உலகக் கவிஞர் வரிசை - சில்வியா பிளாத் (1932 - 1963)
கவிதாயினி சில்வியா பிளாத் 1932ல் மஸாசுசெட்டின் ஜமைக்காவில் நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்தார். பிளாத்தின் எட்டு வயதில் அவரது தந்தையார் மரணம் அடைந்தார். தனது எட்டு வயதிலேயே முதல் கவிதையை பிரசுரிக்கப் பெற்றார். விரைவில் மிகை உணர்ச்சிக்கு ஆட்படும் சுபாவம் கொண்ட பிளாத் எல்லா விஷயங்களிலும் சிறப்பாக விளங்கினார். சிறந்த மகளாக, மாணவியாக, நேர்மையான பெண்ணாக என நற்குணங்களோடு பிரபலமானவராக சிறந்து விளங்கினார். தனது தனித் திறமைகளுக்காக நிறைய பரிசுகளையும் பெற்றுள்ளார்.
ஸ்மித் கல்லூரியில் கல்வி நிதியுதவி பெற்று பயிலத்துவங்கினார். கல்லூரி நாட்களில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதினார். எல்லா விஷயங்களையும் சீராகப் பெற்ற பிளாத்துக்கு அடிநாதமாய் சோகங்களும் துன்பங்களும் தொடரத்தான் செய்தது.
இளநிலைக் கல்லூரிப் படிப்பின் போது கோடை விடுமுறையில் அதிகபடியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தனது தற்கொலை முயற்சியின் வெற்றி விளிம்பிற்கும் சென்று விட்டிருந்தவர் காப்பாற்றப் பட்டுள்ளார். 1936ல் வெளியான "தி பெல் ஜார்'' (மணிக்குடுவை) என்னும் தன் வரலாற்றில் இந்த அனுபவங்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
எலக்டிரிக் ஷாக் மற்றும் பிசியேதெரபி சிகிச்சைக்குப் பின் அவர் குணமடைந்தார். ஸ்மித் கல்லூரியில் பட்டம் பெற்றதோடு இலக்கிய உலகிலும் வெற்றிக் கொடி நாட்டினார். 1955ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயில் புல்பிரைட் ஸ்காலர்ஷிப் பெற்றார்.
இங்கிலாந்தின் கொலோசஸ்சில் 1956ம் ஆண்டு டெட் ஹூஜஸ் என்ற ஆங்கிலக் கவிஞரை மணந்தார். தனது இருபத்தெட்டாவது வயதில் முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டார். அவர் வெளியிட்ட கவிதைகளில் அவருடைய கவிதைக்கான அர்ப்பணிப்பும், சுயமனப் பதிவும், காலப் பதிவும் ஒருங்கே வெளிப்பட்டது.
1961ல் கவிதாயினி பிளாத், கணவர் ஹூஜஸ்சுடன் இங்கிலாந்தின் டேவோனில் நிரந்தரமாக குடியேறினார். பிளாத்ஹூஜஸ் தம்பதியினர் போற்றத்தக்க கவிஞர்கள். அவர்களின் வாழ்வு கொண்டாட்டமாய் கழிந்தது. முதல் குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் அவர்களின் மணவாழ்வில் விரிசல் ஏற்பட்டது.
196263ம் ஆண்டின் குளிர் காலம் அந்த நூற்றாண்டின் மிகக் கடுமையான குளிர்காலமாக கருதப்பட்டது. பிளாத் தனது இரு குழந்தைகளுடன் லண்டனின் ஒரு சிறிய பிளாட்டில் வசித்து வந்தார். மண வாழ்க்கை முற்றிலும் முறிந்து விட்ட நிலையிலும் கடுமையான காய்ச்சல் நோயாலும் அவர் அவதிப் பட்டார். அவரது வாழ்வின் கஷ்டங்கள் அவரை எழுதத் தூண்டின. அதிகாலை நான்கு முதல் எட்டு மணிக்குள் தனது குழந்தைகள் விழித்துக் கொள்ளுமுன் அவர் எழுந்து தனது எழுத்துப் பணிகளை செய்வார். பல முறை ஒரு நாளில் ஒரு கவிதையை மட்டுமே முடித்தும் உள்ளார். இந்தக் காலக் கட்டத்தில் அவர் எழுதிய கவிதைகளில் ஆழமாகவும் மிக அழுத்தமாகவும் தனது மன உணர்வுகளை பதிவு செய்துள்ளார். அவரது சில கவிதைகளில் மரணம் என்பதை கொடூரமானதாகவும், வசீகரமானதாகவும் உணரும் படியான ஒரு மனவழியாகவும் பதிவு செய்துள்ளார்.
பிப்ரவரி 11, 1963ல் பிளாத் தனது முப்பதாவது வயதில் சமையல் எரிவாயுவை திறந்து விட்டு தனக்குத் தானே நெருப்பு வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பொழுது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது இரு குழந்தைகளின் அறையின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து அவர்களுக்கு ஆபத்தில்லாமல் ஆக்கி உள்ளார்.
அவரது மறைவுக்குப் பின் இரண்டாண்டுகள் கழித்து அவரது இறுதி காலக் கட்ட கவிதைகளின் "ஏரியல்' என்ற தொகுதி வெளியாகியது. அதனைத் தொடர்ந்து 1971ல் ""குராசிங் த வாட்டர்'' மற்றும் ""வின்டர் டிரிஸ்'' என்ற தொகுதிகள் வெளியாகின. 1981ல் சிலிவியா பிளாத்தின் மொத்த கவிதைகளின் தொகுதி வெளியானது. இதனை தொகுத்தவர் வேறு யாருமல்ல அவரது கணவர் கவிஞர் டெட் ஹூஜஸ் தான்.
உயிர்த்தெழல் சிறப்பு
என்னிடம் மகிழ்ச்சியில்லை
என்னிடம் வார்த்தைகளில்லை
கண்ணீர் இல்லை
எனக்குள் இருக்கும் இதயம்
கல்லைப் போல
அதில் நம்பிக்கையும்
அச்சமும் பூசட்டுள்ளது
இடதே பார்த்தேன்
வலதே பார்த்தேன்
தனியாகவே வசிக்கிறேன்
கண்கள் சொருகுகின்றன
கவலையால் மங்குகின்றன
முடிவிலா மலை முகடுகள்
கண்டதேயில்லை
உதிருமோர் இலையைப்
போல் என் வாழ்வு
ஓ! கடவுளே!
விரைவாக்கு என் முடிவை.
***********
என்மேல் பாய்கிறது சிறுத்தை ஒன்று
என் மரணம் அதனால் அமையும்
அதன் வேகத்தை தடுக்க இதயம் விரிப்பேன்
அதன் தாகம் தணிக்க ரத்தம் கொடுப்பேன்
பற்களாலும் நகங்களாலும் பிறாண்டி வைக்கும்
இதுவும் போதாதென்று வேட்டைக்குப் போகையில்
இருட்டறையின் கதவுகளை மூடிவைப்பேன்
அனைத்து கதவுகளையும் தாழிடுவேன்
ரத்தம் உறைகிறது காதுகளில் ஒலிக்கிறது
படியேறுகிறது சிறுத்தை
மேலே வருகிறது வருகிறது மேலே..
தமிழில் : ஆனந்த செல்வி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|