Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureInterview
நேர்காணல்

நக்சல்பாரிகளிடம் கொள்கைத் தெளிவு இல்லை: உ.ரா.வரதராஜன்
நேர்காணல்: மினர்வா & நந்தன்


கல்லூரிக் காலத்திலேயே அரசியல் ஈடுபாடு கொண்டவர். ரிசர்வ் வங்கியில் 17 ஆண்டுகள் பணிபுரிந்தவர். 69-ல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து தொடர்ந்து 40 வருடங்களாக கட்சிப்பணி ஆற்றி வருகிறார். 23 வருடங்களாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். சி.ஐ.டி.யு.அகில இந்தியச் செயலாளராக பல வருடங்கள் பணியாற்றியவர், தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக உள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தோம். நிதானமாகவும், தெளிவாகவும் பதில் அளித்தார். அதிலிருந்து.......

W.R.Varadharajan நீங்கள் பிறந்த சூழல் குறித்தும், கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தது குறித்தும் கூற முடியுமா?

வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய தந்தை ரயில்வே ஊழியராக இருந்தார். வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில் தான். சென்னை விவேகானந்தா கல்லூரியில் தான் பட்டப்படிப்பு முடித்தேன். 1967-ல் ரிசரவ் வங்கியில் பணியில் சேர்ந்தேன். அடுத்த 17 ஆண்டுகள் அங்குதான் பணி. அந்தக் காலங்களில் வங்கிப் பணியை செய்தேன் என்பதை விட தொழிற்சங்கப் பணியைச் செய்தேன் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

அங்குதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களோடு அறிமுகம் ஏற்பட்டது. 1969ல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தேன். அதற்கு முன்பே கல்லூரிக் காலங்களில் தமிழரசு இயக்கம் நடத்தி வந்த ம.பொ.சி.யோடு நெருக்கமான தொடர்பு இருந்தது. எனக்கு இருந்த ஆழ்ந்த தமிழ்ப்பற்று தான் இதற்கு காரணம்.

67ல் தேர்தலில் தியாகராயர் நகர் தொகுதியில் ம.பொ.சி.போட்டியிட்டபோது அவருக்காக வேலை செய்திருக்கிறேன். தமிழரசு இயக்கத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழரசு கழகம், தமிழரசு கட்சி என்று இரண்டாகப் பிரிந்த போது நான் தமிழரசு கட்சியில் இணைந்தேன்.

அப்போது காங்கிரஸ் கட்சியும் சிண்டிகேட், இண்டிகேட் என்று இரண்டாக உடைந்தது. தமிழரசு கட்சி சிண்டிகேட் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தமிழரசு கட்சியில் இருந்து விலகினேன். என்னுடைய சின்ன வயதிலேயே காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டை நான் எடுத்திருந்ததால் இயல்பாகவே நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தேன்.

1984-ல் வங்கிப் பணியை விட்டுவிட்டு கட்சியில் முழுநேர ஊழியராக இணைந்தேன். கட்சியில் சென்னை நகர மாவட்டக் குழு உறுப்பினராகத் தொடங்கி இன்றைக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக பணியாற்றுகிறேன்.

இனி என்னுடைய வாழ்க்கை மார்க்சியப் பாதையில் தான் செல்ல வேண்டும் என்று நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கு குறிப்பிட்ட காரணம் ஏதாவது இருக்கிறதா?

தி.மு.க. திராவிட நாடு கோரிக்கையை எழுப்பியபோது ம.பொ.சி. அதற்கு எதிரான ஒரு நிலையை எடுத்திருந்தார். அதில் எனக்கு உடன்பாடு இருந்தது. அதே நேரத்தில் சுதந்திரத்தின் கொள்கைகள் அத்தனையும் காணாமல் போனதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று உறுதியாக நம்பினேன். அகில இந்திய அளவில் பார்க்கும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிதான் தேசிய அக்கறையோடு செயல்பட்டு வந்தது. அதனால் தான் என்னை மார்க்சிஸ்ட் கட்சியோடு இணைத்துக் கொண்டேன்.

இந்தியாவில் கம்யூனிசம் பரவத் தொடங்கி ஏறக்குறைய 100 ஆண்டுகள் நெருங்கிவிட்டது. நம் தமிழ்ச் சமூகத்திற்கு கம்யூனிஸ்டுகள் எந்த மாதிரியான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே கம்யூனிஸ்டுகள் தான் மொழிவாரி மாநிலக் கோரிக்கையை முன்வைத்தார்கள். ஆனால் சில விதிவிலக்கான தருணங்களைத் தவிர பெரும்பாலும் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே கம்யூனிஸ்டு இயக்கம் இருந்து வந்தது. அது சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது. கம்யூனிஸ்டு கட்சியின் ஜனநாயகப் பூர்வமான இயக்கம் இந்திய விடுதலைக்குப் பிறகு தொடங்கியது அல்லது முன்னுக்கு வந்தது என்று தான் சொல்ல முடியும்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகாவை உள்ளடக்கிய அன்றைய சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்டு கட்சி தான் காங்கிரசுக்கு பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. 1952 ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. ஆளுநரைப் பயன்படுத்தி அவர் மூலமாக ராஜாஜியை தமிழக மேலவைக்கு உறுப்பினராக நியமித்து மாணிக்கவேல் நாயக்கர் போன்றவர்களை வைத்துக்கொண்டு காங்கிரஸ் மந்திரி சபையை அமைத்தது.

இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று தோழர் பி.ராமமூர்த்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை. ராஜாஜி முதலமைச்சராக நீடித்தார். பிரதான எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. அதன் தலைவராக பி.ராமமூர்த்தி இருந்தார். 57-ல் தான் முதன்முதலாக தி.மு.க.தேர்தலில் போட்டியிட்டது.

கம்யூனிஸ்டு இயக்கத்துக்குள்ளேயே இருந்த விரும்பத்தகாத மோதல்கள் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகம் அதன் இடத்தை பிடித்தது. அண்ணா அன்று வைத்த கோஷம் “சந்தா கம்யூனிஸ்டுக்கு, ஓட்டு கழகத்துக்கு” என்பது. தொழிற்சங்க அளவிலே கம்யூனிஸ்டுகள் பெரிய அளவில் வலுப்பெற்றிருந்த போதிலும் கூட அதிலேயிருந்து பிரித்து தொழிலாளர்களின் அரசியலை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக மாற்ற அண்ணாவால் முடிந்தது. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னுக்கு வந்து, கம்யூனிஸ்டுகள் பின்னுக்குச் செல்ல காரணமாக இருந்தது.

திராவிடர் கழகம் தமிழகத்தில் தோன்றிய பிறகு அரசியல் சட்டத்தைத் திருத்தியது, இட ஒதுக்கீடு, சுயமரியாதை திருமணச் சட்டம் போன்ற பல சமூக சீர்த்திருத்தங்கள் நடைபெற்றது. இதுபோல தமிழகத்திற்கு கம்யூனிஸ்டுகள் செய்த பங்கைப் பற்றி குறிப்பிட்டுக் கூற முடியுமா?

தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களை குறிப்பாக விவசாயத் தொழிலாளர்களை அணி திரட்டியது எங்களது முக்கிய பணி. விவசாயத் தொழிலாளர் சங்கத்திலே இன்றைக்கும் நீடிக்கிற சாதீய ஒடுக்குமுறை அன்று மிகக் கடுமையாக இருந்தது. அந்தக் காலத்தில் கீழத் தஞ்சையிலே கம்யூனிஸ்டுகளுக்கு ‘தாழ்த்தப்பட்ட மக்கள் கட்சி’ என்று முத்திரையே குத்தப்பட்டது.

சமூக ஒடுக்குமுறையோடு சேர்த்து விவசாயிகளுக்கான பொருளாதாரக் கொள்கைகளையும் சேர்த்து தொடர்ந்து இயக்கங்களை கம்யூனிஸ்டு கட்சிதான் நடத்தியது. இயல்பாகவே நிலப்புரபுக்கள் காங்கிரஸ் கட்சியோடு ஐக்கியமாகியிருந்த சூழ்நிலையிலே காங்கிரஸ் ஆட்சிக்காலம் முழுவதும் கடுமையான அடக்குமுறையை கம்யூனிஸ்டு இயக்கம் சந்தித்தது. இதில் எண்ணற்ற எங்கள் ஊழியர்களை பறிகொடுத்தோம்.

நீதிக்கட்சியின் பாரம்பரியத்தில் இருந்து துண்டித்துக் கொண்ட பிறகுதான் திராவிட இயக்கம் தமிழ்நாட்டிலே காலூன்றி வளர முடிந்தது. நீதிக்கட்சி பாரம்பரியத்திலேயே பெரியார் தொடர்ந்திருந்தால் திராவிடர் இயக்கம் தமிழ்நாட்டிலே இத்தகைய செல்வாக்கை பெற்றிருக்காது. திராவிட இயக்கத்துக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இருக்கக்கூடிய பொதுவான அடிப்படை என்பது பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்விடுதலை, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்.

துரதிருஷ்டவசமாக பெரியார் காங்கிரஸ் மீதான கோபத்தின் காரணமாக இந்திய சுதந்திர நாளை துக்கதினமாக அனுசரித்தார். காங்கிரசின் செயல்பாட்டால் இத்தகைய முடிவுக்கு விரட்டப்பட்டார் என்றே சொல்லலாம். அங்கே நாங்கள் பெரியாரோடு மாறுபட்டோம். சுதந்திரத்தைப் பொறுத்தவரை இது அர்த்தமுள்ள சுதந்திரம் தானா என்ற கேள்வி கம்யூனிஸ்டு இயக்கத்துக்குள்ளேயே இருந்தது. இன்றைக்கும் நக்ஸலைட்டுகள் இயக்கம் ‘நாம் வாங்கியது உண்மையான சுதந்திரம் அல்ல, மறைமுகமாக காலனி ஆதிக்க நாடாகத் தான் இன்றைக்கும் இந்தியா இருக்கிறது’ என்று சொல்கிறார்கள்.

இதே கொள்கைக்குழப்பம் கம்யூனிஸ்டு இயக்கத்துக்குள் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்திலும் இருந்தது. இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு ஜனநாயகப் பாதையில் நடைபோடத் தொடங்கியதை ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்கு என்று நாங்கள் கருதினோம். அதன் வழியில் நாங்களும் செயல்படத் தொடங்கினோம். அந்த வழியில் தான் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை, விவசாயிகளை, தொழிலாளர்களை அணி திரட்டுகிற பணியில் வேகமாக செயல்பட்டோம். இன்றைக்கும் கம்யூனிஸ்டு இயக்கத்துக்கு அதுதான் அடிப்படையாக இருக்கிறது.

பெரியார் பற்றிப் பேசுவதால் இந்தக் கேள்வி. கம்யூனிஸ்டுகளை ஆதரித்து வந்த பெரியார் சாதியா, வர்க்கமா என்ற கேள்வி வந்தபோது ‘முதலில் ஒழிக்கப்பட வேண்டியது சாதிதான்’ என்றார். ஆனால் கம்யூனிஸ்டுகள் கடந்த 2000-த்திற்கு பிறகு தான் இந்த நிலைப்பாட்டை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். அதுவரை வர்க்கம் என்றே சொல்லி வந்தார்கள். ஏன் இந்த முரண்பாடு?

