புத்தகம்
- ஆங்கரை பைரவி
ஆறாம் அறிவைக்
கூர்மைப்படுத்தும்
இன்னொரு ஆயுதம்
புத்தகம்.
புத்தகம்கூட கைத்தடிதான்
தூங்குபவனைத் தட்டி எழுப்பும்
விழுந்தவனைத் தூக்கி நிறுத்தும்.
பார்வைக்கு மட்டும்
அழகாய் இருக்கும் புத்தகங்களை
பார்க்கலாம் நீங்கள் அடிக்கடி
கையேந்தி பவன்களில்.
படிக்கின்ற புத்தகத்தால்
பாடம் நடத்துவோம்
படித்த புத்தகங்கள் பல
நமக்குப் பாடம் நடத்தும்.
சில புத்தகங்கள்
நம்மை அசைத்துப் பார்க்கும்
புரட்டிப் போடும்.
அலைக்கழிக்கும்.
முகம் சுளிக்க வைக்கும்.
சில வேளைகளில்
புத்தகங்களுக்கும் ஒரு
வழிப்பாதைதான்
இரவல் போனால்
திரும்புவதில்லை.
எல்லாப் புத்தகங்களையும்
மனிதன் வாய்விட்டு
வாசிக்கிறான்.
மனிதன் என்ற புத்தகத்தை
காலம் வாசிக்கிறது
கடைசி பக்கத்தை மட்டும்
மிகவும் ரகசியமாய்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|