நந்தன் கவிதைகள்
நம்பிக்கை
தொலைத்துவிட்ட
கனவுகளின் வழி
பயணப்படுகிறது
வாழ்க்கை
தவித்தழும்
மனங்களை
களவாடிக் கழியும்
அன்றாடப் பொழுதுகள்
ஆற்றாமையோடு
போராட
வாய்த்துவிட்டபிறகும்
உள்ளிருந்து கனக்கும்
விட்டுத் தந்த மிச்சம்
அந்தி மாலையும்
இளம் காலையும்
உருக்கொள்கிற
கணங்களை
மறக்கடித்து நீளும்
காலம்.
எந்திரங்களின்
ஸ்பரிசங்களில்
எஞ்சியவைகளோடு
கர்வப்பட்டுக் கொள்கிற
பின்னும்
உழைப்பினிடை வழிகிற
ஈர வியர்வையை
ஒத்தியெடுக்கும்
பாவாடைத் தாவணிகள்.
அதன்
உப்பரிந்த தடங்களில்
படரும்
நாளைய நம்பிக்கைகள்.
வலி
அயர்ச்சியை
தந்துவிடும்
வலிகளால்
உதிர்ந்து விடுகின்றன
இரண்டொரு சொற்கள்
உனக்கான
பணிவிடைகளையோ
குழந்தைகளின்
கேவலையுமோ
மறந்தும்
இருந்துவிடும் படியாகிறது
அத்தருணங்களில்.
பிரயோகித்த
வார்த்தைகளை
என்னை மறந்துமிருந்த
சூழலை
நீ கைகொண்டு
எதிர்ச் சொல் புரிகிற
அற்ப சந்தோஷத்தில்....
எங்ஙனம்
உணர்த்திவிட முடியும்?
ஈரத்தகிப்பில்
நானுறும்
குறுகுறுப்பை
உடைந்து உருப்பெறும்
வேதனையை....
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|