Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
பிப்ரவரி 2006
கட்டுரை

என் நாட்குறிப்பிலிருந்து...

சுப.வீரபாண்டியன்

அந்த அதிகாலைப் பயணம் மிக இனிமையாகத்தான் தொடங்கியது.

அதற்கு முந்தைய நாள் பொங்கல் நாள். ஆண்டுக்கொரு முறை அனைவரும் இணைந்து கொண்டாடுகிற வீட்டின் ஒரே விழா. பாலும் மகிழ்ச்சியும் சேர்ந்து பொங்கின. கரும்பும், பேத்தி ஓவியாவின் குறும்பும் சேர்ந்தே இனித்தன. சர்க்கரைப் பொங்கலின் சுவையும், அதை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுகிற நிலையும் நெஞ்சுக்கு நிறைவான மகிழ்வைத் தந்தன. அன்றிரவு என் மூத்த அண்ணன் முத்துராமன் வீட்டில் மொத்தக் குடும்பமும் ஒன்று கூடியபோது, சின்னத் திருவிழாவுக்கான முன்னோட்டம் அங்கே இருந்தது.

பெரியவர்கள் தொடங்கி, பிஞ்சுகள் வரையில் கேலியும் சிரிப்பும் மகிழ்ச்சியுமாக இருந்த அந்தத் தருணங்களில்தான், வாழ்க்கை மிச்சப்பட்டுக்கிடப்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது. அன்றைய நாள் முழுவதும் ஒரு மகிழ்ச்சியான நாள் என்று சொல்ல வேண்டும். அதனுடைய தொடர்ச்சியாகவே அடுத்த நாள் காலைப் பொழுதும் இருந்தது.

மாட்டுப் பொங்கலன்று வீடுகளில் மாடுகள் இல்லையென்றாலும், பொங்கல் வைக்கின்ற மரபு நம் எல்லோருடைய இல்லங்களிலும் இருக்கிறது. ஆனாலும், அன்றைக்கு மாட்டுப் பொங்கலில் வீட்டில் இருக்க முடியாமல், நெய்வேலி நண்பர்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி, அவர்களுடன் சேர்ந்து அன்றைய திருநாளைக் கொண்டாடுவதற்காக நெய்வேலி புறப்பட்டோம். வாய்ப்பூட்டுச் சட்டம் இருக்கின்ற காரணத்தால், நான் பேச முடியாது என்கிற நிலையிலும், "எங்களோடு நீங்கள் இருக்க வேண்டும், தமிழர் திருநாள் விழாவிலே கலந்து கொள்ள வேண்டும். பரிசுகளை நீங்கள் வழங்க வேண்டும்' என்று நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நெய்வேலிக்கு அதிகாலையிலே நான் கிளம்பினேன்.

அன்று பேருரையாற்றுவதற்குப் பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் அவர்களை நண்பர்கள் அழைத்திருந்தார்கள். நானும் தோழர் பத்மாவதி அவர்களும் அவருடைய மகனும், மருமகளும் ஒரு மகிழ்வுந்தில் நெய்வேலிக்குப் புறப்பட்டுச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். அதன்படி, அன்று அதிகாலை 5.30 மணிக்கு, என் மகன் பாரதிதாசன் தன்னுடைய வண்டியிலே என்னைக் கோடம்பாக்கத்தில் இருக்கிற மீனாட்சி கல்லூரியிலே இறக்கிவிட்டார். 5 நிமிடத்திற்குள்ளாகவே, அவர்களும் வந்து சேர எங்களின் பயணம் தொடங்கியது.

நான் முதலில் குறிப்பிட்டதைப் போல, அந்த அதிகாலைப் பயணம் மிகவும் இனிமையாகத்தான் இருந்தது. பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் மகன் மருத்துவர் கோபிநாத் தன் மகிழ்வுந்தை ஒட்ட, அவருக்கு அருகில் முன் இருக்கையில் நான் அமர்ந்தேன். பின் இருக்கைகளில் பேராசிரியரும் அவருடைய மருமகளும் இருந்தார்கள்.

மருத்துவர் கோபியை, 2 மாதங்களுக்கு முன் நடந்த அவரது திருமணத்தில்தான் நான் முதலில் சந்தித்தேன். அதிகப் பழக்கமில்லை என்றாலும், நெருங்கிப் பழகியவர்களைப் போல அன்றைக்கு நிறைய பேசியபடி பயணப்பட்டுக் கொண்டிருந்தோம். பத்மாவதியின் கணவர் விவேகானந்தனும் நானும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலையில் எறத்தாழ சமகாலங்களில் படித்தவர்கள். அதனால், பழைய நினைவுகளும் இன்றைய நிகழ்வுகளுமாய்ப் பேச்சுகள் நடந்துகொண்டிருந்தன.

