முன் அனுமதி
ராஜசேகரன்
முடி வெட்டுவதிலும்
தாடி மழிக்கப் படுவதிலும்
மீசை நறுக்கப் படுவதிலும்
அழகு கூடி விடுவதாக
சமீபத்திய நாட்களில்
பிரமை கூடி விடுகிறது.
இது தொடரா பட்சம்
வயது கூடி விடுவதாய்
தேகம் பேசிக் கொள்கிறது.
மீசை அரும்பா காலம் குறித்து
பால்ய வயது பூனை மீசை குறித்தும்
ஞாபகங்கள் இல்லாமல் போனதற்கு
இந்த பாழாய் போன
மீசை தான் காரணமென்னும்
குற்றச்சாட்டுகள் எழுந்தபடியிருக்கிறது.
வருத்தமெனும் சாத்தான்
நிலை கொள்ளும் வேளையில் மட்டும்
இவன் என்னைக் கண்டு கொள்வதேயில்லை
மற்ற நேரங்களில்
என் அனுமதியின்றி
கற்பழித்து விடுகிறான்
என்று குற்றஞ்சாட்டுகின்றன
காதோர கிருதா மயிர்கள்.
எப்படிச் சொல்லி
சமாதானப் படுத்தப் போகிறேன்
என்றே தெரியவில்லை
இந்த முறையாவது
சொல்லிவிட்டுச் செய்ய வேண்டும்
காதோர கிருதாவிடமும்
பாழாய் போன மீசையிடமும்....
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|