முதலில் ஒழிக்கப்பட வேண்டியது சாதியா, வர்க்கமா? என்ற கேள்வி கம்யூனிஸ்டு இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் இடையே ஒரு பெரிய விவாதமாக இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இதை தமிழ்நாட்டுப் பின்னணியில் மட்டும் பார்க்க முடியாது. இன்றைக்கு கம்யூனிஸ்டுகள் பெரிய செல்வாக்கோடு இருக்கக்கூடிய கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களில் சமூக இயக்கங்களுக்கு கம்யூனிஸ்டு கட்சி தான் தலைமை தாங்கியது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை துரதிருஷ்டவசமாக கம்யூனிஸ்டு இயக்கம் சமூக சீர்த்திருத்தத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. பெரியார் அந்த இடத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சாதியா, வர்க்கமா என்று வரும்போது சாதிதான் முதலில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதும், வர்க்கம் ஒழிந்தால் சாதி தானாகவே அழிந்து விடும் என்பதும் போன்ற எதிரும் புதிருமான வாதங்கள் திராவிட இயக்கத்திற்கும், கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே இருந்தது.

ஆனால் 2000ம் ஆண்டு வாக்கிலே கம்யூனிஸ்டுகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள் என்று நீங்கள் சொல்வதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, சமூக விடுதலை போன்றவற்றில் பெரியாரோடு ஒன்றுபட்டோம் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டேன். கம்யூனிஸ்டு இயக்கம் தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்ட காரணத்தினால் சாதி ஒழிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. இந்தக் குறைபாட்டை நீக்குவதற்கு நாங்கள் முயற்சிகள் எடுத்து வந்திருக்கிறோம். இப்போது முழுமையாக அதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்டு கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு சினிமாவில் இருந்து திராவிடக் கட்சிகளுக்கு வந்த நடிகர்களும், அதனால் ஏற்பட்ட கவர்ச்சி அரசியலும் தான் காரணம் என்று சொல்லப்படுகிறதே, அது சரியா?

திராவிட முன்னேற்றக் கழகமோ, அதற்குப் பின்னால் வந்த அ.தி.மு.க.வோ இந்த அளவுக்கு வளர்ச்சி பெறுவதற்கு கவர்ச்சி அரசியல் தான் காரணம் என்று கூறி அவற்றின் பாத்திரத்தை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை. தமிழ், தமிழ்க்கலாச்சாரம் ஆகியவற்றின் பின்னணியில் அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் கலை உலகத்தோடு நெருங்கிய தொடர்பு உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பின்புலமாக இருந்தது திராவிட இயக்கப் பாரம்பரியம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இதே நிலை கேரளாவிலும் ஏற்பட்டது. பிரேம் நசீர் போன்ற நடிகர்கள் அரசியல் கட்சிகளைத் தொடங்க முயற்சித்தார்கள். ஆனால் அது அங்கே எடுபடவில்லை. என்.டி.ராமாராவ் வித்தியாசமாக ஆந்திராவில் வெற்றி பெற முடிந்தது. தமிழ்நாட்டில் கலைத்துறையோடு இவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு மக்களை ஈர்ப்பதற்கு உதவியது. ஆனால் அது மட்டும் அவர்கள் வளர்ச்சிக்குக் காரணம் கிடையாது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப கட்டத் தலைவர்கள் அனைவரும் பத்திரிகை நடத்தினார்கள். தங்களது எழுத்தால், பேச்சால் ஏராளமான தமிழ்மக்களை தங்கள் பால் ஈர்த்தார்கள். அதுதான் அவர்களது வளர்ச்சிக்கு, 67-ல் கிடைத்த தேர்தல் வெற்றிக்கு அடிப்படை. வெறும் சினிமா கவர்ச்சி என்றோ, வெறும் கலையுலக அரிதாரப் பூச்சு தான் வளர்ச்சிக்கு காரணம் என்றோ ஒதுக்கிவிட முடியாது.

திராவிடக் கட்சிகள் மிகக் குறுகிய காலத்தில் அடைந்த வெற்றியை ஏன் கம்யூனிஸ்டு இயக்கத்தால் சாதிக்க முடியவில்லை?

இதற்கு பல காரணங்களை சொல்ல முடியும். ஒன்று கம்யூனிஸ்டு இயக்கத்திலே இடையறாது நடந்து வந்திருக்கிற தத்துவார்த்த சண்டைகள். இதன் விளைவாக நிகழ்ந்த அடுத்தடுத்த பிளவுகள். இதில் ஏதோ ஒரு பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது அல்லது மக்களால் நிராகரிக்கப்பட்டது என்று சொன்னால் அது ஏதோ அந்த மக்களையோ குறிப்பிட்ட பிரிவின் தலைவர்களையோ மட்டும் பாதிக்கவில்லை. செங்கொடி இயக்கத்தையே முழுமையாக பாதித்தது.

உதாரணமாக மும்பையில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்டு கட்சி மிகுந்த செல்வாக்கோடு விளங்கியது. மறைந்த தோழர் எஸ்.ஏ.டாங்கே அங்கு தலைவராக இருந்தார். அவரோடு நாங்கள் வேறுபட்டோம். தத்துவார்த்த சண்டையெல்லாம் நடந்தது. இதனால் அங்கு கம்யூனிஸ்டு கட்சி பின்னடைவை சந்தித்தது. அங்கு நடைபெற்ற தவறுகள் டாங்கேவை மட்டுமல்ல செங்கொடி இயக்கத்தையே பாதித்தது.

