பாயும் பெரியார்; மாயும் மதவெறி!
- கோவி.லெனின்
சிலை அல்ல அது
சிக்கி முக்கிக் கல்!
உரசிப் பார்த்தவர்கள்
எரிந்து கொண்டிருக்கிறார்கள்!
அந்தக் கிழவனுக்குப்
புதிதா என்ன
எதிரிகளின் தாக்குதல்?
`அன்பான எதிரி'களின்
அடுத்தடுத்த தலைமுறைக்கும்
சிம்ம சொப்பனமாய்த் தெரிகிறான்
சிலையான பின்னாலும்!
சீரங்கநாதனையே
பீரங்கி வாயில் பிளக்கும்
சிந்தனைப்படையை உருவாக்கியவனுக்குக்
கடப்பாரைக் காயங்கள்
அவனது
இறவாக் கொள்கை எதிர்கொள்ளும்
விழுப்புண்கள்!
"எதிரிகள் தாக்குகிறாரெனில்
நாம் சரியாகவே இருக்கிறோம்"
என்றவன் அவன்.
சரியாகவே இருக்கின்றன
அவன் கொள்கைகள்
இப்போதும்.
ராமசாமியை
உடைக்க வந்தவர்கள்
ராமர் `சாமி'க்குப்
பாதுகாப்புத் தேடுகிறார்கள்
பரிதாபமாக!
நியூட்டனின்
மூன்றாம் விதியை
நடைமுறைப்படுத்தியிருக்கிறது
நான்காம் சாதி!
துப்பாக்கிக் காவலர்களின்
தூங்காத இரவுகளால்
பத்திரமாகப் படுத்திருக்கிறார்
சீரங்கநாதர்!
நின்ற சிலைக்குப் பதில்
உட்கார்ந்த நிலையிலும்
உயரமாகிவிட்டார் பெரியார்
சீரங்க கோபுரத்தை விடவும்..!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|