சிந்தனைச் சிற்பி சிங்கார வேலு வாழ்வும் சிந்தனையும்
1860 பிப்ரவரி 18இல் சென்னையில் ஒரு நடுத்தர மீனவர் குடும்பத்தில் பிறந்த தோழர் ம.சிங்காரவேலர் ஒரு வழக்கறிஞர்; தேசிய இயக்கத்தில் தீரமாய்ப் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர். சுதந்திரப் போரில் சிறையேகியவர். தொழிலாளர் தலைவர்; தமிழகத்தின் முதலாவது கம்யூனிஸ்ட்; 1923இல் சென்னையில் செங்கொடியேற்றி ஊர்வலத்தோடும் பொதுக்கூட்டத்தோடும், இந்தியாவிலேயே முதன்முறையாக மேதினம் கொண்டாடியவர்; பகுத்தறிவாளர்; பேரறிஞர்; மார்க்சியச் சிந்தனையாளர்; 60 ஆண்டுக்காலம் அரும்பணிகள் ஆற்றிய பெருமகனார். இவர் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இங்கே-
சமதர்ம சமூகத்தில்...
பொருளாதார வித்தியாசமற்ற சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமத்துவம் உண்மையாக ஏற்படும். காலை முதல் இரவு வரை அடுப்பங்கரையில் உழைக்கவும் துர்ப்பாக்கியம் பெற்ற குடும்பங்களில் என்ன அன்பு, என்ன இன்பம் கிடைக்கும்? ஏழைக்குடும்பங்கள் இருக்கும் வரை, மகாராஜா குடும்பங்கள் இருக்கும் வரை உலகில் ஒருவருக்கும் கவலை இல்லாமல் இராது. பணமில்லாத கவலை எளியோனுக்கும், பணம் படைத்த கவலை (திருடர், கொள்ளைக்காரர், கொலைகாரர்களால் நேரிடும் பயத்தால் வரும் கவலை) பொருளாளிக்கும் இருந்தே வரும். ஒருவன் தயவால் கொடுக்க மற்றொருவன் இல்லாமையால் வாங்க அதாவது தருமம் செய்யவும், தருமத்தைப் பெறவும் நேரிடும் துர்ப்பாக்கியம். இந்தப் பொருளாதார வித்தியாசத்தால்தான் பண்டைக்காலம் முதல் உலகை நாசமாக்கி வந்திருக்கின்றது. புருஷன் கொடுக்கவும், பெண் வாங்கவும் நேரிட்ட வித்தியாசமே ஆணுக்குப்பெண் தாழ்த்தப்பட்டதற்குக் காரணம். இந்தப்பொருளாதார வித்தியாசத்தால் நேர்ந்துளதென அறிக. இந்தப் பொருளாதார வித்தியாசம் உலகிலோ, எந்தச் சமூகத்திலோ, இருக்கும் வரை ஆணுக்குப்பெண் தாள்பணிந்தே நடக்க வேண்டிவரும். இந்தப் பொருளாதார வித்தியாசத்தை நீக்காமல் ஆணும் பெண்ணும் சரி சமத்துவம் பெற வேண்டும் என்பது பிறவிக் குருடன் சூரிய தரிசனம் செய்த கதையையொக்கும்.
சமதர்ம சமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் அமைக்கப்படும் வேலையில் வித்தியாசமிராது. ஆணும் பெண்ணும் சரிசமத்துவமாகவே எந்த வேலையும் செய்ய வருவார்கள். வேலைக்குரிய ஈடும் இருவரும் சரிசமானமாகவே வாங்குவார்கள். வாழ்வுக்கு வேண்டிய அவசியமானவைகளுக்கு இருவரும் பாத்திரமுள்ளவர்களாவர். ஒருவனுக்கு மற்றொருவன் தாழ்ந்து வாங்க வேண்டுமென்பதே சமதர்ம சமூகத்தில் கிடையாது. ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள பொருளாதார வித்தியாசம் மறைந்தவுடன் பெண்கள் அன்றுதான் தங்கள் பிறப்புரிமைகளாகிய இல்லற சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பெறுவார்கள். அந்தவித்தியாசம் ஒழியும் வரை பெண்களின் அடிமைத்தனம் நீங்கவே நீங்கா. மற்ற முயற்சிகள் யாவும் காலப்போக்கே. ஆதலின் சமதர்ம சமூகத்தில் ஒன்றில்தான் பெண்கள் ஆணுடன் சரிசமத்துவமும் பெற முடியும்.
சகலருக்கும் போதுமான சமத்துவ உணவு, ஆடை, வீடு கிடைக்க வேண்டுமானால் அவை சமதர்ம ஆட்சியில்தான் (ளுடிஉயைடளைவ சுயத) பெற முடியும். தொழிலாளருக்கும், விவசாயிகளுக்கும் ஓய்வு நேரம் கிடைக்க வேண்டுமானால் சமதர்மத்தில்தான் கிடைக்கும். சகலரும் உயர்தரக் கல்வியைப் பெற்று மூட ஜாதி, மத நம்பிக்கைகளிலிருந்து விடுபட வேண்டுமானால் சமதர்ம ஆட்சி மூலமாகத்தான் மூடியும். பெண்கள் ஆணுடன் சமத்துவம் பெற வேண்டுமானால் சமதர்மத்தில்தான் அனுகூலப்படும். இனிவரும் சந்ததியினரைப் பஞ்சத்திலிருந்தும் பட்டினியிலிருந்தும் நோயிலிருந்தும் விடுவிக்க வேண்டுமானால் அது சமதர்மத்தில்தான் (ளுடிஉயைடளைஅ) கூடி வரும், நமக்குப் பின்னால் உலகம் ராஜத் துவேஷ மோகமற்று, சண்டையற்று, போரற்று அன்புடன் கூடி வாழ வேண்டுமானால் சமதர்மத்தில்தான் முடியும். இப்பேற்றைப் பெற தற்கால பொருளாதார வித்தியாசத்தினை முற்றிலும் மாற்ற வேண்டிவரும். இக்கொடிய திட்டத்தை மாற்றும் மார்க்கத்தினை இனி எடுத்துக்காட்டுவோம்.
(குடி அரசு 8.1.1933)
("சிந்தனைச் சிற்பி சிங்கார வேலு வாழ்வும் சிந்தனையும்" நூலிலிருந்து)
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|