Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruScienceEcology
சுற்றுச்சூழல்

கடத்தலால் அழியும் காட்டுயிர்கள்
ஆதி

Saw Fish அழகாக இருப்பது ஆபத்தானதா? குரங்கினத்தைச் சேர்ந்த அப்பாவிப் பிறவியான தேவாங்கைப் பொருத்தவரை ஆபத்துதான்.

தெற்காசிய காடுகளில் வாழும் சிறிய பாலூட்டியான தேவாங்கு, காட்டுயிர் கள்ள வர்த்தகத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. நம்மூர் வசைமொழிகளில் ஒன்றாக இந்த காட்டுயிரின் பெயர் பயன்படுத்தப்பட்டாலும், உண்மையில் இது அழகான உயிரினம். ஜப்பானில் இதை செல்லப் பிராணியாக வளர்க்க பணக்காரர்கள் விரும்புகின்றனர். ஒரு தேவாங்குக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1.5 லட்சம் தர அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

சிறிய உடல் கொண்ட, இரவில் நடமாடும் இந்த தேவாங்கு காடுகளில் கண்ணி வைத்து பிடிக்கப்படுகிறது. பிறகு அதன் பற்கள் பிடுங்கப்பட்டு வீட்டு வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தப்படுகிறது. அல்லது குட்டியாக இருக்கும்போதே பிடிக்கப்பட்டுவிடுகிறது என்று சைட்ஸ் (CITES) அறிக்கை தெரிவிக்கிறது. உணவுப் பொருளாகவும், பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுவது, மற்றொருபுறம் தென்கிழக்கு ஆசியாவில் கடுமையாக மரம் வெட்டப்படுவதன் காரணமாக, பாரம்பரியமாக வாழும் பகுதிகளில் இருந்து தேவாங்கு மறைந்துவிட்டது.

ஐ.நா.வின் துணை நிறுவனங்களில் ஒன்றான 'அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்கள் விற்பனையை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு' (UN Convention on International Trade in Endangered Species (CITES)) உலகிலுள்ள காட்டுயிர்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்கான எச்சரிக்கைகளை வழங்கி வருகிறது. உலகிலுள்ள 33,000 தாவர, காட்டுயிர் வகைகளில் முறையின்றி விற்பனை செய்யப்படுபவை எவை என்று இந்த அமைப்பு கண்காணிக்கிறது. இந்த அமைப்பில் 171 நாடுகள் உறுப்பினராக உள்ளன.

உலகின் பல்வேறு பகுதிகளில் உணவுப் பொருளாக, மருந்துப் பொருளாக, செல்லப்பிராணியாக வளர்க்க சந்தைகளில் விற்கப்படும் காட்டுயிர்களை பாதுகாக்கும் விதிமுறைகளை சைட்ஸ் அமைப்பு சமீபத்தில் மறுபரிசீலனை செய்தது. அந்த அமைப்பு சமீபத்தில் எடுத்த முடிவுகளின்படி, கவனம் செலுத்தி பாதுகாக்கப்பட வேண்டிய சில காட்டுயிர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் தேவாங்கை கடத்தி விற்பனை செய்வதை இந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது. கள்ளச்சந்தையில் இந்த காட்டுயிர் மோசமான பாதிப்பை சந்திப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிசய உயிரினங்களில் ஒன்றான ரம்பமீன் (saw fish) மின்சக்தியை பாய்ச்சும் தன்மை கொண்டது. இந்த மீன் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. தனித்தன்மைமிக்க மூக்கு அல்லது முன்பகுதியே இந்த மீன் கடத்தப்பட்டு விற்கப்படுவதற்கு முக்கிய காரணம். முன்பு வாழ்ந்த இடங்களில், தற்போது இந்த மீன்களின் எண்ணிக்கை வெறும் 10 சதவீதம் மட்டுமே உள்ளது.

இந்த மீன் வகையின் மற்ற பாகங்களுக்கும் கிராக்கி அதிகம். சுறா துடுப்பு சூப் தயாரிக்கப்படுவதைப் போல, இந்த ரம்பமீன் துடுப்பு சூப்பும் ஆசியாவில் பிரபலம். தென்னமெரிக்காவில் நடத்தப்படும் கோழிச்சண்டையில், கோழிகளின் கால்களில் கட்டப்படும் சிறு கத்திகளுக்கு இவற்றின் பற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆபத்தில் உள்ளவை

அழியும் ஆபத்தில் உள்ள மற்றொரு காட்டுயிர் முள் நாய்மீன் (spiny dogfish). சுறா வகையைச் சேர்ந்த இந்த மீன் பிரிட்டன் உணவுப் பட்டியலில் 'ராக் சால்மன்' என்ற பெயரில் வறுத்து விற்கப்படுகிறது. ஐரோப்பிய, வடஅமெரிக்க கடற்பகுதிகளில் அதிகமாக பிடிக்கப்படுவதாக தகவல்கள் கூறினாலும், சர்வதேச சந்தையில் இதன் விற்பனையை தடை செய்ய முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