தொடர்ந்து செங்கொடி இயக்கத்துக்குள் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக நக்சல்பாரி இயக்கங்கள் தோன்றியது. நக்சல்பாரி இயக்கத்துக்குள்ளும் பின்னால் பல பிரிவுகள் தோன்றியதன் விளைவாக ஏராளமான சிறு சிறு குழுக்களாக அவர்கள் உடைந்து போனார்கள். இந்தப் பிளவுகளின் காரணமாக கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் தங்களுக்குள்ளேயே பரிமாற்றங்களை நடத்திக் கொண்டிருந்தார்களே தவிர அதற்கு அப்பாற்பட்ட மக்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்த முடியாத ஊனம் ஏற்பட்டது.

இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சி மாநிலத்திற்கு ஒரு கொள்கையை கடைப்பிடிக்கிறதா? சேலம் ரயில்வே கோட்டமாகட்டும், முல்லைப் பெரியாறு விஷயமாகட்டும், கேரள அரசின் முடிவுகளுக்கு எதிராக தமிழக கம்யூனிஸ்டுகள் எந்தவொரு உறுதியான நிலைப்பாட்டையும் எடுப்பதில்லையே?

இப்படி குறிப்பிட்ட பிரச்சனைகளை மட்டும் எடுத்துக் கொண்டால் முரண்பாடுகள் நிலவுவது போலத் தெரியும். ஆனால் பிரச்சனையே சுதந்திரத்திற்குப் பின்னால் காங்கிரஸ் கட்சி சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கத் தவறியது தான். காங்கிரஸ் கட்சி தான் ஏற்றுக்கொண்ட மொழிவாரிப் பிரிவினையை அமுல்படுத்தியிருந்தால் ஸ்ரீராமலு ஆந்திராவிலும் சங்கரலிங்கனார் தமிழகத்திலும் உயிரிழக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

தமிழகத்திற்கும் ஆந்திராவிற்கும் இருக்கக்கூடிய எல்லைப் பிரச்சனை என்பது ‘பட்டாஷ்கர் கமிஷன்’ தீர்ப்போடு முடிந்து விட்டது. தேவிகுளம், பீர்மேடு கேரளாவிற்குப் போனது நாஞ்சில் நாடு நம்மோடு வந்தது. திருத்தணியோடு எல்லை நின்று போய் திருப்பதி ஆந்திராவிற்கு சொந்தமானது. ஆனால் கர்நாடகாவிற்கும், மகாராஷ்டிராவிற்கும் இடையேயான எல்லைப் பிரச்சனை இன்னமும் தொடர்கிறது.

சுதந்திரம் கிடைத்த பத்தாண்டுகளில் இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். தீர்வு காணப்படாததால் மாநில வாரியான உணர்வுகள் பெருக்கெடுத்து விட்டன. அகில இந்திய அளவிலே செயல்பட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி 67-ல் உடைபட்டபோது பல்வேறு வட்டாரக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் தோன்றின.

காங்கிரஸ் உட்பட தேசியக் கட்சியாக செயல்பட வேண்டிய கட்சிகள் இந்த மாநில, வட்டாரக் கட்சிகளை எதிர்கொள்வதற்காக மாநில உணர்வுகளுக்குத் தூபம் போட வேண்டியதாயிற்று. ஒரு காலகட்டம் வரைதான் கம்யூனிஸ்டுகளால் இதை எதிர்த்துப் போராட முடிந்தது. அதற்குப் பிறகு கம்யூனிஸ்டுகளும் இதை சந்திக்க வேண்டியிருந்தது.

மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு அகில இந்திய அளவில் தேசிய நோக்கோடு தீர்வு காணும் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசும் பிற கட்சிகளும் இதில் குறுகிய கண்ணோட்டத்தோடு அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபட்டன. இதனால் எங்களது முயற்சி பலனளிக்காமல் போனது. அதன் விளைவுதான் நாம் இன்றைக்கு சந்திக்கக் கூடிய பிரச்சனைகள்.

ஆந்திராவோடு பாலாற்றில் தடுப்பணை கட்டக்கூடிய பிரச்சனை, கர்நாடகாவோடு என்றும் தீராத காவிரிப் பிரச்சனை, கேரளாவோடு முல்லைப் பெரியாறு, சேலம் கோட்டம், நெய்யாறு போன்ற பிரச்சனைகள். இதற்கு எங்களது கட்சியின் அகில இந்தியத் தலைமை இரண்டு மாநிலக் கம்யூனிஸ்டு தலைவர்களோடு பேசி இரண்டு மாநில மக்களிடையே மோதல் வந்துவிடாமல் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறது.

சேலம் கோட்டப் பிரச்சனையை எடுத்துக்கொண்டால் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே, கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கேரள மார்க்சிஸ்ட் எம்.பி.சுரேஷ் தெளிவாகச் சொன்னார். ‘சேலம் கோட்டம் அமைவதிலே எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த முடிவை தன்னிச்சையாக எடுக்காமல் பாலக்காடு கோட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம், அவர்களது பிரச்சனை என்ன, கோட்டம் பிரிப்பதால் இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் தாக்கங்கள் என்ன என்பது பற்றி பரிசீலனை நடத்திவிட்டு இதைச் செய்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்’ என்றுதான் குறிப்பிட்டார்.

