பா.தேவேந்திர பூபதி கவிதைகள்
பொய்க்கால்களுடன்
குதிரைவேடமிட்டுத் திரியும்
கூத்துக்காரனிடமிருக்கிறது
பழைய நூற்றாண்டுகளைக் கடந்து வந்த சாலை
மனமொடிந்து
பிள்ளைகளைக் கிணற்றடியில்
விட்டுவந்ததை இன்னமும் செய்கிறார்கள்
தாய்மார்கள் ஒவ்வொரு கோடையிலும்
எத்தனைதான் பஞ்சம் வந்தாலும்
மாடனுக்குக் குறைவில்லை
போதாக்குறைக்கு மனித ரத்தமும்
ஒவ்வொரு கோடையிலும்
முத்துப்பேச்சியும் மாரியாத்தாளும்
சாமியாடின தெருக்களில்
உருளப்போகிறது வெள்ளைக்கார சீமானின்
லொடலொடக்காத பென்ஸ் கார்
பிள்ளைகளை தாய்மார்களினி
புறந்தள்ள மாட்டார்களென்றாலும்
அய்யனாருக்கினிமேல்
தேங்காய் பழம்தான்
புள்ளவரம் கொடுத்த சாமிக்கோ
கூத்தாடி கழட்டிவச்ச
பொய்க்கால்கள்
முத்துப்பேச்சிக்கும் மாரியாத்தாளுக்கும்
டைம்கீப்பர் மட்டும்தான்
ஆதிமூலம்
பா.தேவேந்திர பூபதி
பாலாலிக் கடலிலே பதினாறாம் ராவிலே
மச்சக்கண்ணிக மாருட மாணிக்கப் பொன்னுகொண்டு தராமோ
வள்ளமும் அலையும்
நதியோரப் பசுமையும்
நிழலாடும் பாடல் ஒன்று
எளிதாய்க் கடந்து வந்த
நிலத்தின் நினைவாய்
பால்யத்தை தாலாட்டுகிறது
தகழியின் காதல் நிலம்
விரிந்த கதைகள்
நானிந்த தமிழ் நிலத்தின்
இருமையில் கோவலன் நீங்கிய
பத்தினிக் கோட்டம் பயின்று
உழல்கிறேன்
கதை சொல்லிகள் கவிஞர்களுடன்
என் வரலாறு எங்கே பொருந்துகிறது
நான் எந்த இனக்குழு
எந்த அரசியல் பேசுவது
யாரோடு இணைவது
சீத்தலைச் சாத்தனார் எனக்கு என்ன உறவுமுறை
வள்ளத்தோள் எழுத்தச்சன்
வள்ளுவர் தொல்காப்பியன்
எந்த வகுப்பு நான்
எனது பிள்ளைக் காலம் போயிற்று
எனது பிள்ளையின் காலத்தில்
ஒரு இலக்கியத் தந்தையை அவன்
நூலகத்தின் வழியே
எங்ஙனம்
சொல்லிக்காட்டுவான்.
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|