திருட்டு
- ஸ்ரீரசா
திருடர்கள் இருக்கிறார்கள்
திருடர்கள் இருக்கிறார்கள்
திருடர்களால் எல்லாம்
திருடப்படுவதனால்
திருடர்கள் இருக்கிறார்கள்,
திருடர்களிடமிருந்து
திருடும் தேவையில்
திருடர்கள் இருக்கிறார்கள்,
திருடர்களுக்குள்ளேயே
திருட்டு நடத்தவும்
திருடர்கள் இருக்கிறார்கள்,
சேரும் உழைப்பைச்
சேர்த்துத் திருடத்
திருடர்கள் இருக்கிறார்கள்.
திருட்டுக்கொரு
தெய்வம் வைத்து
திருட்டுத் தெய்வம்
தினமும் வணங்கி,
திருட்டுத் தொழிலுக்குத்
திருடர்கள் செல்கிறார்கள்.
திருட்டுச் சமூகத்தில்
திருட்டை ஒழிக்கத்
துறையொன்றும் வைத்துத்
திருடுகிறார்கள்.
அதிகாரபூர்வமற்ற
திருடர்களைப் பிடிக்க
அதிகாரமுள்ள
திருடர்கள் அலைகிறார்கள்.
திருடனைப் பிடிக்கும்
மந்திரப் போர்வையில்
பறந்து பறந்து பந்தாவாய்த்
திருடுகிறார்கள்.
பணம், பொருள், புகழ்,
மண், மனிதம், சுகம்,
விலங்கு, தண்ணீர், நாடுகள்,
பெட்ரோல், ஆயுதம், அதிகாரம்,
எழுத்து, கலை, பண்பாடு,
உழைப்பு, நட்பு, உதிரம்,
அன்பு, இதயம், குடும்பம்…...
இப்படி எதையேனும் ஒன்றை
வசமாக்கும் முனைப்போடு
எப்போதும் எல்லோரும்
எதையேனும்
திருடிக் கொண்டேதான்
இருக்கிறார்கள்.
திருட்டுக் கொடுத்தவரும்
திருடியவரும்
விட்டதை பிடித்ததை
விட்டுப் பிடித்தபடி,
திருட்டு விளையாட்டின்
திருட்டுச்சுகம் அனுபவித்து,
திருட்டின் நியாயங்களை
திருட்டின் தர்மங்களை
திருட்டின் போதனைகளை
திருட்டுத் தனமின்றி
நேரடியாய் உபதேசித்து,
கணந்தோறும்
தினந்தோறும்
திருடி உயிர்க்கிறது
திருட்டுச் சமூகம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|