மீன்காரி
கவிஞர் பல்லவன்
அவை மலர்க்கூடைகள்
அல்ல...
மீன் கூடைகள்
நாறத்தான் செய்யும்!
மூக்கைப் பிடித்துக்
கொண்டார்கள்
வண்டியில் வந்தோர்!
ஊரார் பசிபோக்க
உணவுப் பொருள்
கொண்டுபோகும்
அந்த மீன்காரியை
அருவருப்போடு
பார்த்தனர்
அனைவரும்!
வீச்சம் சகித்து
முகம் சுளித்த
சிலரில்...
குடலைப் புரட்டும்
இந்தக் கூடைகள
ஏன்யா வண்டியிலே
ஏத்தி எங்கள
வாந்தி எடுக்க
வைக்கிறீங்க?
நடத்துநரிடம்
நாவாடியது
ஒரு
வெள்ளைச் சட்டை!
வெற்றிலை குதப்பிய
வாய்திறந்தாள்
மீன்காரி.
தனியா வண்டி
வைச்சிக்கிட்டுப்
போக எங்களுக்கு
ஏதய்யா வசதி?
நாத்தம் அடிக்கிற
மீனை நீங்க
சாப்பிடறதே
இல்லையா?
மீன் கருவாடா
ஆனாலும்
விடமாட்டேன்னு
ஒரு
பிடிபிடிக்கிறீங்களே!
இந்த மீன் வாசம்தான்
எங்களுக்குப்
பூவாசம்!
செத்தும் சோறுபோடும்
செல்வங்கள் இவை!
நெருங்கவே முடியாத
கத்தாழ நாத்தம்
நீச்சடிக்கும்
அழுக்கு நாத்தம்
வாயைத் திறந்தா
வயித்தைப் புரட்டும்
ஊத்த நாத்தம்
குந்துபுறம் கசியும்
மலநாத்தம்
இப்படி நாறிக் கிடக்கும்
நீங்களா
மீனு நாறுதுங்கிறீங்க?
செத்தா நீங்க
நாறமாட்டிங்களா?
பன்னீர்ப் புட்டிகளால
ஊதுவத்திகளால
மலர்மாலைகளால
பொணவாடைய
நீங்க
மூடிமறைக்கறதில்லையா?
அந்த மீனாட்சியின்
பக்கம்
நீதியின் வாடை
அடித்தது!
வாயைக் கொடுத்து
வாங்கிக்
கட்டிக் கொண்டவர்
பேச்சடங்கி
மூச்சடங்கி
விட்டார்
செத்தமீனாக!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|