நூல் மதிப்புரை
சாதி லிங்கம்
ஸ்ரீராசா
எல்லா கலை வடிவங்களுமே சமூகத்தின் முரண்பாடுகளைப் பிரதிபலிப்பவை தான். இந்த முரண்பாடுகளின் மூலமாக அவை ஒரு அரசியலை முன்வைத்து வாசகரிடம் பேசுகின்றன. இந்த அரசியலின் வெளிப்பாடு நுண்மையாகவோ, பருண்மையாகவோ, அந்தந்தக் கலைப் படைப்புகளில் வெளிப்பாடு கொள்ளும். சமூக முரண்பாடுகளினால் அகவெழுச்சி கொள்கிற கலைமனம் தன் கலை வெளிப்பாடுகளை வாழ்பநுவங்களின் வழியே, அரசியலின் வழியே, தத்துவத்தின் வழியே, புராண இதிகாச நாட்டுப்புற இலக்கியங்களின் மறுவாசிப்பின் வழியே தகவமைத்துக் கொள்ளும். அப்படி தத்துவ அரசியல் ஞானத்தின் வழியே பேசப்புகுந்த கவிதைத் தொகுப்பாக ஸ்ரீரசாவின் சாதிலிங்கம் வெளிவந்துள்ளது.
உடலரசியலின் ஆணிவேராக உள்ள மனுஸ்மிருதியை நோக்கி தன் தாக்குதலைத் தொடுக்கிறது. அதுவும் குறிப்பாக மனுஸ்மிருதியின் வழியாக எழுந்த ஆணாதிக்கத்தை நோக்கி தன் அம்புகளை எய்கிறது. இது ஒரு புதிய முயற்சி. புதிய கோணம். உடலரசியலின் அடிப்படைக் கூறுகளைப்பற்றி எழுத முயலும் எவருக்கும் ஆண், பெண் உடற்கூறியலைப் பற்றி எழுதுவது தவிர்க்க முடியாது. எனவே,தான் மனுவின் வழியே பிறந்த வர்ணாசிரமம், வர்ணாசிரமத்தின் உயர்த்திப் பிடிக்கிற ஆணாதிக்கம், ஆணாதிக்கப் பெரும்பாறையின் கீழ் நசுங்கிப் போராடுகிற பெண்ணுடல், ஸ்ரீரசாவுக்குப்பாடுபொருளாகியிருக்கிறது.
உடலரசியலின் பிரதான அங்கங்களான லிங்கமும், யோனியும் இந்தக் கவிதைகளின் வழியே மனிதகுல வரலாற்றை மீள்பார்வை கொள்ள வைக்கின்றன. மற்றுமொரு கோணத்திலிருந்து உரத்த குரல் எழுப்புகின்றன. எதையும், நாய்போல், சாதிக்கொரு, வியாபார நேரத்தில், தாழ்த்தப்பட்டவர்தான், மானுட யோனிகளில், கொடூரர்களின், காட்டிலிருந்து, படைப்பின் கடவுளை, பாடப்படும் கதைகளாக, உயர் வர்ணப் பார்ப்பனலிங்கம் போன்ற கவிதைகள் மனுவை மீள்பார்வை செய்து புதிய கேள்விகளையும், புதிய வெளிச்சத்தையும் தருகின்றன.
சமீப காலத்தில் பெண் கவிஞர்கள் பெண்ணுடலரசியலின் வேதனைகளை தங்கள் கவிதைகளில் பகிர்ந்து கொண்டபோது ஏராளமான எதிர்ப்புக் குரல்கள் எழுந்து அமிழ்ந்தன. இப்போது ஸ்ரீரசா ஆணுடலரசியலின் அதிகார மையத்தில் வெடிவைத்து தகர்த்திருக்கிறார் இந்தக் கவிதைகளின் வழியே. இந்த கவிதைத் தொகுப்பு முழுவதையும் வாசித்து முடிக்கின்ற போது எல்லாக் கவிதைகளும் அறிவுத் தளத்தில் மட்டுமே இயங்குவதை உணர முடிகிறது. முற்போக்கு கவிஞர்களில் முக்கியமான கவிஞர் ஸ்ரீரசா. அவருடைய ஒவ்வொரு தொகுப்பும் ஒவ்வொரு விதம். இதுவும் ஒரு புதுவிதம். இதுவரை யாரும் தடம் பதிக்காத பாதையில் முதல் தடம் பதித்திருக்கிறார் கவிஞர் ஸ்ரீரசா. அதற்கேயுரிய பலகீனங்களோடும் பலத்தோடும். பாதை புதிது. பயணம் புதிது. கவிதாநுபவமும் புதிது.
- உதயசங்கர்
சாதிலிங்கம்
ஸ்ரீரசா
விலை ரூ.60
காலம் வெளியீடு
25, மருதுபாண்டியர் 4வது தெரு,
கருமாரியம்மன்கோவில் எதிர்வீதி,
மதுரை 625 002.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|