நூல் மதிப்புரை
கவிஞர் ஜனசிந்தன் எழுதிய பொறிகள்
மதுரையில் ரயில்வே ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜனசிந்தன். மனித நேயமும் முற்போக்குச் சிந்தனையும் கொண்டு தன் அனுபவம் சார்ந்து கவிதைகள் எழுதுபவர். அவரின் கவிதைகள் 'பொறிகள்' என்ற பெயரில் அண்மையில் தொகுப்பாக வெளிவந்துள்ளது.
நல்ல சந்தங்களின் சாயல் அமைந்த புதுக் கவிதைகள். சமூக முரண்களின் மீது அவருக்கிருக்கும் தீராத கோபம் தீயாகவும், கேலி - கிண்டல் வடிவங்கொண்டும் இன்னும் பல வகைகளிலும் வெளிப்படுகின்றன.
தமிழன் அரியணை ஏறிவிட்டான் - இனி
தமிழ் அரியணை ஏற வேண்டும்!
- என்கிற வரிகள் தமிழ் வாழ்த்தாக வெளிப்படுகிறது.
இனியொரு விதி செய்...
வீதியில் இறங்கு...
வாழ்வதற்காகப் போராடு!
- என்று தன் சக மனிதர்களை நோக்கி அழைக்கிறது ஒரு கவிதை.
வானத்துப் பறவைகள் மனித அவலங்களைப் பார்த்து மனம் வருந்தி இப்படிச் சொல்கின்றன ஒரு கவிதையில்:
நாங்கள் வானத்துப் பறவைகள்
பறப்பதும் பங்கிட்டு வாழ்வதும்
எங்கள் பண்பாடு!
- பறவைகள் இன்னும் சொல்கின்றன இப்படி:
விசாவுக்கு நாங்கள்
விண்ணப்பம் செய்வதில்லை.
விதைப்பதும் இல்லை
- அறுப்பது இல்லை
வேலை இல்லாத் திண்டாட்டமில்லை
- ஆனாலும் என்ன இருக்கிறதாம்?
மொழியுண்டு
காதலுண்டு!
தன்னம்பிக்கையுடனும், அறிவியல் பார்வையுடனும் நம்பிக்கை விதைக்கும் நல்ல பல கவிதைகள் அடங்கியது, இந்தப் பொறிகள்!
வெளியாகும் கவிதை -
வழியாகும் கவிதை
வழிகாட்டும் கவிதை -
வாழ்வாகும் கவிதை!
- என்கிற அவரின் இந்த வரிகளுக்கு ஏற்ப தொகுப்பெங்கும் மணம் வீசுகின்றன பல நல்ல கவிதைகள்.
- அரவரசு
முகவரி : ஜனசிந்தன், தமுஎகச செயலாளர், விளாங்குடி.
செல்பேசி : 93628 81290
விலை ரூ.25
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|