அவர்கள் போராடுகிறார்கள்
இளவேனில்
அராஜகவாதம் என்ற சொல் பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
அரசு இல்லாத சமூக அமைப்புக்காகப் போராடுதல் என்பதே அதன் பொருள்.
அராஜகவாதம் மதம் சார்ந்ததோ, பழமை ஆராதனை கொண்டதோ அல்ல.
அராஜகவாதிகளின் நடைமுறைகளை விமர்சிப்பவர்கள்கூட, அவர்களின் நோக்கத்தை, இலட்சியங்களைப் பாராட்டவே செய்வார்கள்.
இதோ, பண்டித ஜவஹர்லால் நேரு எழுதுகிறார்...
நடைமுறை ஏற்பாட்டினால் நன்மை அடைகிறவர்கள் மாறுதலை விரும்புவதில்லை. அவர்கள் மாறுதலைத் தங்களால் ஆன மட்டும் எதிர்க்கிறார்கள். ஆயினும் முன்னேற்றம் அல்லது சீர்திருத்தம் ஏற்பட வேண்டுமாயின் மாறுதல் இன்றியமை யாததாயிருக்கிறது.
அத்தகைய முன்னேற்றத்தை விரும்புவோர் பழைய ஸ்தாபனத்தையோ, அல்லது வழக்கத்தையோ ஓயாது தாக்கித்தான் தீரவேண்டும். ஆகவே நடைமுறை ஏற்பாட்டை நிராகரிப்போர் அதனால் நன்மை அடைவோருடன் மோத வேண்டியிருக்கிறது.
இப்போது நாம் இந்தியாவில் காணுவதைப் போல, அப்போது இங்கிலாந்திலும் ‘சட்டமும் ஒழுங்கும்’ அதிகாரத்திலுள்ள ஒரு சிலரின் நன்மையை வளர்ப்பதற்கு சமய சஞ்சீவியாக விளங்கின. அதனால் அவர்களுக்கு (மாறுதல் விரும்பும் நசுக்கப்பட்ட மக்களுக்கு) ஆத்திரமும் கோபமும் மூண்டதுதான் கண்டபலன்.
அவர்கள் எதற்கும் துணிந்து இரகசியச் சங்கங்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்த இரகசியத்தை ஒருவருக்கும் தெரிவிப்பதில்லை என்று பிரமாணம் எடுத்துக்கொண்டு நள்ளிரவில் ஊருக்குப் புறம்பான இடங்களில் சந்தித்து வந்தார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டாலும் கண்டு பிடிக்கப்பட்டாலும் சதி வழக்குகளுக்கும் கொடும் தண்டனைகளுக்கும் ஆளானார்கள்.
சில சமயங்களில் தொழிலாளர்கள் கோப வெறியில் யந்திரங்களை அழிப்பதும் தொழிற் சாலைகளைக் கொளுத்துவதும் முதலாளிகளைக் கொல்வதும் உண்டு.
...அராஜகவாதியின் இலட்சியம் மிகமிக உன்னதமானது. பலர் அதை உற்சாகமாகவும் தீவிரமாகவும் ஆதரித்தார்கள். அதைப் பற்றி ஒன்றும் தெரியாத அநேகர் அதைக் கேட்ட மாத்திரத்தில் கூசிக் குலைந்தார்கள்.
‘பிறர் நயத்தையும் கட்டுப்பாட்டையும், தாமாகவே பிறர் உரிமைகளை மதித்து நடத்தலையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுநலக் கூட்டுறவே அந்த (அராஜகத்தின்) இலட்சியமாகும்.
ஒவ்வொருவருக்கும் பூரண சுதந்திரம், ஒவ்வொருவரும் பிறர் உரிமையை மதித்து நடக்க வேண்டியது. ஒவ்வொருவரும் தன்னலம் ஒழித்து பிறர் நலம் பேண வேண்டியது. அனைவரும் மனமொத்துக் கூடிவாழ வேண்டியது - இது மிகவும் உயர்ந்த இலட்சியம் என்பதில் ஐயமில்லை. ஆனால், சுயநலமும் பலாத்காரமும் நிறைந்த நமது தற்கால உலகம் இன்னும் அதற்கு வெகுதூரத்தில் இருக்கிறது.
அராஜகவாதியும் ஒருவித அபேத (சமதர்ம) வாதி என்றே சொல்ல வேண்டும். சமதர்ம வாதிக்கும் அராஜகவாதிக்கும் வேற்றுமை பெரிதாயிருந்தாலும் இரண்டிற்கும் பல அம்சங்கள் பொதுவாயிருப்பதைக் காண்கிறோம்.
ஒரு இலட்சியம் என்கிற முறையில் அராஜகவாதம் மிகவும் சிறந்தது. ஆனால், அதன் நிழலில் அதிருப்தி கொண்டோர், ஆத்திரம் மிக்கோர் மட்டுமின்றி சுயநலமிகளும் வந்து சூழ்ந்து கொண்டார்கள்.
அராஜகத் தலைவர்களில் பலர் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் இனிமையான இயல்பும் நெறி பிறழா மாண்பும், பிறர் காமுறும் தன்மையும் வாய்ந்தவர்களாக இருந்தார்கள் என்று அறிய நாம் வியப்புறுகிறோம்.
...ஹென்றிகே மாலடெஸ்டா என்னும் இத்தாலியன் பெயரைத்தான் நான் இங்கே கடைசியாகச் சொல்லப்போகிறேன். அவன் எண்பது ஆண்டுகளுக்குமேல் ஜீவித்திருந்தான்.
மாலடெஸ்டாவைப் பற்றிச் சுவாரசியமான கதை ஒன்று உண்டு. இத்தாலியில் அவனை ஒரு கோர்ட்டில் குற்றவாளியாகக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அந்தப் பிராந்தியத் தொழிலாளரிடையே மாலடெஸ்டாவுக்குப் பெரிய செல்வாக்கு இருக்கிற தென்றும், அது அவர்களுடைய குணத்தையே அடியோடு மாற்றிவிட்ட தென்றும் கவர்ன்மெண்ட் பிராசிக்யூட்டர் வாதித்தார். மாலடெஸ்டா செய்து வரும் வேலையினால் குற்றம் புரியும் சுபாவமே மறைந்து குற்றங்கள் மிகவும் குறைந்து வந்தன. யாரும் குற்றம் செய்யாவிட்டால் கோர்ட்டுகளுக்கு வேலை ஏது? ஆகவே மாலிடெஸ்டாவை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் - இதுதான் கவர்ன்மெண்ட் தரப்பு வாதம்.
இதை ஏற்றுக்கொண்டு கோர்ட்டார் மால டெஸ்டாவுக்கு ஆறுமாத சிட்சை அளித்தார்கள்.
துரதிருஷ்டவசமாக அராஜகவாதம் பெரும்பாலும் பலாத்காரத்துடன் சேர்த்து எண்ணப்படுகிறது.
அராஜகவாதம் என்பது நல்லோர் பலருடைய இதயத்தைக் கவர்ந்த ஓர் உயரிய தத்துவம், சிறந்த இலட்சியம் என்பதை ஜனங்கள் மறந்து விட்டார்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|