப்படையில் பரிசீலித்து, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்புரைகளின் அடிப்படையில், இந்த நாட்டில் 1886 இல் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள கருத்தின்படி, இந்து மதத்திற்கு மீண்டும் ஒருவர் மதம் மாறும்போது, மதம் மாறிய நபர் தான் வேற்று மதத்திற்கு மாறுவதற்கு முன்னர் சார்ந்திருந்த சாதியின் உறுப்பினர்கள், அவரை அச்சாதியினராக ஏற்றுக் கொள்ளும் நிலையில் - அவர் அந்த சாதி உறுப்பினராக முடியும் என்று கூறியுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள இறுதி முடிவுக்கு வருவதற்குரிய காரணங்கள், "கிறித்துவ மதத்திற்கு மாறிய பெற்றோர்களின் பிள்ளை இந்து மதத்திற்கு மாறும்போது, அவரது பெற்றோர்கள் மதமாற்றத்திற்கு முன் சார்ந்திருந்த சாதியினர் ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவர் அந்த சாதியினராக இருக்க முடியும் என்பதற்கும் பொருந்தும்'' (பத்தி 7) என்று தெளிவுபட உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட பெஞ்ச் தீர்ப்புரைத்துள்ளது. இவ்விரு தீர்ப்புரைகளும் தலித்துகளின் மதமாற்ற உரிமையையும் இடஒதுக்கீட்டு உரிமையையும் உறுதிப்படுத்தியுள்ளன. இத்தீர்ப்புரைகள் 1975 76 இல் இருந்து இன்றுவரை நடைமுறையிலும் உள்ளன.

இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 341இன்படி, பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் எவரெவர் என்பதை இந்தியக் குடியரசுத் தலைவர்தான் நிர்ணயம் செய்ய வேண்டும். பட்டியலினத்தவர் எவரெவர் என்பதை மாநில அரசோ, மாநில அரசின் ஒரு துறைச் செயலாளரோ, குடியரசுத் தலைவரின் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொள்ள முடியாது. என்றாலும், ஆதிதிராவிட நலத்துறைச் செயலரின் கடிதம், இன்றைக்கு ஆதிதிராவிடர் யார் என்பதை அத்துமீறி நிர்ணயித்துள்ளது.

தி.மு.க. அரசுக்கு நேர் எதிராகச் செயல்பட்டு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு, இவ்வரசுக் கடிதத்தைப் பொறுத்தவரையில் அப்படியே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது; தனது ஆட்சிக் காலத்தில் (2001 2006) உடும்புப் பிடியாக இக்கடிதத்தைச் செயல்படுத்தியது. நீதித் துறையிலிருந்தவர்களுக்கு எதிராகவும் இக்கடிதத்தைப் பயன்படுத்த அ.இ.அ.தி.மு.க. அரசு தயங்கவில்லை. உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். அசோக்குமாரின் பதவியைப் பறிக்க இவ்வரசு கடிதமே முழுக்க முழுக்க மேற்கோள் காட்டப்பட்டது. எஸ். அசோக்குமார் மீது தொடுக்கப்பட்ட வழக்கிலும், அண்மையில் ஆர். சங்கர் எதிர் தமிழ் நாடு அரசு தேர்வாணைக்குழு வழக்கிலும் - சென்னை உயர் நீதிமன்றம், கிறித்துவப் பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் இந்துவாக மதம் மாறும் நிலையில், இவர்கள் பட்டியல் சாதியினருக்கான அனைத்து அரசியல் சட்ட உரிமைகளையும் பெறத் தகுதியுள்ளவர்கள் எனத் தீர்ப்புரைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். அசோக்குமார் வழக்கிலும், ஆர். சங்கர் எதிர் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழு வழக்கிலும் சுவீகரதாஸ் எதிர் இந்திய உணவுக் கழகத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புரை, சுவிகரதாசுக்கு மட்டுமே பொருந்தும். அது, பொதுமைப்படுத்தப்படக் கூடாததை ஒரு தீர்ப்புரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு தீர்ப்புரைக்குமிடையே 3.10.2003 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அரசுக் கடிதத்திற்கு எதிராக (கடிதம் எண்.81, 19.9.2000) நான் (அய். இளங்கோவன்) தொடுத்த பொதுநல வழக்கில் நிரந்தர தடையாணை பிறப்பித்துள்ளதையும் மீறி, மாவட்ட ஆட்சியாளர்கள் இவ்வரசுக் கடிதத்தின் அடிப்படையிலேயே - கிறித்துவராக இருந்து இந்துவாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்குச் சாதிச் சான்று வழங்க மறுப்பதும், ஏற்கனவே வழங்கப்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதும் நடைமுறையில் உள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புரைகள், உயர் நீதிமன்றத் தீர்ப்புரைகள் எதுவாயினும், தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையைப் பொறுத்தவரை, பெ. கோலப்பன் கடிதம் (எண்.81, 19.9.2000) மட்டுமே இறுதியானது, நிலையானது. ஏனெனில், மதம் மாறியவர்களுக்கு (கிறித்துவ மதத்திற்குச் சென்று பின்னர் இந்து மதத்திற்குத் திரும்பியவர்களுக்கு) தண்டனையாக இடஒதுக்கீட்டு உரிமை மறுக்கப்படுகிறது. மதம் மாறிய அனைத்து தலித்துகளுக்கும் பட்டியல் சாதியினருக்கான உரிமைகள் வழங்கப்படுமென்ற தி.மு.க. தேர்தல் அறிக்கை மற்றும் சட்டமன்றத் தீர்மானத்திற்கு எதிரான கோலப்பன் கடிதத்தைத் தமிழக அரசு திரும்பப் பெறமால் இருப்பதற்கு என்ன காரணம்?

உயர் நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் வழக்கின் தீர்ப்புரை, ஆர். சங்கர் எதிர் அரசுத் தேர்வாணைக் குழு வழக்கின் தீர்ப்புரை மற்றும் இக்கடிதத்தின் மீதான உயர் நீதிமன்றத் தடையாணை அனைத்தும் அரசுக் கடிதத்தை அர்த்தமற்றதாக்குகிறது. மேலும், அரசு இக்கடிதத்தைத் திரும்பப் பெற முன் வராதது, அப்பட்டமான தலித் விரோத செயலன்றி வேறென்ன? தலித் உரிமைகளுக்காகப் போராடும் அனைவரும் இவ்வரசுக் கடிதத்தைத் திரும்பப் பெற வைப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுவதே - தலித் உரிமையைப் பாதுகாக்கும் செயலாக இருக்க முடியும். தலித் இயக்கங்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், தலித்துகளை இந்துக்களாக்கும் தமிழக அரசின் சதித்திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருப்பது ஏன்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com