Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
சூது

இளந்திரையன், கனடா


நேரம் காலை பத்து மணியை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. பனி மூட்டத்துடன் பொழுது ஆரவாரமில்லாது விடிந்து விட்டிருந்தது. மேகங்கள் கவிந்து வெளிச்சத்தை வடி கட்டி அனுப்பி விட்டுக்கொண்டிருந்தது. நிலமெல்லாம் பனி போர்த்தி வெளிறிக்காணப்பட்டது. இலைகளற்ற மரக்கிளைகள் மோனப்பெருந்தவத்துள் மூழ்கிவிட்டவை போன்று அழுது வடிந்து கொண்டிருந்தன. மொத்தத்தில் உற்சாகமற்ற ஒரு காலைப் பொழுதுள் பூமி அமிழ்ந்து மூச்சு விட்டுக் கொண்ருந்தது. வளைவுகளில் வேகத்தை மட்டுப் படுத்தி காரை நிதானமாகச் செலுத்திக் கொண்டிருந்தேன். வீதியில் ஆங்காங்கே உறைந்து பளிங்காக ஜ்வலித்துக் கொண்டிருந்த பனிக்கட்டிகளில் வழுக்கிவிடக் கூடிய அபாயமும் அதிகம் இருந்தது. 401 நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து 409 நெடுஞ்சாலையில் திருப்பி விட்டிருந்தேன். 427 வடக்குப் பாதையில் கொண்டு விடும் ஒரு கிளைப் பாதை அது. ஒரு அரை வட்டத்தில் திரும்பி பியர்சன் எயார் போட்டை கவனமாகத் தவிர்த்து வெளியேறி 427இல் சென்று கலக்கும். சற்றுக் கவனக் குறைவும் விமானத் தளத்துள் கொண்டு சென்று விடும். 427 இல் கலந்ததும் கார் வேகமெடுத்து சீறிப் பாய்ந்தது.

இலக்கில்லாத ஒரு பயணமாகத் தான் அது இருந்தது. வேலையைத் தொலைத்து விட்டிருந்த ஒரு காலம். நம்பிக்கைகள் வெகுவாகக் குறைந்து விட்டிருந்தன. கால்களின் கீழ் பூமி அடிக்கடி நழுவிக்கொண்டிருந்தது. எதிர்காலம் கொஞ்சமாய் பயமுறுத்திக் கொண்டிருந்தது. எதையும் துல்லியமாகத் தீர்மானிக்கமுடியாத கதியில் காலம் நகர்த்திக் கொண்டிருந்தது. வலப் பக்கம் விரிந்த வெளியில் வூட்பைன் ஹோர்ஸ் ரேஸ்ஸின் விளம்பரப் பலகை பிரமாண்டம் காட்டியது.
அந்நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களைக் குறி வைக்கும் ஒரு உத்தியாகவே அங்கு நாட்டியிருந்தார்கள் என்று நினைக்கத் தோன்றியது.

நாளும் பொழுதும் அவ்வீதியால் பயணிக்கும் போதும் காணும் காட்சிதான் என்றாலும் அன்று என்னவோ அதிகம் கவர்ந்தது. அதற்குள் போய் என்னதான் இருக்கின்றது என்பதைப் பார்த்திட வேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு. நேரத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுகளில் நினைப்பதுடன் நின்று விடும். ஆனால் இன்று போய்ப்பார்த்தால் தான் என்ன என்ற எண்ணம் தூக்கலாகவே தோன்றியது. தோன்றியதும் கார் ரெக்ஸ்டேல் வெளி வழியை எடுத்து அங்கு சென்றது.

