நிலா உவமைக் கவிஞர் சுரதா
"தெள்ளுதமி ழுக்குதவு சீலன்'
என்னும் காவடிச் சிந்து மெட்டு)
ஆசைகொண்டு விண்வெளியின் மீது - மதி
ஆடையின்றி யேவுலவும் மாது - முகில்
ஓசை கொண்ட மண்டலத்தில்
ஊர்ந்துலவி வாழ்ந்துவரும்
ஊமை-வெள்ளி ஆமை !
தேசமெல்லாம் சுற்றிவரும் தெப்பம் - குளிர்
திங்களொரு சங்குமணி அப்பம்-சிலர்
பூசலுக்கும் ஏசலுக்கும்
பொங்கியெழுங் காதலுக்கும்
பொறுப்பு-நிலாச் சிரிப்பு !
வல்லியிடை மங்கையரை வாட்டும் - ஒளி
வாங்கிவைத்து நம்மிடத்தில் காட்டும் - ஆமூர்
மல்லனென்பான் தோளைநிகர்
மாமலையின் உச்சியைப்போய்
வாழ்த்தும் - தலை தாழ்த்தும் !
நல்லவர்தம் நட்பெனவே வளரும் - சில
நாளிலதன் ஈரவுடல் தளரும்-இன்பச்
சொல்லமுதப் பாவலரைத்
தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும்
சோதி - வான் ஊர்தி !
மொட்டுமுல்லைக் கட்டவிழ்ந்தாற் போலே - வெள்ளி
முத்திரைமி தக்குதுபார் மேலே-மதி
வெட்டவெளி மீதினிலே
வெற்றிமன்னன் வெண்குடைபோல்
விரியும்-நகை புரியும்!
வட்டமிட்ட வெண்ணிலவின் மீது - காயம்
வந்தமையக் காரணந்தான் யாத - வண்ணக்
கட்டழகி அஞ்சனத்தை
விட்டெறிந்த தால்விளைந்த
கறையோ - சொந்தக் குறையோ?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|