ஜன்னலைத் திறந்தவுடன் வீசும் இளம் வெயில் அன்பாதவன்
"இன்றைய புறப்பாடல் சமூகம் சார் விஷயங்கள் கவிதையில் இடம் பெறுவதைச் சிறப்பாகச் சொல்ல வேண்டும். வாழ்வு சார்ந்த நிகழ்வுடன் வார்த்தைப்படுத்தப் பெற வேண்டும். உன் உலகத்தைப் பேசுகிற அளவுக்கு வெளியுலகத்தையும் கவிதை காட்ட வேண்டும். தமிழில் நீண்ட காலமாகவே தமிழ்க் கவிதை சமூக நிகழ்வுகளைக் கண்டு கொள்ளாமலேயே இருந்து விட்டது. இனியும் அவ்வாறு இருத்தலாகாது. உள்ளும் புறமும் சேர்ந்து தானே முழு வாழ்வு'' என்கிற கவிஞர் விக்ரமாதித்யனின் ஆதங்கத்தை தீர்த்து வைப்பதாய் வெளி வந்திருக்கிறது. தோழர் நா.வே. அருள் வழங்கியிருக்கும் கவிதைத் தொகுதியான "ஆயுதம்'
"ஆயுதம்' என்ற தலைப்பு, தன்னுள் தவறுகளை கொண்டிருப்போர்க்கு அச்சமூட்டக் கூடும்.
தொகுதி முழுவதுமான எந்த ஒரு கவிதையிலும் வன்முறையை விதைக்காமல் "ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம்'' என்ற முண்டாசுக் கவிஞனின் கோப வரிகளுக்கான விளக்க உரைகளாக, தாம் சந்தித்த, தம்மை பாதித்த அனுபவச் சாரல்களை சொற்குப்பிகளில் பிடித்து பாதுகாத்து தனது வார்த்தைகள் மூலம் வழங்கியிருக்கிறார் நா.வே. அருள்.
‘கூவம்’ என்றத் தலைப்பிலானக் கவிதை கோப உக்ரத்தோடு கேட்பதுதான் தூய்மையில் தொடங்கிய சிறு நதியை சிதைத்து அசுத்தக் குப்பையாய், துர்நாற்றக் கழிவு நீர் தொட்டியாய் மாற்றியது யார்?
தொகுப்பின் பெரும்பாலானக் கவிதைகள் சமூக நிகழ்வுகளின் மீதான தெறிப்பான விமர்சனங்களாக வந்திருப்பது அருள் சார்ந்திருக்கும் இலக்கிய அமைப்பின் வழிகாட்டுதலை வாசகன் உணரச் செய்கிறது.
உதாரணக் கவிதையாய். "ஊசி வாங்கலையோ ஊசி'' குருவிக்காரர்கள் எனும் நாடோடி மக்களைப்பற்றி பாட வந்த கவிதை இப்படி முடிகிறபோது அருளின் அரசியல் புரிந்து வரும் இவர்கள் பூனைகளை வேட்டையாடிப் புசித்து வருகிறார்கள். தானியக் கிடங்குகளிலோ பெருச்சாளிகள். பலூன்களின் தலைநகரம் சிறார்களிடம் வினா விதை விதைப்பதோடு, மரபாக யோசிக்கும் பெரியவர்களையும் சிந்திக்க வைக்கிறது.
நம்பிக்கையிலும் பக்க விளைவு இல்லாத பக்குவமான வைத்தியம் செய்த பாட்டி நவீன மருத்துவ மனையில சிகிச்சைபலனின்றி செத்து போகும் சோகம் சொல்கிற "பாட்டி வைத்தியம்'' கவிதைக்குள் ஒளிந்திருக்கிறது ஒரு குறும்படத்துக்கான திரைக்கதை, "அம்மா சுமந்த நெருப்பும், பக்கத்து வீடு கவிதையும் உள்ளடக்கத்தில் ஒன்றாகவே இருக்கிறதெனினும் வயத வந்த மகளின் வாழ்வு குறித்த கவலை சமகாலத்தில் வீட்டுக்குள் உட்கார்ந்து அதிகாரம் செய்யும் தொலைக் காட்சி உருவாக்கும் தொல்லைகள் குறித்த கூடுதல் விமர்சனமாகவும் இருக்கிறது.
கோலமிடுவது ஒரு மரபு மட்டுமல்ல ! தமிழ் மகளிரின் கலையார்வம், ஓவிய நுணுக்கம் கூடவே மன அவஸ்தைகளுக்கான ஒரு வண்ண வடிகால். வெள்ளி ஓவியங்கள் என்ற கவிதையின் அழகியல் வாசிப்பவரை ஈர்க்க செய்வது குறிப்பாக இறுதிவரிகள் கோலங்கள் / தரையில் கிடக்கும் மின் கம்பிகள் / மிதித்தால் அதிர்கிறது / என் இதயம் புவி குப்பைத் தொட்டியா கவிதை மரபு வழி நின்று சூழலியல் குறித்து கவலைப்படுகிறது.
"அஞ்சனாபுரம்' கவிதையோ குழந்தைத் தொழிலாளர் குறித்து சோகத்தை பதிவு செல்கிறது. "சாதி சட்டைப் போன்றது அன்பு தோலை போன்றது' என்ற குலம்.. பின் குசலம் கவிதையில் பிறர் வலியை உணரும் கவிஞர் வண்ணான் கல்லா' (பக். 83) என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது அருள் நீங்களுமா? என்று கேட்கத் தொன்றுகிறது.
வண்ணான், தோட்டி போன்ற சொற்கள் வழக்கொழிந்து போனாலும் கவிஞர்கள் தோண்டி எடுத்து தூக்கில் போடுவது நிற்கவே இல்லை என்பது பெருந்துக்கமன்றோ !
‘தெரு' என்கிற சின்னஞ்சிறு கவிதைக்குள் ஒளிந்திருக்கிற பெரிய செய்தி. சக மனிதர்களுடனானத் தொடர்பு, சந்திப்பு, அமைப்புகளில் பங்களிப்பு எனத் தனிமனிதன் ஒருவன் Extravert மனநிலையோடு சமூக மனிதனாய்ப் பரிணமிப்பதற்கு முதல்படி தெரு. ‘அருள்’ யார் என்பதை அடையாளங் காட்டுவதிந்தக் கவிதை.
நம் தலைக்குமேல் கத்தியாய் சுழலும் பெரும் பயங்கரம் ஒன்றினை இலகுவான சொற்களால் படம் பிடித்திருப்பது அருளின் கவிதை நெய்யும் ஆற்றலைக் காட்டுகிறது. (பக். 29)
‘இது பொம்மைகளின் கதை' கவிதையின் உத்தி புதிது
"பக் 5ல்'' அணிந்துரைக்கும் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜியின் சொற்களில் சொன்னால் "கவிஞர் அருள் ஜன்னலை திறந்து வைக்கிறார். வெயில் விழுந்து கொண்டிருக்கிறது.'' 'ஆயுதம்' வாசிப்பவர்கள் வேண்டிய அளவு இளம் வெப்பத்தை இரசிப்பார்கள்.
ஆயுதம்- நா. வே. அருள்
பாரதி புத்தகாலயம், சென்னை.
விலை ரூ. 50/
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|