எதிரியின் முறுவல்
சி.சிவசேகரம்
எதிரி முறுவலுடன் வந்தான்
மக்கள் முறுவலுடன் வரவேற்றனர்
மண் அங்குலம் அங்குலமாகப் பறிபோனது.
எதிரி புகழுரைகளுடன் வந்தான்
மக்கள் மகிழ்வுடன் வரவேற்றனர்
மண் ஏக்கர் ஏக்கராகப் பறிபோனது.
எதிரி பரிசுகளோடு வந்தான்
மக்கள் நன்றியோடு வரவேற்றனர்
மண் சதுரமைல்களாகப் பறிபோனது.
மக்கள் விழிப்புற்றபோது எதிரி
முறைப்புடன் கையில் ஆயுதங்களுடன்
கவசவாகனமேறி வந்தனர்.
மக்கள் ஆயுதந் தரித்தபோது
மண்ணை ஆபகரித்தனவால்
மண்ணை ஆள இயலவில்லை.
எதிரி போர்நிறுத்தம் பற்றிப் பேசினான்
அமைதி பற்றியும்
ஆயுதக் களைவு பற்றியும் பேசினான்.
மக்கள் போரை நிறுத்தி அமைதி பற்றிப்பேச
ஆயுதங்களைக் களைந்த பின்
மண் மீண்டும்
அங்குலம் அங்குலமாக
ஏக்கர் ஏக்கராகச்
சதுரமைல்களாகப் பறிபோனது.
எதிரியின் இனிய சொற்கள்
வலிய ஆயுதங்களிலுங் கொடியன.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|