Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
அக்டோபர் 2008
பேரா. நா.வானமாமலை எழுதிய மூன்று நூல்கள்

பண்டைய வேத தத்துவங்களும், வேத மறுப்பு பவுத்தமும்
- ஒரு மார்க்சிய அறிமுகம்


பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் இந்நூல் மார்க்சிய கண்ணோட்டத்தோடு வேதங்களை ஆய்வு செய்வோருக்கு மிகவும் பயன்படக்கூடிய சிறிய நூல். இந்தியாவின் புராதன இந்து தத்துவங்கள், அதன் உப பிரிவுகள், வகுப்புமுறைகள், மந்திரம் - வழிபாடு, பிற்கால வேத பாடல்கள், புதிய அறிவு, சாங்கியம், ஜடபரிணாம வாதம், இந்திய லோகாயதவாதம், அதனுடைய நிறைகுறை, பவுத்த மதத்தின் வரலாறு, ஆதிசங்கரரின் தத்துவ விசாரம் என ஏராளமான விஷயங்களை மிகச் சுருக்கமான முறையில் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். நல்ல பல உதாரணங்களோடு ஒரு கடினமான விஷயத்தை எளிதான முறையில் படித்துப் புரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும்.

மார்க்சியம் நோக்கில் இந்து தத்துவங்களையும் அதன் உப பிரிவுகளையும் பற்றி புரிந்து கொள்வதோடு அவற்றிற்கு மாற்றான லோகாயதத்தை எவ்வாறு படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். மார்க்சியத்தை அடிப்படையாக வைத்து வேதகால தத்துவத்தைப் படிப்போருக்கும், எடுத்துக்கூறுவோருக்கும் மிகவும் பயன்படக்கூடிய நூல்.
விலை ரூ. 35

இந்திய நாத்திகமும்மார்க்சிய தத்துவமும்

பண்டைய வேதங்களும், மதங்களும் எடுத்து வைக்கக் கூடிய கருத்து முதல்வாதக் கருத்துக்களை விஞ்ஞானப்பூர்வமாக மறுத்துச் சொல்லும் ஏராளமான விபரங்களை இந்நூலில் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். நாத்திகம் பற்றி மார்க்சியவாதிகளின் விமர்சனம் என்ற தலைப்பில் இந்நூலில் பேராசிரியர் வானமாமலை எழுதியிருக்கக்கூடிய விஷயங்கள் பொருள் பதிந்தவை. ஹெகல், ஃபயர்பாக் போன்ற பொருள்முதல்வாத, ஆன்மீகவாதிகளின் கருத்துக்களை மார்க்ஸ் ஆராய்ந்து விமர்சிப்பதும், மனிதன்தான் மதத்தைப் படைத்தான் என்பதுடன், இயற்கை மீது தனது செயலைத் துவக்கி இயற்கையை கட்டுப்படுத்தி, தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை நெறிப்படுத்துகிறான் என்ற மாமேதை ஏங்கெல்சின் கருத்துக்களையும் மிக அழகாகப் படம்பிடித்திருக்கிறார்.
விலை ரூ. 25

தமிழகத்தில் சாதி - சமத்துவ - போராட்டக் கருத்துக்கள்

தாமரை, ஆராய்ச்சி என இரண்டு இதழ்களில் பேராசிரியர் நா.வானமாமலை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தமிழகத்தில் உள்ள சாதிகளையும், அவை தம்மை உயர்வானதாகக் காட்டிக் கொள்ள செய்த முயற்சிகளையும் மிக அருமையாக இந்நூலில் சித்தரித்துள்ளார். இதற்குரிய ஏராளமான ஆதாரங்களையும் அவர் இதில் கொடுத்துள்ளார்.

தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் இக்காலத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற்று வருகின்றன. இதன் பொருள், இன்னும் தீண்டாமைக் கொடுமைகள் ஆங்காங்கு தமிழகம் முழுவதும் தலைதூக்கி வருகின்றன என்பதே ஆகும். இப்படிப்பட்ட சூழலில் தொழில்முறையில் இருந்த தொழிலாளர்களும், விவசாயிகளும் எப்படியெல்லாம் சாதிய கூட்டிற்குள் அடைக்கப்பட்டார்கள் என்பதும், அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் தங்களை உயர்வானவர்களாகக் காட்டிக் கொள்ள எவ்வாறெல்லாம் முயற்சி செய்தார்கள் என்பதையும் மிக அருமையாக ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.

குறிப்பாக, 1818ல் சித்தூர் ஜில்லா அதல்லாத்துக் கோர்ட் தீர்ப்பை பற்றிய விபரங்களை அவர் குறிப்பிட்டிருப்பது சுவையானதாகும். இதேபோன்று, இரும்பு, மரம், செம்பு முதலியவற்றைப் பயன்படுத்தி ஆயுதங்களும், உபயோகப் பொருட்களும் செய்யக் கூடிய ஆசாரிகளுக்கும், பிராமணர்களுக்கும் இடையே எழும் மோதலையும் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்.

இதே போன்று வேளார்கள், செட்டியார்கள் போன்றவர்கள் தங்களை மேல்சாதிக்காரர்களாக காட்டிக் கொள்ளவும், நாடார்கள் தாங்கள் மன்னர் பரம்பரை என்பதை எடுத்துக் கூறச் செய்துள்ள ஆதார ஏற்பாடுகளையும் அழகாகச் சொல்லியுள்ளார். பெரியாரின் நாத்திகக் கொள்கையுடன் மார்க்சிய நாத்திகத்தை இந்நூலில் அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்று பதிப்பாளர் குறிப்பில் கூறியிருப்பது மிகவும் பொருத்தமானது. அவசியம் படித்து உணர வேண்டிய உரிய காலத்தில் வெளிவந்துள்ள நூலாகும்.

விலை ரூ. 30, அலைகள் வெளியீட்டகம், 4/9-4வது முதன்மைச் சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை - 600 024


கு.சின்னப்ப பாரதி எழுதிய தெய்வமாய் நின்றான் (ஒரு காவியம்)

இன்று இளம் வாசகர்கள் கு.சின்னப்ப பாரதியை ஒரு நாவலாசிரியர் என்று மட்டுமே அறிந்துள்ளனர். அவர் நாவலாசிரியர் மட்டுமல்ல; ஒரு சிறந்த கவிஞரும்கூட. மேலும், பல சிறுகதைகளும் எழுதியிருப்பதால் அவர் ஒரு சிறுகதையாசிரியரும்தான் என்றுகூடச் சொல்ல லாம். இவ்வாறு, நாவல் - சிறுகதை - கவிதை என முப்பரிமாண இலக்கியகர்த்தா அவர்.

சின்னப்ப பாரதியின் “தெய்வமாய் நின்றான்” காவியம் முதல் பதிப்பாக 1965ம் ஆண்டு வெளிவந்தது. 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தக் காவியம் தற்போது இரண்டாம் பதிப்பாக வந்துள்ளது. “மக்களின் உணர்வைப் புரிந்து கொள்வதில் அவர்களிடம் ஒரு மாணவனைப் போல் குந்தி பணிவுடன் வாழ்க்கைச் சிக்கலைப் படித்துக் கொள்வதில் நான் தணியாத வேட்கை கொண்டுள்ளவன்” என்று இந்நூலின் “என்னுரை”யில் உள்ள கு.சி.பா.வின் கூற்றின் மெய்ம்மையை அவரது அனைத்துப் படைப்புகளிலும் காண முடியும். அண்மையில் வெளிவந்த அவரது “சுரங்கம்” நாவல் சுரங்கத் தொழிலாளரின் வாழ்க்கையைப் பற்றியதாகும். அவர்களது வாழ்க்கைச் சிக்கலை ஒரு மாணவனைப் போல் படித்துக் கொண்டு நாவல் படைக்க மேற்கு வங்கத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்திற்கும், சுரங்கத் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கும் நேரில் சென்று, அவர்களின் வாழ்க்கை, உழைப்பு, கலாச்சாரம், குடும்பம் முதலானவற்றைக் கண்டறிந்து வந்தார் கு.சி.பா.
இப்போது அவரது “தெய்வமாய் நின்றான்”.