அந்தப் பரிசீலனை நடத்தப்பட்டிருந்தால் ரயில்வே அமைச்சகத்திலேயே அமைச்சர் ஒரு நிலையும், இணை அமைச்சர் இன்னொரு நிலையும் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதுபோன்ற பிரச்சனைகளில் தேசிய நலனை முன்னிறுத்தி இரண்டு மாநில மக்களிடையே இது மோதலாக மாறக்கூடாது என்ற கண்ணோட்டத்தில் தான் மார்க்சிஸ்ட் கட்சி செயல்பட்டு வந்திருக்கிறது. ஆனால் தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ், பி.ஜே.பி. போன்றவை இந்த நோக்கில் செயல்படவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது.

சேலம் கோட்டம் பிரச்சனை தொடர்பாக சமீபத்தில் கேரள எம்.பி.க்கள் சீதாராம் யெச்சூரி தலைமையில் பிரதமரை சந்தித்துப் பேசினார்கள். இதே பிரச்சனை தொடர்பாக தமிழக எம்.பி.க்களும் பிரதமரை சந்தித்தனர். ஆனால் இந்தக் குழுவில் தமிழக மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதற்கு என்ன காரணம்? இந்தப் பிரச்சனையில் தமிழக மார்சிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன?

தமிழக எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்தபோது எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதனால் தான் எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை.

சமீபத்தில் கேரள எம்.பி.க்கள் சீதாராம் யெச்சூரி தலைமையில் பிரதமரை சந்தித்தது சேலம் கோட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. ஏற்கனவே இருக்கக்கூடிய கேரளத்தின் கோரிக்கையான, கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட தென்மேற்கு ரயில்வே மண்டலம் ஒன்று அமைய வேண்டும் என்ற கோரிக்கைக்காகத்தான்.

இந்த விஷயத்தை கடந்த செப்டம்பர் 4ம் தேதி சென்னை வந்த எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் தமிழக முதல்வரை சந்தித்து தெளிவுபடுத்தினார். சேலம் கோட்டம் அமைவதில் அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும், கேரளாவிலும் மார்க்சிஸ்ட்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது தான் உண்மை.

இலங்கையில் நடைபெறும் ஈழப் போராட்டம், அங்கு ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து கம்யூனிஸ்டு கட்சிகள் பெரும் மௌனம் சாதிக்கிறார்கள். குறைந்தபட்சம் தமிழக மார்க்சிஸ்ட் தலைவர்களாவது தமிழ் உணர்வோடு இது குறித்துப் பேசியிருக்கலாமே?

தமிழ் உணர்வு என்பது வேறு. இலங்கைப் பிரச்சனை என்பது வேறு. இந்தியாவில் எப்படி நாங்கள் பிரிவினையை ஆதரிக்கவில்லையோ, அதே போல் இலங்கை பிளவுபடுவதையும் நாங்கள் விரும்பவில்லை. இதுதான் காலங்காலமாக எங்களின் நிலைப்பாடு.

1980-களிலே இந்தப் பிரச்சனை உச்சத்திலே இருந்தபோது தமிழக மார்க்சிஸ்ட் ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. இலங்கைத் தமிழர்களின் நலன்கள், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதற்கான தீர்வு என்பது ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி அதிகாரங்களைக் கொண்ட தமிழ் மாகாணங்கள் அமைவது தான் என்பதை தெளிவாகச் சொன்னோம்.

அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தலைமையிலே தமிழக அரசியல் கட்சிகள் ஒரு குழுவாகச் சென்று பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தார்கள். இந்தியா தனது ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தமிழீழத்தை பிரித்து ஈழத்தமிழர்களிடம் கொடுத்து விட்டு இந்தியா வர வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கையாக இருந்தது.

அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்டுகளுக்கு இந்தக் கோரிக்கையில் உடன்பாடில்லை. எங்கள் இயக்கத் தலைவராக இருந்த தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் இந்திராகாந்தியை தனியாக சந்தித்து இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பினால் தெற்காசிய மண்டலத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாகும். இது ஏகாத்திபத்திய தலையீட்டுக்கு வழிவகுக்கும். எனவே இந்தியா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக இதற்கு முடிவுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார். அன்றிலிருந்து இன்றுவரை அதே கொள்கையைத் தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

கையில் ஆயுதங்களோடு தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிங்கள அரசோடு சமாதானமாக வாழச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? அங்கு அரசியல் தீர்வு எப்படி சாத்தியம்?

தமிழர்களுக்கு எதிராக கொடுமைகள் நடக்கிறது என்பதும் சிங்கள இனவெறி உச்சத்தில் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். ஆனால் சிங்களர்கள் அனைவரும் இனவெறியர்கள், தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதிலும், தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் என்று சொல்வதிலும் உண்மையில்லை.

இலங்கையில் ஏராளமான ஈழப் பாதுகாப்பு இயக்கங்கள் இருந்தன. ஆனால் விடுதலைப் புலிகள் அதன் தலைவர்களுக்கு எதிராக வன்முறையைத் தொடுத்தார்கள். சிங்களர்களால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இணையாகவோ கூடுதலாகவோ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையும் இருக்கும். இதில் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் அடங்குவர்.

W.R.Varadharajan ஆகவே பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்பதையோ, ஒன்றுபட்ட இலங்கைக்கு உட்பட்டு தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது போன்ற வாதங்களையோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏற்கவில்லை. அது தமிழர்களின் நலன்களை பாதிக்கக்கூடிய ஒரு இடத்திற்குத் தான் கொண்டு செல்லும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.

