சிந்து தரும் படிப்பினை!
ஆனாரூனா
“கன்னட, கேரள, ஆந்திர மக்களைத் தமிழர்களாகிய நாம் சகோதரர்களாகவே மதித்துப் பழகும்போது, அவர்கள் ஏன் நம்மை எதிரிகளாகவே பார்க்கிறார்கள்?”
“அதுதான் குறள் படிப்பவனுக்கும் மகாபாரதம் (கீதை) படிப்பவனுக்கும் உள்ள வித்தியாசம்!”
கன்னட வெறியர்களின் பகையுணர்ச்சிக்கு எதிராகத் தமிழத் திரையுலகினர் நடத்திய பட்டினிப் போராட்டத்தின் போது நடிகர் ஒருவர் மேடையில் நின்று கேட்ட கேள்வியும் - சாலையில் போய்க் கொண்டிருந்த ஒரு முதியவர் (தனக்குத் தானே) பேசிக் கொண்டு சென்ற பதிலும்தான் மேலே உள்ளவை.
புத்தகங்களும் தத்துவங்களும் மனிதர்களைத் திருத்துகின்றன என்பது உண்மைதான். கருத்துகள் மனிதர்களைப் பற்றிக்கொள்ளும் போது அவை பௌதிக சக்தியாக மாறி விடுகின்றன என்று சொல்வது அதனால் தான். ஆரிய- அல்லது ஆரிய மயமாகிவிட்ட மக்களின் உன்னத நூலாகக் கருதப்படுவது பகவத்கீதை. (அது மனிதனால் கூட அல்ல. இறைவனாலேயே அருளப்பட்டது என்று நம்புகிறவர்களும் உண்டு)
தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகத் கருதப்படும் நூல் திருக்குறள். ஆரிய - திராவிடப் போராட்டம் என்பது இரு வேறு இனங்களுக்கிடையேயான போராட்டம் மாத்திரமன்று, அது இரு வேறு தத்துவங்களுக்கிடையேயான போராட்டமுமாகும். கீதையும் குறளும் இரு வேறு இனங்களின் மனோபாவங்களையும், கலாச்சார அல்லது அனாச்சார முரண்பாடுகளையும் பிரதிபலிக்கின்றன என்பதை யாரும் மறுத்து விட முடியாது.
“எதிரே நிற்பவர்கள் உறவினர்கள், ரத்த சம்பந்தம் உடையவர்கள்! அங்கே பயிற்றுவித்த ஆசான் இருக்கிறார்; பழகிய நண்பர்கள் இருக்கிறார்கள்; அன்பு செலுத்திய உள்ளங்கள் இருக்கின்றன- என்றெல்லாம் எண்ணி மருகி இதயம் உருகி ஆயுதத்தை நழுவவிடாதே! யாராய் இருந்தாலும் கொலை செய், வாழ்க்கைப் போராட்டத்திலே யோசிப்பதற்கு இடமில்லை. இந்தப் போராட்டத்திலே நீ வென்றால் சொத்து கிடைக்கும், தோற்றால் சொர்க்கம் கிடைக்கும். தயங்காதே; காண்டீபத்தை உயர்த்து!” என்று வலியுறுத்துகிறது பகவத்கீதை.
குறளோ - “பெற்ற தாயே பசியும் பட்டினியுமாய்ப் பரிதவிக்க நேர்ந்த போதிலும், சான்றோர் பழித்த வினைக்கு அஞ்சு! எந்தச் சூழலிலும் அறம் பிறழாதே!” என்று எச்சரிக்கிறது. கீதைப் பேருரைகளுக்கும் ஆரியச் சிந்தனைகளுக்கும் பெரும் அளவில் ஆளாகிப் போனவர்கள்தாம் கன்னடர்களும், கேரளர்களும், ஆந்திரர்களும். ஆரிய மயக்கம் சொந்தச் சகோதர்களேயானாலும் அவர்களைப் பகைவர்களாகவே கருது. உறவு முறைகளைவிட சொத்து சுகத்தின் மதிப்பு உயர்வானது. உன்னை மாத்திரமே எண்ணியிரு. மற்றவர்களை மறந்து விடு என்பதுதான் கீதையின் சாரம்; பாரதப் பண்பாடு; இந்துத்துவ நிலைப்பாடு.