Porbeagle Shark பாப்கேட் என்று தவறாக அடையாளம் காணப்பட்டு பிற காட்டுயிர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருப்பதால், காமன் பாப்கேட்டை (common bobcat) விற்பனை செய்வதற்கான சர்வதேச தடை தொடருகிறது. இந்த காட்டுப்பூனைகள், அவற்றின் பாகங்களை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு அமெரிக்கா கோரியிருந்தது. ஆனால், தடையை விலக்கினால் அவற்றைப் போன்ற தோற்றம் கொண்ட இதர அரிய பூனைகள் (எ.கா. லிங்க்ஸ் - சிறுத்தை போன்ற காட்டுயிர்) கொல்லப்பட அதிக வாய்ப்புள்ளதால் அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பாப்கேட்டை கொல்ல விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது. ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் இந்தப் பூனையை விற்கலாம். இப்பொழுதும் சர்வதேச மயிர்ப்போர்வை (Fur coat) சந்தையில் இந்த பூனையின் தோல் விற்கப்படுகிறது.

அழகாக இருப்பது மட்டுமல்ல, அச்சுறுத்தலாக இருந்தாலும்கூட கொல்லப்படுவதில் இருந்து காட்டுயிர்கள் தப்பிக்க முடிவதில்லை. மனிதனைவிட தந்திர உபயம் குறைந்ததாக இருந்தால் அவற்றைக் கொல்வது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. போர்பீகிள் சுறா (porbeagle shark) இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் மாமிசத்துக்கும், துடுப்புகளுக்கும் இந்த இரைகொல்லி டன்டன்னாக பிடிக்கப்படுகிறது.

பாரம்பரிய வாழிடங்களில் போர்பீகிள் சுறாக்களின் மொத்த எண்ணிக்கையில் 25 சதவிகிதம்கூட தற்போது இல்லை. இந்த காட்டுயிரை கொல்வது சர்வதேச அளவில் தடை செய்யப்படவில்லை. இந்த சுறா எண்ணிக்கையை நிர்வகிப்பது மண்டல அளவிலான பிரச்சினை என்று சைட்ஸ் கூறிவிட்டது. சரி, மற்ற காட்டுயிர்கள் இருக்கட்டும், இந்தியாவின் கௌரவங்களில் ஒன்றான புலிகள் அழிந்து வருவது பற்றி சைட்ஸ் கூட்டத்தில் விவாதிக்கவில்லையா? விவாதிக்கப்பட்டது.

புலிகள்

உலகில் இந்தியா, நேபாளம், பூட்டான், கம்போடியா, இந்தோனேசியா, ரஷ்யாவில் புலிகள் உள்ளன. ஆசிய நாடுகளில் மட்டுமே புலிகள் வாழ்கின்றன. இந்தியாவில் புலிகள் கொல்லப்பட சீனா, திபெத் நாடுகளே முக்கிய காரணம். இந்தியாவில் இருந்து புலிகள், அவற்றின் பாகங்கள் கடத்தப்பட சீனாவில் மேற்கொள்ளப்படும் கள்ள வர்த்தகம் பெரும் ஊக்கமளிக்கிறது. ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா சரணாலயத்தில் ஒட்டுமொத்தமாக புலிகள் அழியவும், ரன்தம்போர் உள்ளிட்ட சரணாலயங்களில் புலிகள் எண்ணிக்கை குறையவும் சீன கள்ளச்சந்தை பெரும் பணம் அளித்ததே முக்கிய காரணம். தற்போது இந்தியாவில் 1,500க்கும் குறைவான புலிகள் மட்டுமே இருப்பதாக சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த கணக்கெடுப்பு வெளிவருவதற்கு முன்பே சைட்ஸ் கூட்டம் நடத்தப்பட்டுவிட்டது.

சீனாவில் ஐந்தாயிரம் புலிகள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு வர்த்தகத்தில் புலிகளின் பாகங்களை விற்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டிலுள்ள தொழில்முனைவோர் அரசை வற்புறுத்தி வருகின்றனர். சீனாவுக்கு சைட்ஸ் அமைப்பு முறைப்படி தெரிவித்த கண்டனத்தில், பாரம்பரிய மருத்துவ வர்த்தகத்துக்காக பண்ணைகளில் வளர்த்து விற்கப்படும் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளது. இந்த கண்டனத்தை உலக இயற்கை நிதியம் (WWF) வரவேற்றுள்ளது.

'புலிகளின் எந்த பாகத்தை விற்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்காமல் இருப்பது வரவேற்கத்தக்க ஒர் அம்சம். காடுகளில் வாழும் புலிகளை பாதுகாக்க வேண்டும்' என்று உலக இயற்கை நிதிகம் கோரிக்கை விடுத்துள்ளது. நமது பாரம்பரியப் பெருமையான புலிகள் பாதுகாக்கப்படுமா, இல்லையா என்பது நெடுங்காலத்தில்தான் தெரியும். சைட்ஸ் அமைப்பின் நடவடிக்கைகள் அதற்கு உதவும் என்று நம்புவோம்.

- ஆதி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com