தமிழகப் பிரச்சனைக்கே வருவோம். ஏற்கனவே பேசும்போது நாத்திகம், சுயமரியாதை போன்றவற்றில் திராவிடக் கட்சிகளோடு கம்யூனிஸ்டுகள் ஒன்றுபடுவதாகக் கூறினீர்கள். திராவிடக் கட்சிகள் அளவிற்கு கம்யூனிஸ மேடைகளில் நாத்திகம் அதிகம் பேசப்படுவதில்லையே ஏன்?

நான் பகுத்தறிவு, சுயமரியாதை போன்றவற்றில் பெரியாரோடு ஒன்றுபடுவதாக குறிப்பிட்டேன். நாத்திகம் என்று குறிப்பிடவில்லை. வறட்டுத்தனமான நாத்திகம் சாதாரண மக்களின் உணர்வுகளுக்குப் புரியாத ஒன்று. பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தார். அவர் ஒரு சிலையை உடைத்ததன் விளைவாக இன்று ஒவ்வொரு தெருவிலும் பிள்ளையார் கோவிலைப் பார்க்கிறோம்.

தமிழகத்தில் முருகன் தான் தமிழ்க்கடவுள். எங்கிருந்தோ வந்த பிள்ளையாருக்கு இங்கு இத்தனை கோவில்கள் வந்தது எப்படி என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். பகுத்தறிவு என்பது தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். மக்களைத் தெளிவுபடுத்தி அறிவு பெறச் செய்து அதன்பிறகு பகுத்தறிவு கொள்கைகளை சொல்லித் தர வேண்டும்.

திராவிட இயக்கத்தில் இருந்து எங்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள், ‘கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேரலாம் என்கிறீர்களே, இது என்ன கட்சி’ என்று. கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கம்யூனிஸ்டு கட்சிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் சேரலாம். ஆனால் கட்சியில் சேர்ந்த பிறகு கட்சி அலுவலகத்தையோ அதன் கிளைகளையோ பஜனை மடமாக ஆக்க முடியாது. அவர்கள் படிப்படியாக தங்கள் நம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு வர முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியிருக்கிறோம்.

அவர்களிடம் போய் நீ நாத்திகனாய் இருந்தால் தான் அரசியல் இயக்கத்துக்கே வரலாம் என்று முன் நிபந்தனை விதிப்பதை கம்யூனிஸ்டுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்டுகள் தங்கள் வாழ்க்கையில், செயல்பாட்டில் பகுத்தறிவையும் கடவுள் மறுப்பையும் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது கம்யூனிஸ்டு கட்சிகளின் உறுதியான நிலைப்பாடு. அதே நேரத்தில் இந்துத்துவத்திற்கு அடிப்படையாக உள்ள இந்துமதத்தை அழிக்காமல் இந்துத்துவத்தை எதிர்ப்பது எப்படி சாத்தியம்?

இந்து மதம் என்பது வேறு. இந்து மதத்தை பயன்படுத்தி வகுப்புவாதத்தை ஊக்குவிப்பது என்பது வேறு. இஸ்லாமிய நம்பிக்கை என்பது வேறு. முஸ்லிம் பயங்கரவாத குழுக்களின் செயல்பாடு என்பது வேறு. அல்கொய்தா தான் இஸ்லாமியம் என்று நினைத்தால் இஸ்லாம் இந்த மண்ணில் இருந்தே அழிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு நாம் போய்விடுவோம்.

அதுபோல் தான் ஆர்.எஸ்.எஸ். தான் இந்துமதம் என்று நினைக்கக் கூடாது. அவர்கள் போலி இந்துத்துவா பேசுகிறார்கள். மக்களின் மத உணர்வுகளை அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள். அதை எதிர்த்து நாங்கள் உறுதியாக போராடுகிறோம். அடுத்தவர் மனதைப் புண்படுத்தாமல் தங்கள் மதத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதிலே எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை.

கம்யூனிஸ்டு கட்சிக்குள் இருப்பவர்கள் நிலைப்பாடு வேறு. ஆனால் வெளியில் உள்ள பொதுமக்களைப் பற்றி பேசும்போது அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறோம். இதில் உறுதியான நிலைப்பாடு எடுக்க முடியாததற்கு சுதந்திரத்திற்குப் பிறகு வந்த அரசியல் கட்சிகள், மதச்சார்பின்மை என்ற நிலைப்பாட்டிற்குப் பதிலாக சர்வ மத ஒற்றுமை என்ற நிலைப்பாட்டை எடுத்தது தான் காரணம்.

காந்தி ‘ரகுபதி ராகவ ராஜாராம் ஈஸ்வர அல்லா தேரேநாம்’ என்ற பாடலை சர்வமத ஒற்றுமைக்காக பயன்படுத்துவார். எல்லா வானொலி, தொலைக்காட்சியிலும் ஒரு இந்துப்பாடல், கிறிஸ்தவ பாடல், இஸ்லாமியப் பாடலோடு நிகழ்ச்சிகளைத் தொடங்குவார்கள். அப்படி அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டிய இடத்திலே மதத்தை கொண்டு வந்து நிறுத்தியது தான் ஆர்.எஸ்.எஸ்.க்கு விதைநெல்லாகப் பயன்பட்டது. அதை வைத்து அவர்கள் மதவெறியை ஊட்டி, வகுப்புவாதத்தைத் தூண்டினார்கள்.

அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளை எதிர்க்கும் நாங்கள் இந்துமத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் எழுதுவதோ, பேசுவதோ, செயல்படுவதோ இல்லை.