அந்த காலை வேளையிலேயே அங்கு திரண்டிருந்த கார்களின் எண்ணிக்கை ஆச்சரியப் படுத்தியது. அண்மையில் காரை நிறுத்தமுடியாத படிக்கு கார்கள் நிறைந்திருந்தது. போதுமான தூரத்தில் நிறுத்தி விட்டு நடந்து சென்றேன். சில நிமிடங்களை விழுங்கி விட்ட தூரத்தில் நுழைவாசலை அடைந்தேன். காவலர்களின் முகமனை ஏற்றுக் கொண்ட என்னை ஆச்சரியம் தாக்கியது. வெளியுலகத்திற்கு தொடர்பேயில்லாத ஒரு உலகு கனவுகளுடன் அங்கு விரிந்திருந்தது . எங்கும் மனிதர்கள் இன்னதென்று சொல்ல முடியா உணர்வுகளுடன் ஸ்லொட் மெஷின்களின் முன்னால் மண்டியிட்டு யாசித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள். அவற்றின் வர்ண விளக்குகளின் ஜ்வலிப்புகளுக்கும் டிங் டிங் கென்ற வசீகரிக்கக் கூடிய சப்த ஆலாபனையுடன் டோக்கன்களை அள்ளி வழங்கும் வள்ளன்மைக்கும் அடிமையாகிப் போன ஒரு தாளகதியுடன் செயல்ப் படும் மனிதர்கள். சீன ட்ராகன்களும் புலிகளும் இன்ன பிற மிருகங்களும் பறவைகளும் பழவகைகளும் பெயரறியாச் சின்னங்களும் ஒன்று சேர்வதிலும் பிரிவதிலும் அவர்களின் அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம் சரி பார்க்கப் பட்டுக் கொண்டிருந்தது. புதிதாய் வருபவர்களைப் பற்றியோ அதுவரை அங்கிருந்து வெளியேறிச் செல்பவர்கள் பற்றியோ எந்தவிதப் பிரக்ஞையும் அற்று டிக் டிக்கென்று சுழன்று சுழன்று நிற்கும் இயந்திரங்களின் சுழற்சியை உயிர்த்துடிப்பை அடகு வைத்துக் காத்திருக்கும் மனிதர்கள். இவர்களைத் தவிர்த்து பொருமிப் பெருத்த பணப் பைகளை இடுப்பினில் சுமந்த உதவியாளர்களும் முழு உத்தியோக சீருடையுடன் காவலாளரும் வளைய வந்து கொண்டிருந்தார்கள்.

இயந்திரங்களின் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தவர்களுக்கும் தங்களுக்கும் எதுவித சம்பந்தமும் அற்றவர்களைப் போல சிரிப்பும் கதையுமாக உலவிக் கொண்டிருந்தார்கள். சமயத்தில் அவர்களுக்கான உதவிகளைச் செய்து விட்டு மீண்டும் தங்கள் உலகத்தின் கதைகளைத் தொடர்ந்த வண்ணம். ஒரு பொருளாதாரக் கட்டு மானத்தின் இரண்டு பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஆனால் கலந்து விட முடியாத கவனத்துடன் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.

ஒவ்வொரு வரிசையிலும் 25 , 50 சதங்கள் 1,2 ,5 தாலர்களை ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு தெரிவிற்கும் விலை கொள்ளும் படிக்கு ஸ்லொட் மெஷின்களை நிறுவியிருந்தார்கள். அவரவர் வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப தெரிவுகள் இருந்தது. இயந்திரங்களின் முன் குனிந்திருந்தவர்களில் அதிகமானவர்கள் சீனியர்கள் என்று அழைக்கப் படும் முதியவர்களாகக் காணப் பட்டார்கள். ஒரு விதத்தில் வாழ்க்கையை அனுபவித்தவர்கள் அல்லது வாழ்க்கையை முழுவதும் அனுபவிக்கத் துடிப்பவர்கள் என்று எந்த வகையில் இவர்களை வகைப் படுத்த முடியும். அவர்களின் முக இறுக்கங்களில் எதையும் உணரமுடியாத தன்மை படர்ந்திருப்பதாகத் தான் எனக்குத் தோன்றியது. வாழ்ந்தவர்கள் இவ்வித அவசரம் காட்டுவார்களா என்ற சந்தேகமும் கூடவே எழுந்தது. வாழ்க்கை பற்றிய புரிதலுக்கப்பால் வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் மடிகளைத் துடைப்பதில் இப்படியொரு அவசரம். புலம் பெயர்ந்து வந்த வேற்றினத்தவர்களும் தாரளமாகக் காணப்பட்டார்கள். இவர்களெல்லாம் எதைத் தேட அல்லது தொலைக்க இங்கு வந்திருந்தார்கள்.

வாழ்க்கை பற்றிய புரியாத புதிரில் அல்லது புரிந்தும் மாற்றமுடியா தவிப்பில் இதுவும் ஒன்று என்பதற்கப்பால் எது நிரந்தரம். புரிபடாத உலகத்தைப் போலவே புரிபடாத விளையாட்டும் என்னிடம் இருந்து அறுநூறு தாலர்களை கொள்ளையிட்டிருந்தது. வாழ்க்கையின் சூதைப் பற்றி எனக்கென்ன கவலை. தொலத்துவிட்ட அறுநூறு தாலர்களைப் பற்றி எண்ணிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினேன். மனம் கனத்துக் கொண்டிருந்தது.

- இளந்திரையன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com