Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மே 2008

சாவுக்குப் பின்னும் சாதியை நிலைநாட்டும் சடங்குகள்
தந்தை பெரியார்

மனிதன் தன் வாழ்க்கையில் குழந்தைப் பருவம் முதல் கிழப்பருவம் வரை அடையும் தன்மையும் இயற்கையின் தத்துவமேயாகும். அவனுடைய அங்கங்கள் (உறுப்புகள்) குழந்தைப் பருவம் முதற்கொண்டு சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே வருகின்றன. அந்த வளர்ச்சி அவன் உண்ணும் ஆதாரங்களையும் மன நிம்மதியான வாழ்க்கையையும் பொறுத்ததாகும்.

இப்படி வளர்ச்சியடையும் உடல் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வந்தவுடன், அதன் பிறகு வளருவது நின்று விடுகிறது. பிறகு அவ்வுறுப்புகளுக்குக் கொடுக்கப்படும் சக்திகளுக்கு ஏற்றவாறு இயங்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அந்த உறுப்புகள் எத்தனை நாளுக்குத்தான் அப்படியே இருக்க முடியும்? அவையும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை இயங்கும் சக்தியைக் கொண்டவைகளாக இருக்கின்றன. நாளடைவிலேயே அங்கங்களுக்குள்ள சக்தி சிறிது சிறிதாகக் குறைவதற்கு ஆரம்பிக்கிறது. இப்படியே ஒவ்வொரு அங்கமும் பலவீனம் அடைந்து வரும் காலத்தில் மனிதன் கிழப்பருவத்தை அடைந்து கொண்டே வருகிறான்.

கிழப்பருவம் வளர்ச்சியடைந்து கொண்டே வந்து, முற்றிலும் கிழத்தன்மை அடைந்தவுடன், உடலின் உறுப்புகள் யாவையும் ஒருவித சக்தியும் இன்றி அங்கும் இங்கும் அசையக்கூட போதிய சிறிதளவு பலம்கூட இல்லாமல் போய்விடுகின்றன. அத்தன்மை வந்தவுடன் மனிதன் உடலினுள் இருக்கும் உறுப்புகளும் அதே தன்மையை அடைந்து உண்ணும் உணவை ஜீரணிக்கவும் அதைப் பக்குவம் செய்து சத்தைக் கிரகிக்கும் உறுப்புகள் போதிய பலமும் இன்றிப் போய் உணவும் செய்வதற்கும் இல்லாமல் போய்விடுகிறது. பின்பு மனிதனுக்கு இறுதியில் எஞ்சி நிற்பது காற்று ஒன்றுதான். அக்காற்று மூக்குக்கும் சுவாச உறுப்புகளுக்கும் இடையில் உள்ள துவாரத்தின் வழியே போய்வந்து கொண்டிருக்கிறது.

சுவாசிக்கும் காற்றில் மனிதன் பிராணவாயுவை உட்கொண்டு கரியமிலவாயுவை வெளியிடுகிறான். அந்த ஆராய்ச்சிப்படி இதுவரை அவன் பிராண வாயுவைக் கிரகித்து கரியமில வாயுவை வெளியிட்டு வருகிறான். இந்தத் தன்மையும் ஏற்பட சுவாச உறுப்புகள் பலமுடன் இருந்து இயங்கினால்தானே முடியும்? ஆனால் இயற்கையின்படி எல்லா உறுப்புகளும் பலவீனம் அடைந்தது போல் சுவாச உறுப்புகளும் பலவீனம் அடைய ஆரம்பிக்கின்றன. அவைகளுக்குப் போதிய அளவு அதாவது ஒரு சிறிது அளவு காற்றையாவது இழுத்து கிரகிக்கும் பலம் உள்ள வரை மனிதன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறான் என்று கூறுகிறோமே அந்த நிலையை அடைகிறான்.