நெய்வேலியில் மதியம்தான் பொங்கல் விழா. ஆனாலும், காலையிலேயே புறப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. கோபிநாத்தின் மனைவி, போகிற வழியில் கடலூருக்கு அருகே இருக்கிற ஒரு ஆஞ்ச நேயர் கோயிலுக்குப் போகவேண்டும் என ஆசைப்பட்டதாகவும், அதனால் பயணத்தை விரைவாகவே தொடக்கிவிடலாமா என்றும் பத்மாவதி அவர்கள் முதல்நாளே கேட்டார்கள்.

"அங்கிள் கோயிலுக்கு வருவாரா?'' என்று கோபி கேட்டார். "எனக்கும் ஆஞ்சநேயருக்கும் எந்தப் பகையுமில்லை. போகிற வழியில் அவர்களை அவரைப் பார்த்துவிட்டு வரட்டும். அப்படியே போகலாம்'' என்று நான் சொல்ல, கடலூர் கோயிலையும் அவர்கள் விருப்பப்படி பார்த்துவிட்டு, மதிய உணவுக்கு நெய்வேலி சென்று விடுவது எனத் திட்டமிட்டிருந்தோம்.

திருவான்மியூர் தாண்டி, கிழக்கு கடற்கரைச் சாலையில் திரும்பிய பிறகு, அந்தப் பயணம் மேலும் இனிமையாக ஆனது. அந்தக் காலை நேரம்-கடற்கரைக் காற்று-கதிவரன் தோற்றம் என்று எல்லாம் இதயத்துக்கு மிக இதமாக இருந்தன.

ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரியைத் தாண்டுகிற போது, "இதுதான் நான் படித்த, இப்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கிற கல்லூரி'' என்று கோபியின் மனைவி மருத்துவர் சுனிதா சொன்னார். தான் மீனாட்சி பல் மருத்துவமனையில் பணியாற்றுவதாகக் கோபி கூறினார். பிறகு, பல் மருத்துவம் பற்றியும், பல் மருத்துவரான என் அருமை நண்பர் தாயப்பன் பற்றியும் பேச்சுகள் திரும்பின.

இவை பற்றித்தான் பேசினோம் என்று சொல்ல முடியாது. போகிற போக்கில் கண்ணில் பட்டவை பற்றிப் பேசினோம். நெஞ்சில் தோன்றியவைகள் பற்றிப் பேசினோம். பேச்சு சுகமாக இருந்தது. ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்தச் சாலையில் எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.

மாமல்லபுரம் தாண்டி, சிறிது நேரத்திற்குப் பிறகு, "கோபி... எங்கேயாவது வண்டியை நிறுத்துங்களேன். ஒரு தேநீர் குடித்துவிட்டுப் போகலாம்'' என்று சொன்னேன். தேநீர் குடிப்பதென்பது, வெறும் தேவைகளில் ஒன்று மட்டுமன்று, சில நேரங்களில் அது என் மனநிலையை எட்டியதாகவும் இருக்கும். மாலை நேரங்களில், நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளைகளில், பொதுக்கூட்டங்களில் நான் பேசுவதற்குச் சற்று முன்பாக, ஒரு தேநீர் குடித்துவிட்டால் நன்றாக இருக்கும் போல என்று எனக்குத் தோன்றும். என் மனநிலையை அறிந்து வைத்திருக்கிற அய்யா நெடுமாறன் அவர்கள், பொதுக்கூட்ட மேடைகளிலே இருக்கிறபோது, கூட்ட ஏற்பாட்டாளர்களை அழைத்து "எனக்குத் தேநீர் வேண்டாமென்பதால் நீங்கள் சுப.வீக்கும் தேநீர் கொடுக்காமல் விட்டுவிட்டால் பிறகு எங்களுக்கு ஒரு நல்ல பேச்சு கிடைக்காது'' என்று சொல்லுவார்கள். தேநீர் அருந்துவது, உற்சாகமான மனநிலையின் அடையாளமாகவும் எனக்குப் பல நேரங்களில் இருந்திருக்கிறது.

கூவத்தூர் என்று நினைக்கிறேன். ஒரு தேநீரகத்தில் கோபி, வண்டியை நிறுத்த நாங்கள் அனைவரும் இறங்கினோம். காலை நேரக் காற்று முகத்தை வருட, சூடான தேநீர் அருந்தி முடித்தபின் மீண்டும் வண்டிக்குள் வந்து அமர்ந்தபோது மணி, 7.30 இருக்கலாம். இன்னும் 15 அல்லது 20 நிமிடங்களில் ஒரு மிகப்பெரிய விபத்தை எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை அப்போது எங்களில் யார் அறிந்திருக்கக் கூடும்?

