மொழியியல்
‘கணக்கும் வழக்கும்’
ஏ.சி.எஸ்.மணி
உலக மொழிகளுள் தமிழ் பல சிறப்பு இயல்பு களைப் பெற்றுள்ளது. அவைகளுள் ஒன்று மிகக் குறைந்த எழுத்துக்களால் ஆகிய சொற்களைப் பெற்றுள்ளமை.
ஓரெழுத்து, ஈரெழுத்தாலாய சொற்களே மிகுதியானவை. மூவெழுத்துச் சொற்கள் சிறுபான்மையே. கரி, புலி, மான், ஆடு - விலங்கினங்கள்.
செடி, கொடி, மரம், இலை, பூ, காய், கனி - தாவர வகைகள்.
சாத்தன், சாத்தி, கொற்றான், கொற்றி - விரைவுப் பெயர்கள்.
நங்கை, நம்பி - மக்கட் சிறப்புப் பெயர்கள்.
தீ, நீர், வளி, விண் - பருப்பொருள்கள்.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் - நுண்பொருள் கள்.
இவையனைத்தும் ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெ ழுத்து, நான்கெழுத்துக்களால் இருப்பதைக் காணலாம்.
தொல்காப்பியம் இந்நால்வகையினையும் மூவகைப் பகுப்புள் வைத்து ஓதுகிறார்;
“ஓரெழுத் தொருமொழி, ஈரெழுத் தொரு மொழி
இரண்டிறந்திசைக்கும் தொடர்புமொழி உட்பட
மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே”
என்பது தொல்காப்பியம். (தொல் எழுத்து 45)
ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, தொடர்பு மொழி என்பன அவர் பகுப்புகளாகும். இவற்றுள் தொடர்மொழி என்பது பெரும்பாலும் மூவெழுத்து மொழிகளையும், சிறுபான்மை நான்கெழுத்து மொழி களையும் குறிக்கும். குற்றுகர ஈற்றில் முடியும் மக்கள் பெயர்கள் முதல் நான்கெழுத்துக்களாய் பெற்றிருக்கும்.
ஓரெழுத்தொரு மொழிகள் அனைத்தும் நெட் டெழுத்துக்களால் ஆகியவை. குற்றெழுத்துக்கள் ஓரெழுத்து மொழியாவதில்லை. “நெட்டெழுத்தேழே ஓரெழுத் தொருமொழி” தொல். எழுத்து 42.
“குற்றெழுத்தைந்தும் மொழி நிறை பிலவே” தொல். எழுத்து -43. என்பது தொல்காப்பியம்.
‘நொ’ , ‘து’ எனும் இரு குறில்களும் ஓரெழுத்து ஒரு மொழிகள் என்பார் நான்னூலார். ‘நோ’ என்பதின் விகாரவடிவே ‘நொ’ ஆகலானும், ‘துய்’ என்பதன் விகாரவடிவே ‘து’ ஆகலானும் அவர் கூற்றுப் பொருந்துவதன்று.
நன்னூல், தொல்காப்பிய உரையாசிரியர்கள் காட்டிய சான்றுகளுள் நான்கு எழுத்திற்கு மேற்பட்ட தமிழ்ச்சொல் ஒன்றுகூட இடம்பெறவில்லை என்பது சிந்திக்கத்தக்கது.
ஐந்தெழுத்து முதலாய்க் காட்டும் சான்றுகள் அனைத்தும் வடசொற்கள் என்பதனை மறுத்ததற் கில்லை.
ஒட்டகம், குஞ்சரம் - இச்சொற்கள் தொல்காப்பியத் தில் இடம்பெற்றுள்ளன.
ஒட்டகம் = ஒட்டு+அகம் எனும் இருமொழிச் சேர்க்கையாகும். அதன் வயிற்றுக்குள் நீர்ப்பை ஒன்று ஒட்டியிருந்தலை அறியாதார் இலர். அதனால், ஐயெழுத் தொரு மொழி எனல் - பொருந்துவதன்று.
