எஸ். தேன்மொழி கவிதைகள்
பாலை
உக்கிரமேறிய தனிமை
உலகை உருக்கும் வெம்மை
தங்கும் கருவீடு
வரங்களை மறுக்கும்
கொடுந் தவம்
தன்னை அழித்தே
எரியூட்டும் இருப்பு
ஆழி குடித்து
துளி நிரப்ப முடியா
அட்சய தாகம்
பாலை
அவள்
பெண் மட்டுமே
உவர்க்கும் இரவுகள்
நிறங்கள் நெருங்கி நேர்கோடாகி
சிதிலமடையா வெண்ணிற ஒளியின்
பிணைப்பு முறுக்கேறி பிழிய
வழிகிறது இரவு நதியின் பாடலாய்
கோரைப்பற்கள் அணியும்
இரவின் சிரிப்பு பிரபஞ்ச
இடுக்குகளை துளையிட்டு நிரப்ப
அலாவுதீனின் அடிமை பூதமும்
கருமை நிறமேறிய கருவறைகளும்
கதற ஆரம்பிப்பது அநேகமாய்
சதிகள் கூர்தீட்டப்படும் கொடிய
இந்த இரவுப் பொழுதில் தான்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|