தமிழ்நதி கவிதைகள்
கலகக்காரன்
கையிலொரு மதுக்குவளையுடன்
தாவரங்களுடனும்
தத்தும் அணில்களுடனும் பேசுகிறவன்
புனித பீடங்களின் மீதெல்லாம்
சிறுநீர் கழிக்கிறவன்
புனையப்படும் தேவதைகளில்
பச்சை இறைச்சி வாடையடிக்குதென
உரத்த சிரிப்புடனே எள்ளுபவன்
துணுக்குறும்படியான கெட்ட வார்த்தைகளை
வாசிப்பிற்கிடையில் இயல்பேயெனப் போட்டு
அடுத்த வரியில்
அன்றைய காலநிலை குறித்துப் பேசிச் செல்பவன்
இன்னபிறவிதங்களில்
கலகக்காரச் சட்டகத்துள் அடைபட்டிருந்தவனை
பன்றிகள் சேறுழன்று திரியும் தெருவொன்றில்
தற்செயலாகச் சந்தித்தேன்
குனிந்து தலையிடிபடாமல்
குடிசையினுள் வரும்படி அழைத்தான்
தூளி நனைத்த மூத்திரம்
எங்களை நெருக்குவதற்கிடையில்
துடைத்துவிடும்படி
மற்றொரு மூலையில் சுருண்டிருந்த மனைவியை
கெட்டவார்த்தை இணைப்புடன் ஏவியபின்
இலக்கியம் பேசினான்
விடைபெறும்போது
தொய்ந்திருந்த சட்டைப்பையைத் தட்டி
பசிக்குதென்று இருநூறு ரூபா கடன்கேட்டுத் தாழ்ந்த
விரல்களைப் பார்த்தேன்
எரவாணத்தில் இடித்துக் கொள்ளாமலே
கண்கள் கலங்கிவிட்டதெனக்கு.
சிறகுதிர்க்கும் தேவதைகள்
ஒவ்வொரு தடவை அழைக்கும்போதும்
வேலைச் சிலுவையில் அறையப்பட்ட
உன் உள்ளங்கைக் குருதியைப்
பருகத் தருகிறாய்
வெல்வதெற்கான உன் சூதாட்டங்களில்
பகடையென
உருட்டப்படு மென் உணர்வுகள்
காதலும் காமமும்
போர்தொடுக்கும் பெருவெளியில்
நிராயுதபாணியாய் நிறுத்தப்பட்டவள்
தனிமையின் கல்லுரசிப்
பொறிபறக்கும் சொற்களால்
கிழித்துக்கொள்கிறேன் நம் காதலை
ஆணிகள் இறுக அடிக்கடி இறப்பதாய்
சொல்லிக் கொண்டே
தொலைபேசியை உயிர்ப்பிக்கிறாய்
அந்த நாளைச் சவப்பெட்டிக்குள்
வைத்து மூடி எழுந்திருக்கிறேன்
காத்திருந்தே கழியும் இரவுகளின் முடிவில்
தேவதைகள் சிறகுதிர்ந்து
பேயுருக்கொள்ளல் பற்றி
நேரமிருக்கும் யாரிடமாவது பேச வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|