யாழன்ஆதி கவிதை
வெடிக்கிறது
அழுகை
இயலாமையின் எல்லாவகை
வெளிப்படுத்தல்களுடனும்
கனவின் கூர்மை கருகி
தீயுமிழ்ந்த கணத்தில்
வற்றிப்போன ஆறாய்
வெறுமையுற்று நிற்கிறோம்
புகைந்து கிளம்பிய
துயரநெடி பரவும்
காற்றின் அடுக்குகளில்
புதைந்து இருக்கும்
உயிர்களின் இருப்பில்
வாழ்கின்றன பதுங்கு குழிகள்
ஆயுதங்கள் ஏதுமற்ற குழந்தைகளின்
ஓலங்களில் கருகும் பூக்களில்
வாசனை என்றேதும் புலப்படாது
சிதறடிக்கப்பட்ட
தசைத்துணுக்குகள் நிறைந்த
நிலமெங்கும் வெயிலில் வீசப்பட்ட மீனாய்
முடிவுறாத் துயரத்தின் பெருங்கற்கள்
உருள உருள கிடக்கிறது வாழ்க்கை
குண்டுகளில் சிதைந்த
பென்சில்களையும் ஓவியங்களையும்
தீ தின்ற பின்
காயத்தின் வெம்மை தகிக்கும் கைகளில்
வரைய காத்திருக்கின்றனர் அவர்கள்
விடுதலையை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|