இடப்பெயர்ச்சி இரா.தமிழரசி
கம்பீர காட்டுமரங்களைப்
புறக்கணித்து
கூடுகட்டிக் குடியிருக்க
வீட்டுக்குள் இடம் தேடியது
சிட்டுக்குருவி
ஆள் அரவங்களால்
பதட்டமடைந்து பரிதவித்து
வேர்த்தும் வீறிட்டும்
வெளியேறும் வழியறியாது
சுற்றித்திரிந்தது வீடு முழுவதும்
சன்னல் கண்ணாடியில் மோதி
மின்விசிறியில் இடித்து
வலையடித்த கதவுகளில் இடறி
படபடத்து அமர்ந்தது
விருட்டென வேற்றிடத்தில்...
இருத்திக் கொள்ளலாம் தான்
வீட்டுக்குள்...
பாசாங்கு போர்த்திய
மனித உலகம்
நாகரிக வாள்களால் அல்லவா
கூறுபோடும்
விருப்பமில்லை யெனினும்
விரட்டத்தான் நேர்கிறது
கோலெடுத்து...
இளகியழும் இதயம்
இரக்கமில்லாமைக்கு
வாழிடங்கள்
தீர்மானிக்கப்பட்டபின்
இயலுமா என்ன
இடம் பெயர்தல்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|