|
பாரதியார் பாடல்கள்
எங்கள் தாய்
(காவடிச்சிந்தில், ‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற மெட்டு)
தொன்று நிகழ்ந்த த¨னத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள் தாய். 1
யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயெங்கள்தாய் - இந்தப்
பாருள் எந் நாளுமோர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாள் எங்கள் தாய். 2
முப்பதுகோடி முகமுடை யாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடை யாள். 3
நாவினில் வேத முடையவள் கையில்
நலந்திகழ் வாளுடை யாள் - தனை
மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடை யாள். 4
அறுபது கோடி தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் -தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாய். 5
பூமி யினும்பொறை மிக்குடை யாள்பெரும்
புண்ணிய நெஞ்சினள்தாய் - எனில்
தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்
துர்க்கை யனையவள் தாய். 6
கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
கைதொழு வாள் எங்கள்தாய் - கையில் ஒற்றைத்
திகிரி கொண் டேழுல காளும்
ஒருவனை யுந்தொழு வாள். 7
யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்
ஒன்றென நன்றறி வாள் - உயர்
போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடை யாள். 8
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாள் எங்கள்தாய் - அவர்
அல்லவ ராயி னவரைவி ழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடுவாள். 9
வெண்மை வளர்ம யாசலன் தந்த
விறன்மக ளாம் எங்கள்தாய் - அவன்
திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்
சீருறு வாள் எங்கள்தாய். 10
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|