கன்னட, கேரள, ஆந்திர மக்கள் சுயநலமிகளாய் இருப்பதற்கும், தண்ணீர் கூடத் தர மறுக்கும் அளவுக்குத் தமிழர்கள் மீது விரோதம் கொள்வதற்கும் அவர்களுக்குள் படிந்துவிட்ட கீதோபதேசமும் ஆரிய மயக்கமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழர்களின் இலக்கியங்களும், திருக்குறள் போன்ற சமூக அரசியல் விளக்க நூல்களும் கடவுள் மதம் போன்ற கற்பனைக் கதைகளையோ, தன்நலத்தை வலியுறுத்தும் ‘ஆன்மீக’ அருளுரைகளையோ விதைக்காமல், மனிதனைப் பண்படுத்தும் கருத்துக்களையே வலியுறுத்துகின்றன. இதனால் தமிழர்கள் பெரும்பாலும் விசால மனங் கொண்டவர்களாய், மனிதநேயம் கொண்டவர்களாய், பண்பாட்டில் உயர்ந்தவர்களாய் வார்க்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், தனிச் சொத்துரிமையை ஆராதிக்கும் இந்திய சமூக அமைப்பில், பண்பாடு என்பதும், மனித நேயம் என்பதும் அசட்டுத்தனமாகவும் கேலிப் பொருளாகவும் மாறிவிட்டன. இந்திய அரசமைப்பும், இந்துத்துவ மனோபாவமும் தமிழர்களுக்கு எதிராகவே நிறுத்தப்பட்டிருக்கின்றன. தேசிய ஒருமைப்பாடு என்பது, இந்திய விடுதலைக்குப் போராடிய தலைவர்களின் இதயத்திலிருந்து மலர்ந்த இலட்சியமாக இல்லாமல், சமயத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடும் சாமர்த்திய உத்தியாக இருந்திருக்குமோ என்று இன்று எண்ணத் தோன்றுகிறது.
மொழிவழி மாநிலங்களைப் பிரித்தது, தேசிய இனங்களின் சுய அடையாளங்களைப் பாதுகாக்கும் முயற்சியாக இல்லாமல், ஆங்கில அரசின் ‘பிரித்தாளும் சூழ்ச்சி’யின் மறுபதிப்பாக மாறியிருக்கிறது. தேசிய ஒருமைப்பாட்டில் உண்மையிலேயே அக்கறை இருந்திருக்குமானால், காவிரி, முல்லை-பெரியாறு, ஒக்கனேக்கல் பிரச்சனைகள் முற்றியிருக்காது. நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுவோம். ஒரு சொட்டுத் தண்ணீர்கூட விடமாட்டோம் என்று கேரள, கன்னட அரசுகள் போக்கிரித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்ணெதிரே கண்டும்கூட இந்திய அரசு மௌனம் சாதிப்பது ஏன்?தமிழர்களின் பண்பாடும் மனிதநேயமும் அவர்களின் தலைக்குனிவுக்குக் காரணமாகிவிட்டது ஏன்?
கசப்பான உண்மை ஒன்று உண்டு. சிந்து நதி இந்தியாவில் உற்பத்தியானாலும், அது இந்தியர்களுக்கு மாத்திரமே சொந்தமானது. பாகிஸ்தானுக்கு அதில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட விடமாட்டோம் என்று இந்தியா மார்தட்ட முடியாது. ஏனென்றால் இரு வேறுநாடுகளுக்கிடையே ஒரு நதி ஓடுமானால் அதில் இரு நாடுகளுக்குமே பங்கு-உரிமை உண்டு. அதை யாரும் மறுக்க இயலாது. இதுதான் சர்வதேச விதி. பாகிஸ்தான் தனி நாடாக இருப்பதால்தான் இந்தியாவில் பாகிஸ்தானின் நீர் உரிமையை மறுக்க முடியவில்லை. பாகிஸ்தான் பிரிவினை ஏற்படாமல், இந்தியக் கட்டமைப்புக்குள்ளேயே இருந்திருக்குமானால் இந்துத்துவக் கொள்கையும் அதற்குச் சாமரம் வீசும் இந்திய அரசமைப்பும் பாகிஸ்தானை வஞ்சித்தே முடித்திருக்கும். தமிழக ஆறுகளிலும் நீரோட வேண்டுமானால் பிரிவினை ஒன்றுதான் தீர்வா? இதுதான் இந்திய ஆதிக்க சக்திகளின் விருப்பமா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|