இந்துமதம் தன்னளவிலேயே ஏராளமான பிற்போக்குத்தனங்களையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் தானே கொண்டுள்ளது. நால்வர்ணத்தை அடிப்படையாகக் கொண்டது தானே இந்துமதம்?

மகாத்மா காந்தி வருணாசிரமத்தில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தார். இதில் நாங்கள் காந்தியுடன் வேறுபட்டோம். அதை நாங்கள் இன்னமும் தொடர்கிறோம். வருணாசிரமம் இருக்கும் வரை தாழ்த்தப்பட்டவர்கள் விடுதலை சாத்தியமில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை.

வருணாசிரம தர்மத்தை எதிர்ப்பது என்பது வேறு, இந்துமத நம்பிக்கைகளையே கேள்வி கேட்பது என்பது வேறு. துரதிருஷ்டவசமாக இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா கட்சிகள் அவர்களின் வர்ணாசிரம தர்மத்தை திரை போட்டு மறைத்து விட்டு இந்துக்கள் அனைவரையும் ஒரே அணியில் திரட்ட முடியும், வாக்குகளை வாங்க முடியும் என்ற நோக்கிலே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் நிலைப்பாடு மனு தர்மத்தின் அடிப்படையிலானது. மனு தர்மம், வருணாசிரம தர்மத்தை நிராகரிக்கும் நாங்கள், இந்துமதம் தான் மனுதர்மம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் என்பது பார்ப்பனீயத்திற்கு எதிரானது. ஆனால் அந்த இயக்கங்களையும் வழிநடத்தும் தலைவர்களாக பார்ப்பனர்களே இருக்கின்றனர். கம்யூனிஸ்டு இயக்கங்களிலும் அது தொடர்கிறது. எங்கே போனாலும் பார்ப்பனர்கள் தான் மேலே இருக்க வேண்டும் என்ற மனுதர்ம விதிதான் இங்கும் செயல்படுகிறதா?

கம்யூனிஸ்டு இயக்கத்தின் மீது நீங்கள் வைக்கும் இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். ஒரு காலத்தில் சென்னையில் இது பார்ப்பான் கட்சி, மலையாளத்தான் கட்சி. கீழத் தஞ்சைக்குப் போனால் இது பள்ளன், பறையன் கட்சி. கம்யூனிஸ்டு கட்சி உருவானதின் பின்னணியிலே தான் இந்த இயக்கத்தின் தலைவர்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தை மட்டும் குற்றம் சொல்வது சரியல்ல. காங்கிரஸ் தேசிய இயக்கத்திலும் தலைவர்களாக சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற பார்ப்பனர்கள் தான் இருந்தார்கள்.

நாங்கள் எல்லாப் பிரிவுகளையும் உள்ளடக்கிச் செல்ல வேண்டும், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்குத் தலைமைப் பதவிகளைத் தரவேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம். அதை முழுமையாக செயல்படுத்த சிறிது காலம் பிடிக்கும்.

தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோர் பெரும்பாலும் கல்வி, கலாச்சார குறியீடுகளில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது சுலபத்தில் நடந்து விடுவதில்லை. ஏற்கனவே முன்னேறிய சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு நெருக்கமாக இருக்கிறது. அதனால் அவர்கள் தலைமைப் பதவிகளுக்கு சீக்கிரம் வந்துவிடுவது பொதுவாக நடக்கக் கூடிய ஒன்றுதான். இதை வைத்துக் கொண்டு கம்யூனிஸ்டு இயக்கத்தில் சனாதனிகள் தான் தலைமைப் பொறுப்பு வகிக்கிறார்கள் என்று சொல்வது சரியல்ல.

எங்கள் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையை சாதி அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால் தமிழகத்து சாதி விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தான் இங்கும் இருப்பார்கள் என்பது தெரியும்.

நீங்கள் பன்னாட்டு நிறுவனங்களைக் கடுமையாக எதிர்க்கிறீர்கள். இதை உங்கள் கட்சி உறுப்பினர்கள் அப்படியே பின்பற்றுகிறார்கள். ஆனால் ‘நாம் ஏன் எதிர்க்கிறோம்’ என்கிற தெளிவான அறிவு அவர்களிடம் இருக்கிறதா? அண்மையில் உங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரிடம் பேசியபோது ‘பி.பி.ஓ. என்றால் என்ன’ என்பதுகூடத் தெரியவில்லை. அது என்னவென்பது கூடத் தெரியாமல்...

(இடைமறித்து) இருக்கலாம். 123 ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். நடிகரும், பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவருமான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ‘இது வாஜ்பாயின் அணுகுண்டுக்கு எதிரானது’ என்று கருத்து சொல்லிவிட்டுப் போனார். எதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது.

அடிமட்டத்தில் இருப்பவர்களை அரசியல் கட்சிப் பொறுப்புக்கு உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது. அப்படி உயருகிறபோது அவர்கள் எல்லாவிதமான அறிவையும் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அதீதமானது. அவர்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது வேறு. தெரிந்த பிறகு தான் சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ ஆக முடியும் என்பது வேறு.

பொதுவாகவே இந்த நாட்டில் ஒரு போக்கு தென்படுகிறது. அரசியல்கட்சிகளை, அரசியல்வாதிகளை சிறுமைப்படுத்தி ஈனப்பிறவிகளாக காட்டக்கூடிய ஒரு போக்கு ஊடகத்திலே மலிந்து கிடக்கிறது. அது தவறு. தமிழ்நாட்டில் எங்கள் கட்சி உறுப்பினர்களில் 30 சதவீதம் பேர் கல்வியறிவில்லாதவர்கள். ஐந்தாவது வகுப்பைக் கூடத் தாண்டாதவர்கள்.