“மாட்டினை மேய்ப்பான்; வீட்டை
மகிழ்வோடு காப்பான்; கொட்டம்
கூட்டுவான்; வாசற் சேர்ந்த
குப்பையைச் சுத்தம் செய்வான்
காட்டிய திசையில் ஓடிக்
கவனமாய் வேலை செய்வான்”
- பண்ணையடிமை வேலைக்குச் சிறுவன் கருப் பனை அழைத்துச் சென்று, பண்ணையாரிடம் அறி முகத்தோடு வாக்குறுதியும் சொல்லி அவனை ஒப்படைக்கிறாள் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தாய். கால ஓட்டத்தில் இந்தக் கருப்பன் சந்திக்கிற சோதனை களும், வேதனைகளும், அதனுடன் கூடவே அவன் அடைகிற வளர்ச்சியும் பரிணாமமுமே இந்தக் காவியம். பண்ணையடிமை வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிய கருப்பன் புரட்சிகர அரசியல் போதம் பெற்று, விவசாயத் தொழிலாளர்க்குத் தலைவனாகி, அந்தப் பண்ணையாரையே வந்து சந்திக்கிறான் ஒரு தலைவனாக - தொழிலாளர்களுக்குக் கூலி உயர்வுக்காக!
“நாலைந்து பேர்களோடு
நடந்துமே கவுண்டர் தம்மை
காலையில் பார்க்க ஓர்நாள்
கருப்பனும் சென்று சேர்ந்தான்
வேலைக்குக் கருப்பன் அங்கு
வேண்டியே இருந்து சென்று
சாலவே பல்லாண் டுகள்
தாண்டிய பின்னர் இன்றே
கண்டிடச் செல்கின் றான்
காலத்தின் மாற்றம் என்னே!”
- என்று அடிமை கருப்பன் அடைந்த மாற்றத்தை வியந்து கூறுகிறார், காவிய ஆசிரியர் கு.சி.பா.

இந்தக் காவியக் கதைச் சம்பவங்களை இந்திய சுதந்திரப் போராட்டக் காலப் பின்புலத்துடன் சொல்லிச் செல்கிறார். காவியப் படைப்புக்காக அவர் கையாண்டுள்ள கவிதை வடிவம் ஆசிரிய விருத்தம். அறுசீர், எண்சீர் விருத்தங்களோடு, வெளிவிருத்தம் எனும் பாவகையும் கலந்து தெய்வமாய் நின்றானைப் படைத்துள்ளார். மரபு மிரட்டவில்லை. சுகமான வாசிப்புக்கேற்ற எளிய சொற்கள், எளிய சந்திகள். காவிய காலத்திலும், பக்தி இலக்கியக் காலத்திலும் முக்கியமாய் இந்தப் பாவடிவத்தையே நமது பெரும் புலவர்கள் கையாண்டனர். அந்த வடிவத்தை தமது காவியத்திற்கும் பயன் படுத்தியுள்ளார் கு.சி.பா.

தற்காலத்தில் வெளிவந்துள்ள ஒரு சிறந்த காவியம் “தெய்மாய் நின்றான்”. இந்தப்புதுக் கவிதைக் காலத்தில் கருத்தில் புதுமை வைத்து தற்காலச் சொற்களில் சுவையும் உணர்ச்சியும் சேர்த்து மரபிலும், சாதிக்க முடியும் என்பதற்கு இக்காவியமும் ஓர் எடுத்துக்காட்டு.

வெளியீடு : பாவை. பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014 விலை ரூ. 90

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com