சாளரம்
கவிவாணன்
சாளரத்தின் தேவையில்
புழுங்கும் மனிதனின்
வியர்வைத் துளிகள் வெளிப்படுத்தும்
ஒப்பனை செய்வதற்கும்
ஒப்பனை களைவதற்கும்
சாளரத்தின் முன்
கண்ணாடியோடு முகங்கள்;
சூழலையும் நிசத்தையும்
எழுதிக் கொள்கிறது
சாளரப் பதிவுகள்
திசை திரும்பி வரும் காற்றுக்குக் கூட
ஒரு சாளர வழி தேவைதான்!
மருவி... மருவி...
தன் வழிகளை தேர்வு செய்வதில்
காற்றும் சாளரமும்
நேருக்கு நேர் நிகழ்த்துகிறது
சாளரத்தின்
விழி பதித்துக் கிடக்கும்
விடலையின் ஏக்கம்
சாளரத்தின்
விரல் பதித்து
"துரு”ப் பிடித்திருக்கும்
பெரு மூச்சில்
எத்தனையாவது
இராஜகுமாரனை தேடுகிறதோ...
இந்த முதிர் பூ!
பூக்களின்
பள்ளியறையில் நுழைந்து
சாளரம் தொடும்
தென்றலுக்குத் தான்
எத்தனை... எத்தனை
மணச்சுமை
மகரந்த சுமை!
கதவு தட்டும் நேரத்தில்
வருகை புரிந்தவரின் முகம் பார்க்க
திறக்கும் சாளரக் கதவுகள்
‘இன்னார்' என்று
எழுதி வைத்துக் கொள்கிறது
சாளரத்தின் முன்பின்
முகங்களை!
உள் முகங்களும்
வெளி முகங்களும்
அற்றுக் கிடக்கும் இரவுகளில்
வெண்ணிலவின்
வெளிச்சத்தில் துயில்கிறது
சாளரம்
யாரும் எழுப்பாதீர்கள்!!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|