Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

உணர்வலைகளின் தூரிகைத் தீட்டல்
அன்பாதவன்

வாழ்க்கை சில நேரங்களில் மிகக் கொடுமையானது. வாழ்வின் நியதிகளோ மிகக் கடுமையானது. தம் சொந்த மண்ணை உறவுகளை பழகியப் பிரதேசங்களை விட்டு விலகி புலம்பெயர்ந்து வாடும் வாழ்க்கை துயரங்களிலும் சோகமானது.

ஈழ மக்களோ சாபத்தையே வரமாய் வாங்கி வந்தவர்கள். உறவுகளை, ஊரை, எல்லாவற்றையும் உதறி, உயிர்வாழ்தல் எனும் நோக்கத்தோடு இதயத்தை ஈழத்திலும் உடலை மட்டுமே உலக நாடுகளில் ஏதாவதொன்றிலுமாய் வாழும் வாழ்வு வாழ்வாகாது.

இத்தகைய சூழலிலும் உயிர்த்துடிப்புள்ள இலக்கியங்களை உருவாக்குவதில், ஈழத் தமிழ் படைப்பாளிகளே முன் நிற்பதை மறுக்க வியலாது எவராலும்.

ஆழியாள் அப்படி ஒரு படைப்பாளி! வேற்று வெளியில் வாழ்ந்தாலும் (!) தனது பூர்வீகம் குறித்த பதிவுகளையும், சமகால வாழ்வியல் சூழலையும் கவிதைகளாய்ப் படைப்பதில் சமர்த்தர் என்பதை நிரூபிப்பதாய் துவிதம் கவிதைத் தொகுதி துவிதம் என்ற சொல்லுக்கு இரண்டு, இருமை எனப் பொருள் தருகிறது அகராதி. தனது இரண்டாவது தொகுப்பென்பதால் துவிதம் எனப் பெயரிட்டிருப்பாரோ ஆழியாள்!

“துவிதம் தொகுப்பில் இடம் பெற்ற கவிதைகளில் பெரும்பாலானவை ஆஸ்திரேலியா, வாழ்புலத்தில் உருவானவை. இருப்புக்கும் வாழ்வுக்கும் இடையில் எதிர்வினை புரியும் எழுத்து தன்னளவில் தனக்கேயுரிய தர்க்க முறை அறிதல் முறைகள் மொழியைக் கண்டமையும் அனுபவங்களை அணுகும் கோணமும் தனித்துவமாக வெளிப்படும். இந்த நீதியில் ஆழியாள் கவிதைகள் புதியத் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன” என முன்னுரைக்கும் மது சூதனனின் வார்த்தைக் கவனங்களோடு துவிதம் தொகுதிக்குள் நுழைபவருக்கு காத்திருக்கின்றன புதிய கவியனுபவங்கள்!

‘கலங்கரை விளக்கத்து / இரவுக் காவலாளியாகவும்
ஆறடிக் குழியுள் / மௌனம் புடைசூழ இறக்கப்பட்ட
பிணமொன்றைப் போலவும் / தனித்தே
மிகத் தனித்தே இருக்கின்றேன்’

என தன்னிலை விளக்கம் அளிக்கும் கவிஞரின் மனநிலையை வாசகன் எளிதாய்ப் புரிந்து கொள்ளவியலும்! எத்தனை பெரிய தேசத்திலும் நம்மைப் பகிர ஆளில்லாவிடில் தனிமை! கொடுமையான தனிமை!

‘அந்த யாரோ யாராயிருக்கும்
ஆணா பெண்ணா அடுத்தபாலா
யாரோவை யார்
வேலை ஏவியது
யாரோவுக்கு சம்பளம் கொடுப்பது யார்?
அது எவ்வளவு? போதுமா?’

அந்த யாரோ தான் இத்தகைய பிரசனைகளுக்கும் காரணம்! இணைந்து வாழ விரும்பும் ஈழ சிங்கள இன மக்களை மொழியின் பெயரால் பிரிப்பது யாரோ! ஷெல் வீச்சுகளினால் புகலிடம் தேடி ஓட வைத்தது யாரோ!

சமாதானத்தின் காலத்தில் பூமியைத் தோண்ட எலும்புகளே கிடைக்கும் தேசத்தில் கவிதை அழகியலும் மரணம் சார்ந்ததாகவே இருக்கும்!

