நூல் அறிமுகம்
பெருந்தேவனாரின் வீரசோழிய உரைத்திறன்
பா. இளமாறன்
தமிழில் வளமான உரைமரபு உண்டு. இம்மரபு ஒற்றைச் சிந்தனைப் பள்ளியில் உருவாகாமல் பல்வேறு சிந்தனைப் பள்ளியில் இருந்து உருவானவை. குறிப்பாக சமண, பௌத்த உரைமரபுகள் இடைக்காலத் தில் மேலோங்கியிருந்தன. வடமொழியின் இலக்கண அடிப்படை களைத் தமிழுக்குப் புடைமாற்றிய வீரசோழியம் என்ற பௌத்த இலக்கணப் பிரதிக்கு அதே சமயம்சார்ந்த பெருந்தேவனார் தம் காலத்திய அறிவுமரபுகளிலிருந்து அப்பிரதிக்கு உரை எழுதுகிறார். தமிழில் நிலவிய பௌத்த உரைமரபு குறித்த நுட்பமான தேடலை பெருந் தேவனாரின் உரையை அடிப்படையாகக் கொண்டு ‘பெருந்தேவனாரின் வீரசோழிய உரைத்திறன்’ என்னும் தலைப்பில் ஆய்வாளர் கா. அய்யப்பன் பல்வேறு விவாதங்களை மேலெழுப்பி நூலாக வெளியிட்டுள்ளார்.
தமிழில் இலக்கண உரைவரலாறு எவ்வாறு உருவாகி வளர்ச்சி யடைந்துள்ளது என்பதோடு பெருந்தேவனாரின் காலம், சமயம் ஆகியவை குறித்த கருத்தாடல்களும் பலநிலைகளில் ஆராயப்பட்டுள்ளது. இவற்றோடு புத்தமித்திரனார் உருவாக்கிய வீரசோழியம் என்னும் பனுவ லுக்குப் பெருந்தேவனாரின் உரை எவ்வெந்நிலைகளில் அமைந்து செயல்படுகிறது என்பதை உரைத்திறன் என்னும் பகுதியில் இந்நூல் விவாதிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக வீரசோழியத்திற்குப் பத் தொன்பதாம் நூற்றாண்டுத் தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டு வரை வெளிவந்துள்ள பதிப்புகள் அடைவு செய்யப்பட்டுள்ளதோடு அவை குறித்த சிக்கல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பின்னிணைப்பில் பெருந்தேவனார் உரையின் பல்நிலைப்பட்ட தரவுகள் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன. பேரா. கா. சிவத்தம்பி, பேரா. வீ. அரசு ஆகியோரின் அணிந் துரைகளோடு காசி பதிப்பகம் வழி சிறப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்நூல் தமிழ் உரை ஆய்வு வரலாற்றில் சுட்டத்தகுந்ததொரு நூலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|