புதுச்சேரியில் தமிழிசைக்காக ஓர் உரையரங்கு
தமுஎச மாநில மாநாட்டையொட்டி, புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் “தமிழிசை வரலாற்றுச் சிந்தனைகள்...” எனும் தலைப்பில் இசை அறிஞர்கள் - கலைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 16 அன்று ஆபிரகாம் பண்டிதர் நினைவரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற தமுஎச மாநிலத் துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ந.நன்மாறன், “பல்கலைக் கழகங்களிலும், கல்லூரி களிலும் அறிந்து கொள்ள முடியாத பல தகவல்களை இந்த இசை அறிஞர்கள் மூலம் ஒரு நாளில் அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு நமக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழிசை வளர்ச்சிக்கான அரிய பணியை இதன் மூலம் நாம் செய்கிறோம்.” என்றார்.
முனைவர் இரா.திருமுருகனார் பேசுகையில், “உ.வே.சா.வை தமிழகம் முழுவதும் கொண்டு சென்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தமிழ் உணர்வு பாராட்டத்தக்கது. சிலப்பதிகாரத்தின் “முரசிமை” மிக எளிய “முல்லைப்பாணி” நடையில் அமையப் பெற்றதாகும். இதுதான் முதன் முதலில் தோன்றிய இசையாகும். சங்கீதம் மேட்டுக்குடி மக்களுக்கானது என்ற கருத்து நிலவுகிறது. இது தவறானது. செவ்வியல் இசை சிறந்த இசை வடிவமாகும். அது மக்களுக்கான இசையாகும்” என்றார்.
பேராசிரியர் இராம.கௌசல்யா- “ஆபிரகாம் பண்டிதரின் தமிழிசைக் கொடை” என்னும் தலைப்பில் உரையாற்றினார். “தமிழிசைக்கென ஆபிரகாம் பண்டிதர் தனது சொந்த செலவில் 7 மாநாடுகள் நடத்தினார். 1916ம் வருடம் மார்ச் மாதம் 21ம்தேதி முதல் 4 நாட்கள் பரோடாவில் மாநாடு நடத்தினார். ஸ்ருதி எனப்படும் சின்னச் சின்ன அசைவுகளை 24 என பழந்தமிழ் முறைப்படி நிறுவினார். தமிழிசை குறித்து தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கடிதத் தொடர்பு கொண்டார். பண்டிதர் தாம் நடத்திய தமிழிசை மாநாடுகளில் தன்னுடைய புதல்விகளையே பாடச் செய்தார். அவர் உருவாக்கிய “கருணா மிருதசாகரம்” என்ற ஆய்வு நூலே தமிழிசையில் முதன் முதலாக வந்த ஆய்வு நூலாகும். இதுவே பின்னர்வந்த அனைத்து ஆய்வுகளுக்கும் அடிப்படையாக இருந்தது.
“தமிழிசை இன்றைய நிலை” எனும் தலைப்பில் உரையாற்றிய சு.இராமச்சந்திரன், “தற்போதும் இசை அரங்குகள் என்பது டிசம்பர் சீசனில் பெரு நகரங்களில் நடைபெறும் இசை விழாக்களும் திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாக்களுமே பேசப்படும் நிகழ்வு களாக இருக்கின்றன. இதில் தமிழிசைப் பாடல் கள் என்பது போதுமானதாக இல்லை.
தமுஎச கலைக் குழுவினரும், மற்ற தொண்டு நிறுவனங்களும் தங்களது கருத்துக்களையும் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல இசை வடிவங்களை பயன்படுத்தி வருவது குறிப் பிடத்தக்கது. வடலூர் வள்ளலார் விழா, அரசு நடத்தும் சீர்காழி, மாயூரம் மூவர் விழாக் களில் தமிழிசை போற்றப்பட்டாலும் அது போது மானதாக இல்லை. எம்.பி. சீனிவாசன் தொடங்கி வைத்த சேர்ந்திசை வடிவத்தை நாம் யோசிக்க வேண்டிய தருணம் இது” என்று குறிப்பிட்டார்.
“சித்தர்களின் இசைப்பாடல்கள்” எனும் தலைப்பில் பேசிய பேராசிரியர் மா.வயித்திய லிங்கன், “சித்தர்கள் சாதி, குலம், பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிப்பது ஆகியவற்றை மறுத் தார்கள். சித்தர் பாடல்களில் நடை, இசைப் பாடல்களின் நடை. பாமர நடை எளிய மக்களுக்கும் கருத்தை உடனே உள் வாங்கிக் கொள்ள ஏற்ற நடை. சித்தர்களின் பாடல் களைப் பின்பற்றி பாரதியார், பாரதிதாசன், குணங்குடி மஸ்தான் போன்றவர்களெல்லாம் தமிழிசைப் பாடல் களை இயற்றினார்கள்” என்றார்.