‘குஞ்சரம்’ என்பது வடமொழி. கரி, பிடி, யானை முதலியவை குஞ்சரத்தை உணர்த்தும் தமிழ்ச்சொற்கள். அவை, ஈரெழுத்துக்கள் அடங்கி நிற்றலைக் காணலாம்.
மொழி நிலைக்கு ஏற்பச் செய்யுள் அசை நிலை களும் அமைந்திருத்தலைக் காணலாம். நான்கசை களுள்....
நேரசை - ஓரலகு; நிறையசை - ஈரலகு; நேர்பசை - மூவலகு; நிரைபசை - நான்கலகு என்கிறார் இளம்பூரணார். இதனால் நான்கு அலகிற்கு மேற்பட்ட ஒரு சொல் தமிழில் இல்லை என்பதும் தெளிவாகிறது.
ஏகாரம், ஐகாரம் ஒவ்வொன்றும் இரண்டு மாத்திரையும் ஒரு மாத்திரையும் பெறவல்லன. (தொல்.சொல். 286; எழுத்து. 57).
தமிழில் ‘சில-பல’ என்பதொரு வழக்குண்டு. சில என்பது இரண்டையும், பல என்பது இரண்டுக்கும் மேற் பட்டதையும் உணர்த்தும்.
இலக்கணம், இலக்கியம் என்பன ஆறாறு எழுத்துக்களால் அமைந்துள்ளனவே? இவைகள் வட சொற்கள் எனின் அவற்றுக்கு நேரான தமிழ்ச்சொற்கள் யாவை?
அவனுக்கு என்னடா தெரியும்? கணக்கு வழக்கு தெரியுமா அவனுக்கு? அவனுக்கு எப்படி பெண் கொடுப்பது? அவனுக்குத்தான் கணக்கு வழக்குகூட தெரியவில்லையே?-
இவ்வாறு ஊர்ப் புறங்களிலே (கிராமங்களிலே) கல்லா மக்களிடையே அவை வாழ்ந்து வருகின்றன. இக்கணக்கு வழக்கு என்னும் தொடரே ஒரு காலத்து ‘இலக்கிய இலக்கணம்’ நிற்குமிடத்தில் நின்று ஆட்சி செய்து வந்தது என அறியலாம்.
மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்னும் தொடர் களிலே கணக்கினைக் காணலாம். கணக்கு என்பது இலக்கியத்தைச் சுட்டுதல் வெளிப்படை. கணக்கு என்பதற்குக் ‘கருத்து’ என்று பொருள். அவன் என்ன கணக்காய் நடக்கிறான்? அவள் என்ன கணக்காய் குடும்பம் நடத்துகிறாள்? எனும் தொடர்களில் அப் பொருளைக் காணலாம்.
‘கண்ணி நெறித்தே’, ‘காமம் கண்ணிய’, முதலாய தொல்காப்பிய தொடர்களிலும் அப்பொருளைக் காணலாம்.
“....................................................................................................................கணக்கினை
முற்றப்பகலும் முனியாது இனிதோதிக்
கற்றலின் கேட்டல் நன்று’
என்பது பழமொழி நானூறு.
“கணக்காயனார் மகனார் நக்கீரனார்” என்னும் தொடரை அறிவாதாரில்லை. இவ்விடங்களில் கணக்கு என்பது இலக்கியத்தைச் சுட்டுதல் வெளிப்படை.
‘வழக்கு’ என்பது இலக்கணத்தைச் சுட்டும். ‘வழங்கு’ என்பதன் மெல்லொற்று வல்லொற்றாய்த் திரிந்து ‘வழக்கு’ என்றாயிற்று.
ஒருமொழி எவ்வாறு வழங்குகிறதோ அதனை அவ்வாறே எடுத்து ஓதுவது வழக்கு.
‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
‘எண்ணெழுத் திகழேல்’
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு’.
என்பனவற்றில் இடம்பெறும் ‘எண்’ என்பது இலக்கியத்தையும், ‘எழுத்து’ என்பது இலக்கணத்தை யும் சுட்டும்.
‘எண்’ என்பதற்கும் ‘கருத்து’ என்பதே பொருள். எண்ணினான் எனும் வினைச்சொல்லில் அதன் பொருளைக் காணலாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|