மகர நோன்புப் புலி
பா.தேவேந்திர பூபதி
தரைகவிழும் முகத்திற்கு இணையாக எழும்
சமநிலை பிரியாதிருக்கும்
புலி வால் பிடித்தலைகிறது மனம்
முகம் நிமிர்ந்த பிறகு வால் எதற்கு
தரை தாவிப் பாய்ந்து காற்றில்
நகம் வீசிக் குமுறும் கலைஞன்
குழந்தைகள் பிடிக்கும் தன்பொய் வாலால்
ஆதிக் குரல் நடுங்க அலறுகிறான்
தழும்பற்றுப் போன அவனது வால்
ஒரு பீர்க்கங் கொடியில் காய்த்திருக்கிறது
பனை உச்சியில் கம்பங்கதிர்களைப் போல
பாளையாய்ச் சரிகிறது
வாலில்லாமல் புலி சுமந்தலைவது பரிதாபம்
அரிதாரம் கலைத்த வால் தொட்டு
புலி கற்றுக் கொள்கிறார்கள் குழந்தைகள்
முகம் நிமிர்ந்த புலி உறுமுகிறது
நிலமெங்கும் வால்கள் மகிழ்வுடன் அசைகின்றன
கரும் புள்ளிகளோடு
மஞ்சள் நிற வால் பிடிக்கும் எவரும்
மறைந்திருக்கும் புலியை உசுப்பி விடுகிறார்கள்
பொய் வால் சுமந்தலையும் கலைஞன்
ஒருபோதும் புலியாக முடியாது
இல்லாத வால் மட்டும் தான் எப்போதும் புலி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|