‘கடை இரு
வெறும் நூற்றாண்டுகளின் மேல்
அரிதார நிலம் பூசி
நட்சத்திரங்கள் ஓர் ஆறை
அள்ளி அதில் தெளித்து
உச்சிக் கம்பத்தில் பறக்க விட்ட
வெள்ளை விளை நீலம் இது’ என தான் வாழும் கங்காரு தேசத்தை காட்சிப்படுத்தினாலும் ஆழியாளுக்கு தான் யார் .... தன் நிலை என்ன என்பது புரிந்தே இருப்பதை பதிவு செய்யும் வரிகளிவை!

‘பிறந்த வீட்டில் கறுப்பி
அண்டை நாட்டில்
சிலோன் அகதிப் பொண்ணு
இலங்கை மத்தியில்
தெமள
வடக்கில் கிழக்கச்சி
மீன் பாடும் கிழக்கில்
நானோர் மலைக்காரி

மலையில்
மூதூர்க் காரியாக்கும்

ஆதிக்குடிகளிடம்
திருடப்பட்ட தீவாயிருக்கும்
என் புகுந்த நாட்டில்
அப்பாடா!
பழையபடி நான் கறுப்பியானேன்! ’

புலம்பெயர்ந்து புகுந்த தேசத்தின் அரசியல் விளையாட்டுகளையும் விமர்சனம் செய்யும் போது ஆழியாள் உள்ளிருக்கும் கவிஞர் மிக யதார்த்தமாக வெளிப்படுவது சிறப்பு.

உளைச்சலில் தவிக்கும் மனநிலையிலும் ‘அந்தி’யை ‘முன்னிரவுக் குயில் கிட்ட முட்டை பொறிகிறது.’ என அழகியலோடு வெளிப்படுதல் கவியுணர்வு கொண்டவர்களுக்கே சாத்தியம்.

தானறிந்த, தானுணர்ந்தவற்றை கவிதைகளாக செதுக்கியிருக்கும் ஆழியாளின் சிறப்பு சொற்சிக்கனம்! மிகச் செறிவாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கொண்டு கவிதை நெய்திருக்கும் ஆழியாள் அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதையும் பதிவு செய்யத் தான் வேண்டும்.

புலம் பெயர் ‘வாழ்வு என்பது சுயம் குறுக்கி வாழ்வது! வாழ்வது’ என்று சொல்வது கூட நேர்மையாகாது! இருப்பது(ஒதண்t ஆஞுடிணஞ்) அத்தகைய இருப்பில் உணர்வலைகளின் வேகத்தோடு யதார்த்தம் மோதும் போது ‘காமம்’ போன்ற கவிதைகள் பிறக்கத்தான் செய்யும்.

‘உயரும்
மயைடிவார மண் கும்பிகளுள்
திணறி அடக்கமுறும்
மனித மூச்சுகளும்
பள்ளங்களின் ஆழப்புதைவில்
அலறி ஓயும் குரல்களின்
இறுதி விக்கல்கலும் உண்டு இங்கு
அவருக்கு செவிகள் உண்டு
இருளுக்கு கூர் விழிகளும் உண்டு
பீறிக் கசியும் ரத்தமாய் மேலும்
உண்டு இன்னொன்று
அவனுக்கு .’

உள் நாட்டு யுத்தம், ஈழப் படைப்பாளிகளின் படைப்பாக்கத் திறனை திசைமாற்றி விட்டதை பல்வேறு புலம் பெயர் நூல்கள் பறைசாற்றுகின்றன.

‘சுருங்கிய வெறுங்கைகளே
வெம்பி அல்லாடிச் சொல்லப்
போதுமானதாய் இருந்தன
வேண்டாம் போர் என்று,’

துப்பாக்கி முனையில் அதிகாரம் பிறக்கும்! கவிதை பிறக்குமா? அன்றி துவக்குகள் தான் கவிதை ரசிக்குமா? விமான நிலைய சந்திப்பில், உறவுகளைக் கண்டு கவிதை எழுதி ஆற்றுப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்! வேறென்ன இயலுமிப்போது ...?

துவிதம் (கவிதைகள்),
ஆழியாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com