|
பாரதியார் பாடல்கள்
தாயின் மணிக்கொடி பாரீர்!
(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்.
தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு)
பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர் -- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
சரணங்கள்
1. ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர் (தாயின்)
2. பட்டுத் துகிலென லாமோ? -அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும் புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப படலம் (தாயின்)
3. இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் – அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)
4. கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர்அவ்வீரர்; - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார் (தாயின்)
5. அணியணி யாயவர் நிற்கும் - இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர் (தாயின்)
6. செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள், சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர்
7. கன்னடர் ஒட்டியரோடு - போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்
பொன்னகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர்
8. பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
போர் விறல் யாவும் மறப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் -பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்.
9. பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன் னாட்டார்
துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும்
10. சேர்ந்ததைக் காப்பது காணீர் - அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|