இறுதியில் அந்தப் பலம்கூட இல்லாமல் சுவாச உறுப்புகள் முற்றிலும் பலவீனம் அடைந்து விடுவதால் சிறிதுகூட காற்றைச் சுவாசிக்க முடியாமல் போய் விடுகிறது. அப்போதுதான் மனிதன் இறந்து விடுகிறான் என்று சொல்லப்படுகிறது. அவன் உடலில் காற்று போய் உடல் உறுப்புகளையும் இரத்தத்தையும் சுத்தம் செய்து கொண்டு வந்ததன் காரணமாக உடலில் எந்தவிதக் கெடுதலும் ஏற்படுவதில்லை. சுவாசிக்கப்பட்ட பிராணவாயு உடம்பில் உள்ள இரத்தத்தைச் சுத்தம் செய்வதனால் சுத்தம் செய்யப்பட்ட இரத்தம் பரவிய உடலின் தசைகள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன.

ஆனால் மனிதன் இறந்தவுடனோ சுவாசம் இல்லை. அதனால் உடலின் தசைகள் கெடுவதற்கு ஆரம்பிக்கின்றன. அந்தப் பிணம் எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடிக் கெட்டுப் போய்விடும். அதைத் தகுந்தபடி எரித்துவிடாமலோ இருக்கப்பட்டுவிடுமானால் அந்த உடல் அழுகிக் கொழகொழுத்துப் போய் சகிக்க முடியாதபடி துர்நாற்றமடிக்க ஆரம்பிக்கிறது. அதற்கென்றே உடலைப் புதைத்தோ அல்லது எரித்தோ விடுகிறார்கள். இப்படி மனிதன் பிறந்தது முதல் இறந்ததுவரை உண்டாகும் சம்பவங்கள் அத்தனையையும் நேரில் காணுகிறோம். சுவாசிக்கும் காற்று நின்றவுடன் உடலை அடக்கம் செய்கிறார்கள்.

இத்தன்மை மனிதன் என்று சொல்லப்படுபவர்கள் அத்தனை பேருக்கும் அவ்வித முடிவுதான். தாழ்ந்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இதே நிலைதான். மேல்ஜாதி, கடவுளுக்கும் அடுத்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இந்நிலைதான். அவன் யோக்கியனானாலும், முனிவரானாலும், சித்தரானாலும், மகாபக்திமான் ஆனாலும், கடவுள் அவதாரம் ஆனாலும், தியாகி ஆனாலும், மற்றும் மந்திரியானாலும் நாட்டின் தலைவன் என்பவன் ஆனாலும், இன்னும் புலவன், சிற்பி, பாடகன், ஓவியன் மற்றும் எப்பேர்பட்ட வெங்காயமானாலும், இந்த நிலையை அடைந்தே தீர வேண்டும்; இது இயற்கையேச் ஆகும்.

இப்படி மனிதனுக்கு மட்டுமல்ல; உயிர் உள்ளது என்று எவை எவை சொல்லப்படுகின்றனவோ அவைகள் அத்தனையும் இப்படிப்பட்ட இயற்கைத் தன்மையை அடைந்தே தீருகின்றன - மரம் பட்டுப் போய்விட்டது என்றால், அது வளர்ச்சி இன்றிப் போய்விட்டது என்பது பொருள். அதுமுதல் அந்தப் பட்டுப்போன மரம் காய்ந்துபோக ஆரம்பிக்கிறது; ஒருவித ஈரப்பசையும் இன்றி வெற்றுக் கட்டையாக ஆகிவிடுகிறது. இப்படியே உயிருள்ளது என்பவைகள் அத்தனையும் செத்துப் போகும் நிலையை அடைகின்றன.

செத்துப் போகுதல் என்பது சத்துப் போய்விடுதல் என்பது பொருள். வளருவதற்கு வேண்டிய சத்துக்கள் என்னென்னவோ அத்தனையும் இல்லாமல் போய்விட்ட பிறகு, அதாவது சத்துப்போய்விட்ட பின் அதை சத்துப் போகுதல் என்பது செத்துப் போகுதல் என்று ஆகி இருக்கிறது.

