பீதியிலிருந்து பீதிவரை அன்பாதவன்
சூரியன் கடலில் கரைந்த
மாலையில் வான் கிழித்து வெடியோசை
கிழிந்த ரயில் பெட்டிகளிலிருந்து
சிதறின ஏதுமறியா உடல்கள்
தொலைக்காட்சி திரை மீறி
வழிந்தது குருதி நதி
மாநகரத்தின் அட்ச தீர்க்கங்களை
நிறைக்கிறது ஆம்புலன்ஸ் இயக்கம்
மருத்துவ வாசனை கூக்குரலோடு
குருதிக் கொடையால்
மனிதம் போற்றியவர்களுக்கும்
நன்றி சொல்ல இயலா
மயக்கத்தில் மன / உடல் காயங்கள்
வைத்தவர் எவர்
எப்போது, ஏன் ?
தண்டவாளங்களில் கிடக்கின்றன
புலனாகா வினாக்கள்
விழிகளை மூடவிடாமல்
துரத்தும் காயம் வழியும் குரல்கள்
குதறிப் போடப்பட்ட உடலங்களின்
காட்சி பிம்பங்களிலிருந்து எழும்
பீதியின் பேரோசை
உயிர்த்தெழுந்து ஓடுகின்றன
மின் ரயில்கள் மீண்டும்
மவுனச் சோகம் சுமந்து வெறுமையாய்
ஈமக் கடன் முடித்த வாரிசுகள்
காத்திருக்கிறார்கள் தம் தருணத்துக்காக வாளேந்தி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|