ஆசிரியர் பக்கங்கள்
நாடாளுமன்றத் தேர்தல்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் களமிறங்கிவிட்டன. ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது ஏமாற்றிய காங்கிரஸ் கூட்டணியும், நாட்டில் மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைத்து ரத்தக் களறியை உருவாக்கும் பாரதிய ஜனதாக் கூட்டணியும் இம்முறை மக்களால் நிராகரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த இரு அணிகளையும் எதிர்த்து வீழ்த்த மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கட்சிகள் மூன்றாவது மாற்று அணியை உருவாக்கியுள்ளன.
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளையும் அவர்களது கூட்டணிக் கட்சிகளே காலை வாரிவிட்டன. காங்கிரசை பீகாரில் லல்லுவும், உ.பி.யில் சமாஜ்வாதிக் கட்சியும் காலைவாரி விட்டன. மகாராஷ்டிராவில் பவார் காங்கிரஸ் கழுத்தைப் பிடித்து நெரிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசை மாநிலக் கட்சிகள் கைகழுவி வருகின்றன. பாஜகவை மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும், ஒரிசாவில் பிஜு ஜனதாதளமும் கைகழுவி விட்டன. வகுப்புவாத வெறித்தனம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதால் பாஜகவிடமிருந்து மாநிலக் கட்சிகள் ஒதுங்கி வருகின்றன. இது நாட்டிற்கு நல்லது.
மூன்றாவது அணி மாற்று அணியாக மக்களிடம் பிரபலமடைந்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், ஒரிசா போன்ற மாநிலங்களின் மதச்சார்பற்ற பெரிய கட்சிகள் மூன்றாவது அணியில் சேர்ந்துள்ளன. மேலும் சில மாநிலங்களிலும் கட்சிகளுடன் பேச்சு நடைபெற்று வருகிறது. இதை ஆதாரமாக வைத்து மார்க்சிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் மூன்றாவது அணி ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் மூன்றாவது அணி வெற்றியை நோக்கி அணி வகுத்துள்ளது.
******
ஆஸ்கார் விருது பெற்ற 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தையும் ஜெய் ஹோ பாடலையும் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி பெருத்த நம்பிக்கையுடன் பல கோடி கொடுத்து வாங்கி சி.டி.களை தயாரித்து வருகிறது. மில்லியனர் படம் பரிசுகளை வாங்கியதே தவிர படம் இந்தியாவில் ஓடவில்லை என்பதே உண்மை. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டும் தியேட்டர்களை விட்டு மூன்றாவது நாளே தூக்கப்பட்டுவிட்டது. காங்கிரசும் தேர்தலில்.....
******
இந்திராகாந்தி முதல் காந்தி பெயரை தங்கள் பெயருடன் ஒட்டவைத்துக் கொண்டு நேருவின் வாரிசுகள் சுரண்டி வருகிறார்கள். சோனியாவும்,மேனகாவும் கூட காந்திகளாகி விட்டனர். மேனகா பாஜக அமைச்சராக இருந்தவர். இப்போது அவரது மகன் வருண்காந்தி பாஜக வேட்பாளராகி சிறுபான்மை மக்களுக்கெதிராக விஷம் கக்கியுள்ளார். கையை வெட்டுவேன் - பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்றெல்லாம் பேசியது வீடியோவில் பதிவாகியுள்ளது. இவ்வாறு, பேசியது சரிதான் என்கிறார் சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே. வருணை தேர்தலில் நிற்க அனுமதிக்கக் கூடாது. கைது செய்ய வேண்டுமென ஜனநாயக சக்திகள் கூறியுள்ளன. இதன் மூலம் பாஜகவின் வகுப்புவாத வெறியும் அம்பலமாகியுள்ளது.
******
பாகிஸ்தான் - பயங்கரஸ்தான்
பாகிஸ்தான் நீண்ட காலமாக அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவ தளமாக இருந்து வருகிறது. இந்தியா, ஈரான், இராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கெதிராக சதித் திட்டம் தீட்டி அதை அமுலாக்கும் மையமாக பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. தலிபான் மற்றும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானில்தான் பயிற்சியளித்து அனுப்பியது. இதனால், பாகிஸ்தான் - பயங்கரஸ்தானாக மாறி நிற்கிறது. பயங்கரவாதத்தின் ஊற்றாய்த் திகழ்கிறது. பாகிஸ்தான் தற்போது பல பயங்கர மிருகங்களின் பிடியில் இருந்து வருகிறது.
பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் நீண்ட காலமாக இஸ்லாமிய நாடுகளுக்குத் தலைமை வகிக்க ஆசைப்பட்டது. அதற்கு இஸ்லாமிய நாடுகள் பலவீனப்பட்டால்தான் தனது ஆசை நிறைவேறுமென்று கருதி, அமெரிக்க தளமாகச் செயல்பட்டது. முஜாகிதீன்களை இந்தியாவை நோக்கியும், தலிபான்களை ஆப்கானிஸ்தானை நோக்கியும் அனுப்பிவைத்தது. பாகிஸ்தானுக்கு வெளிநாட்டுக்காரர்கள் விளையாட்டுக்குக் கூட போக முடியாது. அண்மையில் இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் தலைதப்பி ஓடி வர வேண்டியதாயிற்று. ராணுவ சர்வாதிகாரியாக இருந்து பயங்கரவாதத்தை பகிரங்கமாக ஊக்குவித்த பர்வேஷ் முஷாரப் மீண்டும் அதிபராகத் தனக்கு ஆசையிருக்கிறது என்று டில்லியில் கூறியிருக்கிறார். பாகிஸ்தானிய இராணுவம் எப்போதும் அமெரிக்கா சொல்படி ஆடக்கூடியது. தலிபான்களை உருவாக்கிய அமெரிக்கா தாலிபான்களையே இப்போது வேட்டையாடுகிறது. இதற்காக பாகிஸ்தானின் எல்லைப்புறங்களில் குண்டு வீசித் தாக்கி வருகிறது.
மும்பைத் தாக்குதலில் கூட ஒரு அஜ்மல் பிடிபடாவிட்டால் உலகுக்கு உண்மை தெரிந்திருக்காது. பாகிஸ்தானின் அதிபர் சர்தாரி பயங்கரவாதிகளைப் பாதுகாப்பதிலேயே குறியாயிருக்கிறார். பயங்கரவாதி அஜ்மல் வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய் தனது குடும்பத்துக்குக் கிடைக்கும் என்பதால் தற்கொலைப் படையில் சேர்ந்ததாய் வாக்குமூலம் அளித்துள்ளான். அவன் முழு உண்மைகளையும் வெளியிட்டு பாகிஸ்தானை அம்பலப்படுத்திவிட்டான்.
பாகிஸ்தானில் தற்கொலைப் படைத்தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாதிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. மக்கள் பயத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|