மரம் செத்துப் போனவுடன் அதை அடுப்பு எரிக்க உபயோகிக்கிறோம். நாய், மாடு, கழுதை செத்தவுடன் புதைக்காவிடில் அழுகிப் புழு, பூச்சிபிடித்து விடுகிறது. இறுதியில் அதுவும் மண்ணுடன் மக்கிப் போய்விடுகிறது. செத்துப்போனது என்ற பிறகு அதைப் பற்றி ஒன்றுமே கிடையாது. அதன் முடிவு அத்துடன் சரியாகி விடுகிறது. இதை நாம் கேள்விப்படவில்லை; சாஸ்திரத்தில் படிக்கவில்லை. கடவுளும் வெங்காயமும் கூறியதாக நான் உங்களிடம் கூறவில்லை. நேரில் கண்டவை; நீங்களும் நேரில் காணுகிற விஷயமே அன்றி, நான் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று சொல்லவில்லை; எனவே இந்த முடிவுக்குப் பிறகு என்ன இருக்க முடியும்? ஒன்றுமே கிடையாது. அத்துடன் வாழ்க்கை இறுதியடைந்து போய்விடுகிறது.

பார்ப்பனன் தங்கள் வாழ்க்கைக்குச் சாதகமாகப் பலவழிகளைக் கையாளுகின்றான். மனிதன் இறந்தவுடன் அந்த உடலை அவரவர் மதப்படி, அதிலும் மதத்தின் உட்பிரிவாக அமைக்கப்பட்டுள்ள ஜாதிமுறைப்படி எரிக்கவோ, புதைக்கவோ வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறான். அதன்படி மக்களும் இது எங்கள் ஜாதி வழக்கம் என்று கூறிக் கொண்டு, புதைப்பவர்கள் புதைப்பதும், எரிப்பவர்கள் எரிப்பதுமாக இருக்கின்றனர்.

இதனால் என்னவென்றால் அந்தந்த ஜாதிக்காரன் அவனுடைய பின்சந்ததிகள் இன்னா ஜாதியைச் சேர்ந்தவர்கள் அவர்களும், அதே முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற முறையை நிலைநாட்டுவதன் மூலம் நடத்தப்படுகின்றன. எனவே மனிதன் இறந்த பின்னும்கூட பார்ப்பான் மதப்பிரச்சாரத்திற்கென்று இன்னின்ன பழக்க வழக்கம் என்று ஏற்படுத்தி இருக்கிறான். அத்துடன் விடவில்லை. செத்துப் போனவுடன் உடலிலிருந்து ஆத்மா என்று ஒன்று பிரிந்து விடுகிறதாம்.

அது இங்கே தங்காமல் நேராக மேல்லோகம் போகிறதாம்! இவ்வளவு இயற்கைத் தன்மைகளையும் கண்டபின் ஆத்மா என்பது எங்கே இருக்கிறது? அது எப்படிப் பிரிகிறது? என்றால் அது உருவம் அற்றது, கண்ணுக்குத் தெரியாதது என்று கூறினார்கள். அந்த ஆத்மா நேராக மேல்உலகம் சென்று அங்கு அது இங்கு செய்த பாவபுண்ணியத்துக்கு ஏற்றபடி தண்டனை பெறுகிறதாம். பாவம் செய்த ஆத்மா நரகத்தில் தள்ளப்படுகிறதாம். புண்ணியம் செய்த ஆத்மா மோட்சத்தில் தள்ளப்படுகிறதாம்.

இங்கேதான் உடல் நம் கண்முன்பாகவே எரிக்கப்பட்டது அல்லது புதைக்கப்பட்டது. உருவம் அற்ற ஆத்மா எப்படி அங்கே தண்டனை பெறும்? என்று கேட்டால் அந்த ஆத்மாவுக்கு வேறொரு உடலை மேல் உலகத்தில் கொடுக்கிறார்களாமே! அந்த உடலை இந்த ஆத்மா உடுத்திக் கொண்டவுடன் மனித உருவம் அடைகிறதாம். அதே உடலுக்கு அங்கே தண்டனை கிடைக்கிறதாம். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பாவமோ புண்ணியமோ செய்த உடல் நம் கண்முன் இங்கே இருக்க, அங்கே வேறொரு உடல் பாவத்தின் தண்டனையையோ, புண்ணியத்தின் சுகத்தையோ அனுபவிக்கிறதாம். அப்படியானால் உண்மையில் பாவம் செய்த உடலைத் தண்டிக்க வேண்டும்; உண்மையில் புண்ணியம் செய்த உடல் சுகமடைய வேண்டும். இதைவிட்டு விட்டு, ஏதும் அறியாத வேறொரு உடலை வதைப்பதும், சுகப்படுத்துவதும் என்ன நியாயம் என்று கேட்டால் உடனே இவன் நாத்திகம் பேசுகிறான் என்று தான் சொல்லத் தெரியுமே தவிர தக்க பதில் ஒன்றும் கூற முடியாது.