எங்களின் மகிழ்வுந்து பரமன்கேணி என்ற திருப்பத்திற்கு வந்து சேர்ந்தபோது, (அந்த இடம், பரமன்கேணி என்பதைக்கூட பிறகுதான் நாங்கள் தெரிந்து கொண்டோம்) ஒரு குறுகலான வளைவில், திருப்ப முடியாமல் கோபி சிரமப்படுவதையும், இரண்டு சக்கரங்கள், நான் அமர்ந்திருந்த பக்கத்தில் மேலே தூக்குவதையும் உணர்ந்தேன்.

"கோபி... என்னாயிற்று... என்னாயிற்று''' என்று பதற்றத்தோடு கேட்ட அந்த நொடிகள்தான், நினைவில் இப்போதும் மீதம் இருக்கின்றன. அதன்பிறகு, என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை நானும் மற்றவர்களும் வெறும் ஊகமாகத்தான் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். ஒன்றே ஒன்றை எங்களால் உணர முடிந்தது.

சாலையில் இருந்து சரிந்து, வலது பக்கத்திலிருந்த 5 அல்லது 6 அடி பள்ளத்தில் எங்கள் மகிழ்வுந்து உருண்டு கொண்டிருக்கிறது என்பதை மாத்திரம்தான் உணர்ந்தோம். காருக்குள்ளே இருந்த நாங்கள் மேலே போவதும், கீழே விழுவதுமாக சுழற்றி அடிக்கப்படுகிற போது, பெரும் கூக்குரல்களும் ஒன்றும் புரியாத ஒரு நிலையும்தான் இருந்தது. என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அப்போது எங்களில் யாராலும் உணரமுடியவில்லை.

எல்லாம் சில நொடிகளுக்குள் நடந்து முடிந்துவிட்டன. இறுதியாக, சேறும் சகதியும் முள்ளுமாக இருந்த இடத்தில் மகிழுந்து வந்து விழுந்தது. வண்டியினுடைய கண்ணாடிகள் எல்லாம் உடைந்திருந்தன. 4 பேரும் நினைவு தப்பாமல் இருந்தோம் என்பது ஒரு குறிப்பிடத்தக்க செய்தி. வண்டியைவிட்டு அவர்கள் 3 பேரும் கண்ணாடிச் சன்னலின் வழியே வெளியே வந்துவிட்டார்கள். எனக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது.

அங்கே கிடந்த முட்களில், தன் காலை மிதித்துக் கொண்டு, கோபி என் கைகளைப் பற்றி வெளியே இழுத்த காட்சி இப்போதும் எனக்கு நினைவில் இருக்கிறது. அடுத்த நாள், விஜயா மருத்துவமனையில் அவருடைய பாதங்களில் நூற்றுக்கணக்கான முட்களை அந்த மருத்துவர்கள் வெளியே எடுத்தார்கள் என்பதை அறிந்தபோது, எனக்காகக் காயப்பட்ட அந்தக் கால்களை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். வண்டியை விட்டு வெளியே வந்தபோது என் நெற்றியிலிருந்தும் இடது கையிலிருந்தும் இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. ஏறத்தாழ உடம்பு முழுவதும் பல பகுதிகளில் வலியாக இருந்தது.

அந்தச் சூழலில் எனக்குத்தான் கூடுதலாகக் காயம் பட்டிருக்கிறது என்பதாக உணர்ந்த அவர்கள் மூவரும் தங்களைப் பற்றிக்கூட எந்தக் கவலையும் படாமல், எப்படியாவது என்னைக் காப்பாற்றிவிட வேண்டும் என்றே பதறினார்கள். ஆனால், அந்தச் சாலையில் ஆள் நடமாட்டம் எதுவுமில்லை. கண்ணுக் கெட்டிய தூரம் வரையில் கிராமமோ, மக்களோ இல்லை. நாங்கள் மட்டுமே, கவிழ்ந்து கிடக்கும் வண்டிக்கருகில் நின்று கொண்டிருக்கிறோம்.

அப்போது, எங்கோ மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியவர் ஓடி வந்து தன் தோளில் கிடக்கிற துண்டை எடுத்து, இரத்தம் வழிகிற என் நெற்றியில் இறுக்கிக் கட்டுகிறார். அதற்கு ஒரு 5 நிமிடங்களுக்குப் பிறகு சென்னையை நோக்கி ஒரு மகிழுந்து வந்து கொண்டிருக்கிறது. கீழே இருந்தே நாங்கள் கைகாட்டுகிறோம். அவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்குகிறார்கள். ஒட்டுநரும் மற்றொருவரும் மட்டும்தான் இருக்கிறார்கள். எங்கிருந்தோ வந்த அவர்கள்தான் எங்கள் உயிர்களைக் காப்பாற்றினார்கள். கோபியும், அவரது மனைவியும் அங்கே நின்றுகொண்டு, என்னையும் பேராசிரியரையும் அந்த அம்பாசிடர் மகிழுந்தில் எற்றி அனுப்பி வைக்கிறார்கள்.

