மண்ணின் மைந்தர்கள்
கவிஞர் பல்லவன்
நாங்கள் இந்த
மண்ணின் மைந்தர்கள்
முன் தோன்றிய
மூத்தகுடிகள்
மழைமேகக் காதலர்கள்
மகிழ்ந்து பறவைகள்
ஆலோலம் பாடும்
சங்கீத மேடைகள்!
மணிநிழல் பரப்பும்
மரகதக் குடைகள்
மாடு ஆடுகளின்
ஓய்வுக் கூடங்கள்
மாணவர்களின்
பாடசாலைகள்
மழைலையரின்
விளையாட்டுத் திடல்கள்
மண்வளம் காக்கும்
பசுமைக் குடில்கள்
மனம் கலந்த காதலர்கள்
மறைந்திருந்து பேசும்
ஒதக்குப் புறங்கள்
ஏழைகளின் அடுப்பெரியும்
இலவச வீடுகள்
இயற்கை நட்டுவைத்த
ஆச்சரியக் குறிகள்!
கொஞ்சம் மண்ணும்
கொஞ்சம் நீரும்
கொஞ்சம் ஒளியுமே
எங்களது
குறைந்தபட்ச தேவைகள்!
கனிக் குலைகளால்
விதை மணிகளால்
விருந்தாவோம்
உங்கள் பசிக்கு!
வேரால் விழுதால்
பட்டைகளால்
கொட்டைகளால்
இலைகளால்
ஈர்க்குகளால்
மருந்தாவோம்
உங்கள் நோய்க்கு!
கிளைக் கைளில்
பூக்களைச் சுமந்து
புதுவசந்தங்களால்
இந்தப் பூமியை
அழகுப் படுத்துவோம்!
நீங்கள் இளைப்பாற
நிழல் பரப்பு
களைப்பாறக்
கவரி வீசுவோம்!
உங்கள் நாசிகளுக்கு
மூச்சுக் காற்றாவோம்!
நீங்கள் விடும்
நச்சுக் காற்றை
நல்ல காற்றாக
மாற்றும்
சுத்திகரிப்பு
நிலையங்களாகி நிற்போம்!
மண்ணில் இருந்தாலும்
விண்ணைத் தொடுவதே
எங்கள் இலட்சியம்!
முடிவின் தொடக்கமாய்
மீண்டும் முளைத்தெழ
விட்டுச் செல்வோம்
வீரிய விதைகளை
உங்கள் கைகளில்!
இயற்கைக்கு
எதிராக
ஆயுதங்களுடன்
அலையும்
மனித குலத்தீர்!
எங்களை அழித்து
உங்களை
அழித்துக் கொள்ளாதீர்!
நாங்கள்
நிரந்தரமானவர்கள்
அழிவதே இல்லை!
நாளை
மனிதர்கள் இல்லாமல்
உலகம் இருக்கலாம்
மரங்கள் இல்லாமல்
உலகம் இருக்குமா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|