மறுபடியும் அந்த ஆத்மா உலகில் உருவம் எடுத்து வருகிறதாம்! அந்த உருவம் பாவ புண்ணியத்திற்கு ஏற்றபடித் தக்க உருவம் அடைகிறதாம். அதில் ஃபஸ்ட்கிளாஸ் (முதல்தரம்) உருவம் என்று சொல்லப்படுவது பார்ப்பன உருவம். மற்றவை எல்லாம் அதற்குக் கீழ்ப்பட்டவை. மனித உருவத்திலேயே பார்ப்பான் தவிர்த்த மற்ற கீழ்ஜாதி உருவங்கள் தரம் பிரித்து உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதற்குத் தகுந்தபடி அமைக்கப்பட்டிருக்கின்றன. மனித உருவத்துக்குக் கீழ் மிருக உருவம்! அதிலும் தரம் பிரித்து அமைத்து மற்றபடி மரம், செடி, கொடி இப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதை ஏன் கூறுகிறேன் என்றால் அயோக்கியப் பார்ப்பனர்கள் தங்களை மட்டும் பெரும் புண்ணியாத்மாக்கள், மற்றவர்கள் எல்லாரும் பெரும் சண்டாளர்கள் என்பதை வாய்விட்டுக் கூறுவதற்குப் பதிலாக இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதைக் கூறவேயாகும். இப்படி நம்மை எந்த விதத்தில் இழிவுபடுத்த வேண்டுமோ அம்முறைகளில் எல்லாம் இழிவுபடுத்தி இருக்கிறார்கள்.

அந்த ஆத்மாதான் மேல்லோகத்தில் புண்ணியத்திற்கேற்றபடி மோட்சத்திலேயோ அல்லது பாவத்திற்கேற்றபடி நரகத்திலேயோ தள்ளப்பட்டிருக்கிறதே, பிறகு இங்கே எப்படி வந்தது? அதனதன் நல்வினை தீவினைக்குத் தகுந்தபடி மோட்சம் நரகத்தில் போய்ச் சேருகிறது என்ற பிறகு இங்கே எப்படிக் குதித்து வரமுடியும்? அப்படியானால் மோட்சத்திலிருந்து தப்பி ஓடிவந்ததா? நரகத்தை விட்டு ஓடிவந்து விட்டதா? அப்படி அங்கு போய்ச் சேருகிற ஆத்மா சாந்தியடைய இங்கே பார்ப்பானுக்குத் தானதர்மம் செய்தால் போதுமாம்! உடனே அது அவர்களுக்குப் போய்ச் சேருகிறதாம்! அதை அடைந்த அவர்கள் சுகம் அடைகிறார்களாம்! என்ன முட்டாள்தனம் என்பதைச் சிந்திப்பதே இல்லை. 100க்கு 100 முட்டாள்களாக இருப்பவர்கள்தான் இன்னமும் இதை நம்பிக் கொண்டு பார்ப்பானுக்கு அள்ளிக் கொடுக்கின்றனர். கையில் பணம் காசு இல்லை என்றால்கூட கடன் வாங்கியாவது திவசமும் கருமாதியும் செய்கிறான்.

