இரவின் கண்கள் - தபசி
மிகப்பெரும்
கண்காணிப்பாளனாக
காத்திருக்கிறது இவ்விரவு
மாத்திரை போட்டுக் கொண்டு
மனைவி பக்கத்தில் வந்து
படுத்துக் கொள்வோரை
கண்காணிக்கிறது அது.
தன் ஆண்மையை
ஆக்ரோஷமாக அறிவிக்கும்
பலரின் பிதற்றல்களை
உற்று நோக்குகிறது அது
ஒரு பைத்திக்காரனைப் போல இயங்கும்
அவர்கள் வெறிச் செயல்களை
வெறுமனவே வேடிக்கை பார்க்கிறதது
விதையே ஊன்றாமல்
விருட்சம் வளர்ந்துவிட்டதாய்
கற்பிதம் கொள்ளும்
பலரின் பாவனையை
பரிதாபமாகப் பார்க்கிறது
ஓர் இரவுக்குத் தெரியும்
எப்படி ஓர் அதிமேதாவி கூட
அடி முட்டாளாக மாறிவிடுகிறதென்பது
உடலின் வன்முறை
கட்டவிழ்ந்து துள்ளும் சாகசமும் பின்
எதுவுமின்றி அது சிறுத்துப் போகும்
நகைச் சுவையையும் நன்கறியுமது
ஓர் இரவு எதுவும் செய்வதில்லை
சும்மாவேனும் வேடிக்கை பார்க்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|