முதலில் எதாவது ஒரு மருத்துவரைப் பார்த்து முதலுதவி செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து 9 கிலோமீட்டர் தாண்டியிருக்கிற கூவத்தூரை வந்து அடைகிறோம். அங்கே மருத்துவர் முருகேசனைச் சந்திக்கிறோம். அவர்தான், மிகுந்த அன்புடன் எங்களுக்கு எல்லா முதலுதவிகளையும் செய்கிறார். அந்த கிராமத்து மக்கள் தாயினும் சாலப்பரிந்து எங்களிடம் அன்பு காட்டுகிறார்கள். அன்று அவர்கள் காட்டிய அன்புக்கும் அவர்கள் செய்த உதவிக்கும் என்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம் நாங்கள்.

பிறகு அங்கிருந்து சென்னையை நோக்கி அந்த மகிழுந்துப் பயணம் தொடங்குகிறது. ஏறத்தாழ 80 கிலோ மீட்டர் கடந்து நாங்கள் சென்னைக்கு வரவேண்டும். வீட்டில் தகவல் அறிந்தால் மனைவியும் பிள்ளைகளும் பதறிப்போய் விடுவார்களே என்கிற அச்சத்தில் என் அண்ணனுக்கும் மருத்துவர் முத்தையா அவர்களுக்கும் மட்டும் செய்தியைத் தொலைபேசி மூலம் சொல்லிவிட்டு, கோடம்பாக்கத்திலே இருக்கிற பெஸ்ட் மருத்துவமனையை நோக்கி நாங்கள் திரும்பிக்கொண்டிருக்கிறோம்.

அதே கடற்கரைச் சாலை, அதே காலை நேரக் காற்று, அதே கதிரவன், எல்லாம் இருந்தன. அனால் எதையும் ரசிக்கும் மனநிலையில் நாங்கள் இல்லை. மகிழ்ச்சியோடும் சுவையான பேச்சுகளோடும் முதலில் நடந்த பயணம், அதே சாலையில் வலியோடும் வேதனையோடும், சொட்டும் இரத்தத்தோடும் திரும்பவும் நடந்துகொண்டிருக்கிறது.

பாதை ஒன்றுதான். சாலைகள் ஒன்றுதான். மனிதர்களும் அதே மனிதர்கள்தாம். ஆனால் மனநிலை முற்றிலும் வேறுவேறாக மாறிப்போயிற்று. முதல் 2 மணி நேரப் பயணமும் அடுத்து நடந்த 2 மணி நேரப் பயணமும் நேர் எதிர்மறைகளை, வாழ்க்கையின் இரண்டு பக்கங்களை எங்களுக்கு சுட்டிக்காட்டின. எத்தனை மகிழ்ச்சியாக இருந்த வாழ்க்கை, ஒரு நொடியில் இப்படி வலியும் இரத்தமுமாய் மாறிப்போயிற்று என்பதை எங்களுக்கு உணர்த்திற்று. கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையிலான எலும்பு எனக்கு முறிந்து போய்விட்டது. பேராசிரியருக்கு விலா எலும்பிலே விரிசல், கோபிக்கு முதுகுத்தண்டில் கீழ் பகுதியிலே அடிபட்டுவிட்டது. இன்னும் அவர் படுத்தப் படுக்கையாய் உள்ளார். அவருடைய மனைவிக்கு எராளமான ஊமைக்காயங்கள். எல்லோரும் உயிர் பிழைத்து விட்டோம் என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தி.

"கடவுள்தான் எங்களைக் காப்பாற்றியுள்ளார்'' என்று பலர் கூறுகின்றனர். ஒரு புன்னகையோடு அதனைக் கேட்டுக்கொள்கிறேன்.

"நாட்டுக்கு எங்கள் தேவையும், நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளும் இன்னும் நிரம்ப உள்ளன. அதனால்தான் காலம் எங்களைக் காப்பாற்றியுள்ளது'' என்கின்றனர் நண்பர்கள் சிலர். இப்போதும் புன்னகைக்கிறேன். இரண்டுமே மூட நம்பிக்கைகள்தாம். ஆனாலும், உயிர் உள்ளவரை, நம்மால் முடிந்தவைகளை இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை இரண்டாவது கூற்று என்னுள் தூண்டுகிறது.

விரைவில் நலம் பெறுவேன். மீண்டும் உங்களோடு இணைந்து செயல்படுவேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com