“தமிழிசை தோற்றமும், வளர்ச்சியும்” எனும் தலைப்பில் இசையறிஞர் அரிமளம் பத்ம நாபன், “பல விஷயங்களை ஆவணப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தவறிவிட்டு பின்னர் அதற்காக வருந்திப் பிரயோசனமில்லை. எல்லாவற்றையும் அரசு செய்யுமென எதிர்பார்க்கக் கூடாது. தற்போது நிலவி வரும் கர்நாடக இசை என்பது நமது பாரம்பரிய தமிழிசையின் அறிவியல் பூர்வமான வளர்ச்சியே. மற்ற துறைகளிலெல்லாம் அறிவி யல் வளர்ச்சியை ஏற்றுக் கொள்கிற நாம் இதில் மட்டும் பின்தங்கியிருக்கிறோம்” என்றார்.
வாழ்த்துரை வழங்கிய தமுஎச பொதுச் செய லாளர் ச.தமிழ்செல்வன், “நாங்கள் அதிகமாக - இயக்கத்திற்கான இசை குறித்து மட்டுமே கவலைப்பட்டிருக்கிறோம். தமிழிசை குறித்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருப்போர்க்கு இக்கருத்தரங்கம் பயனுள் ளதாக இருக்கும். எம்.பி. சீனிவாசன் இருந்த வரை சேர்ந்திசைக்கு முக்கியத்துவம் தரப் பட்டது. நமக்கான இசை நாட்டுப்புற இசை மட்டுமே. கர்நாடக இசை மேட்டுக் குடியினருக் கான இசை என்ற பார்வை மக்களிடம் இருந்தது. கடந்த காலங்களில் நிறைய தவற விட்டிருப்பதாக இப்போது உணர்கிறோம்” என்றார்.
நாடகக் கலைஞர் பிரளயன் தனது வாழ்த் துரையில், “ஆண்டுதோறும் டிசம்பர் மாதத் தில் சங்கீத விழாக்கள் நடக்கின்றன. ஐந்து லட்சம் மக்கள் பங்கேற்கிறார்கள். அங்கும் தமிழில் பாட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக் கிறது. உயர் தொழில் நுட்பம் இன்று புதிய சந்தையை உருவாக்கி வருவது வெளிப்படை. தமிழிசையை உயர்த்துவது குறித்த புதிய சவால்களை இக்கருத்தரங்கம் வழங்கி யிருக்கிறது” என்றார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தமிழிசை வாணர் டி.கே.எஸ். கலைவாணன், “நாடக மேடையில் தமிழிசை” என்னும் தலைப்பில் உரையாற்றினார். “தமிழிசை வளர்ச்சிக்கான பணியை சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக மேடை தொடங்கி டி.கே.சண்முகம் அவர் களின் நாடக கம்பெனிகள் சிறப்பாகச் செய்து வந்தது. அக்காலத்தில் நடைபெறும் நாடகங் களில் இசைக்கப்படும் பாடல்கள் பாட்டுப் புத்தங்களாக வெளிவருவதும், அது உடனடி யாக விற்றுத் தீருவதும், தமிழிசைக்கான ஆதரவு மக்களிடையே எப்படி இருந்தது என்பதற்கு நல்ல உதாரணம். அப்பொழுது நாடகம் நடிக்க வேண்டும் என்றால் நன்றாக தமிழ் உச்சரிப்பும், பாடலும் இருந்திருக்க வேண்டும். கிட்டப்பா, டி.ஆர்.மகாலிங்கம், கே.பி.சுந்தராம்பாள் ஆகி யோர் நாடக மேடையிலிருந்து தமிழிசை வளர்த்தார்கள். திரைப்படப் பாடல்களுக்கு ரீடேக் உண்டு. நாடகத்தில் பாடுபவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. தமிழிசைக்கான அரிய பணியை நாடக கலைஞர்களே செய்து வந்தார் கள்.”
இக்கருத்தரங்கில் புதுச்சேரி முஎச செயலா ளர் கவிஞர் ச.அன்பழகன் வரவேற் புரையாற் றினார். தமிழகம், புதுச் சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர்களும், தமிழறிஞர்களும் பங் கேற்றனர். தமிழிசை குறித்த புதிய சிந்தனை யோட்டம் புதுச்சேரியில் தொடங்கியிருக்கிறது.
- புதுச்சேரி லெனின் பாரதி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|