இப்படித் திவசம் செய்வது குறிப்பிட்ட நாள் வரையிலும் என்று கூட இல்லை. இவன் உயிர் இருக்கும் நாள்வரை அவன் தகப்பனுக்குத் திவசம் செய்கிறான். பார்ப்பான் கூறி இருக்கிறபடி மேலே சென்ற ஆத்மா பிறகு என்ன உருவம் எடுத்ததோ தெரியவில்லை. அந்த உருவம் எடுத்த பிறகும் இவன் திவசம் செய்தானாகில், பார்ப்பான் கூறுகிறபடி அந்த ஆத்மா எங்கே இருந்தாலும் அந்த தானப் பொருள்கள் போய்ச்சேர வேண்டும். அப்படி இது வரை யார் அடைந்திருக்கிறார்கள்?

அப்படியே அவன் கூறுவது உண்மை என்றாலும் இக்கூட்டத்தில் உள்ள அத்தனை பேரும், ஏன் இவ்வூரில் உள்ள அத்தனை பேரும் மற்றும் இந்நாட்டு மக்கள் அத்தனை பேரும் இதற்கு முன் ஏதாவது ஒரு பிறவியில் இருந்திருக்க வேண்டும். நாம் இல்லை என்றாலும் மற்ற சீவராசிகளாவது முதலில் மனித உருவத்தில் இருந்திருக்க வேண்டும். அவைகள் இறந்தவுடன் அதனதன் பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள். அத்தனை பேருக்கும் இல்லை என்றாலும் ஒரு சிலருக்காவது தன்னுடைய பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள்; அப்படிக் கொடுப்பது இப்போது இவர்களுக்கு வந்து சேரவேண்டும். நியாயப்படி அதுதான் முறையாகும்.

ஆனால் இதுவரை அப்படி யாரும் அடைந்ததாகக் கிடையாது. கேள்விப்பட்டது கூட இல்லை. எனவே பார்ப்பானுக்குக் கொடுத்த பின் அதை ஜீரணித்து விடுகிறான். பிறகு எங்கே இவன் அப்பனுக்கு மேல் உலகத்துக்கு? போக முடியும்? அப்படியே பார்ப்பான் மேல் உலகத்துக்கு அனுப்பும் சக்தி கொண்ட மந்திரம் கொண்டவனாக இருந்தால் இன்றைக்கு எவ்வளவோ காரியத்துக்குப் பயன்படும். ஆனால் அத்தனையும் புரட்டு என்பதற்கு நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.

ஒரு பார்ப்பனனிடம் ஒரு மடையன் திவசம் கொடுத்துக் கொண்டிருந்தானாம். அப்போது பார்ப்பனன் சொல்படி அந்த மடையன் ஆற்றில் உள்ள தண்ணீரைக் கையால் அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தான். அதன் காரணம் என்னவென்றால் இவன் இறைக்கும் தண்ணீர் மேல் உலகத்திற்குப் போய் இவனுடைய முன்னோர்களுக்குப் பயன்படுகிறது என்பதாகும். அந்த அடிப்படையில் புரோகிதன் மந்திரம் கூற இவன் தண்ணீர் இறைக்கிறான்.

கிழங்குத் தோட்டம் வைத்திருக்கிறேன். அதற்குத் தண்ணீர் இறைத்து அதிக நாள்கள் ஆகின்றன. இப்போது நீங்கள் மந்திரம் சொல்லும்போது இறைத்தால் இந்தத் தண்ணீர் என்னுடைய உருளைக்கிழங்குத் தோட்டத்துக்கு போய்ச்சேரும்,” என்றானாம்.

அதற்குப் புரோகிதன் “அது எப்படி அவ்வளவு தூரம் போய்ச் சேரும்?” என்று கேட்க அதற்கு இவன் “நீங்கள் இன்றைக்கும் தண்ணீர் எங்கேயோ கண்ணுக்குத் தெரியாமல் ஒருவரும் காணமுடியாத அவ்வளவு உயரத்தில் இருக்கும் மேல் உலகத்திற்குப் போகிறபொழுது இது இங்கே அடுத்த ஊரில் உள்ள என் தோட்டத்திற்குப் போகாமல் இருக்க முடியுமா?” என்று கேட்டானாம். பிறகு புரோகிதன் நம்முடைய சாயம் வெளுத்தது என்று நினைத்து தலைகுனிந்து போய்விட்டானாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com