Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

சொல்லிட வல்லீரோ?...
தொ. சூசைமிக்கேல்


வெள்ளிவான் மேகங்களே! - பூவனத்தில்
birds            வீழ் மகரந்தங்களே!
கள்ளிச் செடிகளெலாம் - மேய்ந்து வரும்
           கானகக் காற்றுகளே!
நெல்லிடைச் சீர்வழங்கும் - நாஞ்சில் எங்கள்
           நேசதேசம் நீவிர் போய்ச்
சொல்லிட வல்லீரோ? - தூது ஒன்று
           சொல்லிட வல்லீரோ?

குன்றுடைக் காடுகளில் - வலம்வரும்
           கொங்குதேர்த் தும்பிகளே!
பொன்துகள் மண்வெளியை - வைகறையில்
           போர்த்தும் பனித் துகிலே!
என்துணையாள் வசிக்கும் - இல்லமதில்
           என்றேனும் ஓர்முறை நீர்
சென்றிட வல்லீரோ? - தூதுமொழி
           செப்பிட வல்லீரோ?

காளைப் பருவமுதல் - பாலைவனக்
           காட்டுக்குள் வாழ்ந்ததுவும்
காலைப் பொழுதுமுதல் - கடமையின்
           கட்டுக்குள் வீழ்ந்ததுவும்
வேளையெலாம் வேர்த்து - விரக்தியின்
           விளிம்பில் நின்றதுவும்
சோலை மலர்ந்திடத்தான் - நாளையென்று
           சொல்லிட வல்லீரோ?

கொண்ட கொடுமைகளும் - விதவிதக்
           கோரக் கடன்சுமையும்
குண்டணிக் கூட்டணியும் - வாட்டிநின்ற
           கோழைக் குழப்பங்களும்
ஒண்ட முடியாமலே - என்னைவிட்டு
           ஓடி ஒளிந்ததென்று
பெண்டிர் தலைவியிடம் - தெளிவுறப்
           பேசிட வல்லீரோ?

வாய்க்கும் வசதிகளும் - கைநிறைய
           வாங்கிடும் சம்பளமும்
பார்க்கும் அலுவல்களும் - பழகிடும்
           பன்மொழிக் கும்பல்களும்
ஏற்கும் பெருமைகளும் - இன்றெனக்(கு)
           இருந்திடும் போதினிலும்
ஏக்கம் தணிந்திடுமோ? - இல்லையென்(று)
           இயம்பிட வல்லீரோ?

பாலைத் தெருக்களிலே - தனியனாய்ப்
           பைய நடக்கையிலும்
சாலை மருங்கினிலே - ஏளனங்கள்
           சகித்துப் போகையிலும்
ஏழை மனத்தினுள்ளே - எழுந்திடும்
           எண்ணிலாக் கட்டங்களின்
கோலங்கள் கொஞ்சநஞ்சம் - அல்லவென்று
           கூறிட வல்லீரோ?

கொட்டும் பனிக்குளிரும் - பாலைமண்ணின்
           கோடை அனல்வெயிலும்
நட்ட நடுநிசியில் - வெக்கையொடு
           நாவறண்ட துயரும்
முட்ட முட்டப் பசியால் - கண்மயங்கி
           மூச்சிறைத்த கணமும்
பட்டறிந்த எனது - பக்குவம்
           பகர்ந்திட வல்லீரோ?

பாலையோர் பள்ளித்தலம் - வாழ்க்கையெனும்
           பாடம் பயின்று தரும்....
ஆலையில்லா ஊர்களின் - இலுப்பைகள்
           ஆரவாரம் புரியும்
ஓலைக் குடிசைகளும் - மாடிகளை
           ஊக்கிடல் ஒக்குமென்று
சாலப் புரிந்துகொண்டேன் - செய்தி இது
           சாற்றிட வல்லீரோ?

வந்து பணிபுரிந்த - இரு பத்து
           வருட காலத்திலே,
கன்றுதனைப் பிரிந்த - கறவையின்
           கவலை நெஞ்சினிலே!.
இந்த நிலை அகன்று - இன்பநிலை
           என்று வரும்? என்று நான்
சொந்த நிலை மறந்தேன் - என்பதனைச்
           சொல்லிட வல்லீரோ?

பெண்ணின் பெருந்தகைக்கு - என்னைமிகப்
           பேணிடும் உத்தமிக்கு
எண்ணிறந்த தினங்கள் - ஈரமுடன்
           என்னை நினைப்பவட்கு
“இன்னும் என்ன கவலை? - கலங்கிடேல்!”
           என்றிட வல்லீரோ?
திண்ணமுறு தமிழால் - தூதுசொல்லித்
            தேற்றிட வல்லீரோ?

- தொ.சூசைமிக்கேல் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com