அவர்களுக்கு உலக வர்த்தக மைய பாதகங்களையோ, 123 ஒப்பந்தத்தையோ விளக்குவது என்பது சிக்கலான காரியம். மற்றக் கட்சிகளோடு ஒப்பிடும்போது மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வரை அரசியல் விழிப்புணர்வில் மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பது பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலை. ஆனாலும் சில குறைகள் இருக்கலாம். அதை உணர்ந்திருக்கிறோம். விரைவில் அது சரிசெய்யப்படும்.

இடஒதுக்கீடு சமகாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனை. இதில் கிரிமிலேயருக்கு இடமில்லை என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றின் தமிழ் மாநில அமைப்புகள் தெளிவாக கூறிவிட்டன. ஆனால் அகில இந்திய அளவில் மார்க்சிஸ்டுகள் இதை ஏற்றுக்கொள்வில்லை. இந்த ஒற்றுமையின்மைக்கு என்ன காரணம்?

இட ஒதுக்கீட்டில் எங்கள் கட்சியின் அகில இந்திய நிலைப்பாட்டை ஒட்டித்தான் நாங்கள் எங்கள் முடிவுகளை எடுக்கிறோம். கிரிமிலேயர் என்பது பிற்படுத்தப்பட்ட பிரிவுலேயே வசதி படைத்தவர்களை தனியாகப் பிரிக்க வேண்டும் என்பது. பீகார் முதல்வராக இருந்த கர்பூரி தாக்கூர் தான் இதை முன்மொழிந்தார். பீகாரில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எம்.ஜி.ஆர்.ஆட்சிக் காலத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் ஒரு கோரிக்கை வைத்தார். ‘இட ஒதுக்கீடு என்பது பொதுவாக இருக்கிறது, இதன் பயனை தலித்துகள் அனுபவித்து விட்டார்கள். பிற்படுத்தப்பட்டவர்களில் பின் தங்கியவர்களான வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு இன்னமும் கிடைக்கவில்லை’ என்று. தி.மு.க. ஆட்சியிலே வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.

கிரிமிலேயர் எதிர்ப்பு என்பது எங்களால் விளங்கிக் கொள்ள இயலாத ஒன்றாக இருக்கிறது. நாங்கள் தெளிவாக ஒன்றைச் சொல்கிறோம். கிரிமிலேயர் இருந்தாலும் கூட, தலித்துகளுக்கு எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு இந்த கிரிமிலேயர் பாகுபாடு கூடாது. அதற்கு சாதி அடிப்படையில் தான் ஒதுக்கீடு தொடர வேண்டும். பிற்படுத்தப்பட்ட்வர்களுக்கு கிரிமிலேயரை அமுல்படுத்தும்போதும் அது அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுப்பதிலே போய் முடியக்கூடாது.

முதலில் பிற்படுத்தப்பட்டவர்களில் மிகவும் பின் தங்கியவர்கள் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அவர்களில் இல்லையென்றால் பிற்படுத்தப்பட்டவர்களில் கிரிமிலேயர் பிரிவினருக்கு அது போய்ச் சேரட்டும். பிற்படுத்தப்பட்டோர் இடத்தில் இருந்து ஒன்று கூட கிரிமிலேயர் என்ற பெயரில் பிற்படுத்தப்பட்டோர் அல்லாத பொது பிரிவினருக்கு போகக்கூடாது என்பதிலே உறுதியாக இருக்கிறோம். இதை ஏற்றுக் கொள்வதிலே இட ஒதுக்கீடு ஆதரவாளர்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்பது விளங்காத ஒன்றாகத் தான் இருக்கிறது.

விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் தலை இருக்கிறவர்கள் எல்லாம் தலைவர்களாகி விடுகிறார்கள். விஜயகாந்த், சரத்குமாரின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சமீபத்தில் விஜயகாந்த் தன்னுடைய பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்தார். அதனால் மட்டும் வறுமை ஒழிந்து விடுமா? வறுமையை ஒழிப்பதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதை வைத்துத்தான் மக்கள் அவரைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம், ரிலையன்ஸ் ப்ரெஷ் கடைகள் உள்ளிட்ட பிரச்சினைகளில் மாநில அரசை பாமக கடுமையாக எதிர்க்கிறது.. ஆனால் அரசுக்கு எதிராக சிபிஎம் எந்தவொரு போராட்டமும் நடத்துவதில்லையே, ஏன்?

பா.ம.க.வைப் பற்றிய உங்களின் மதிப்பீடு அப்படி இருக்கலாம். நாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் அடிப்படையில்தான் அரசின் கொள்கைகளை நாங்கள் பார்க்கிறோம். இன்னொரு கட்சியைப் பின்பற்றி நடக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பா.ம.க.தலைவர் ஜி.கே.மணியை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தமிழோசையில், இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவாக தொடர்ச்சியாக தலையங்கம் எழுதப்பட்டு வருகிறது.

அணுசக்தி ஒப்பந்தம் மூலம் மன்மோகன் சிங் நாட்டை வல்லரசாக்க முயற்சிக்கிறார், கட்டுமானத்தை வலுவாக்க முயற்சி செய்கிறார் என்று அதில் எழுதுகிறார்கள். அதுதான் மன்மோகன் சிங் செய்துகொண்டிருக்கும் காரியமா? 123 ஒப்பந்தத்தை தி.மு.க.கூட அவ்வளவு ஆதரிக்கவில்லையே, ராமதாஸ் செய்வது ஏன்?

மன்மோகன் சிங்கின் கொள்கைகள் எல்லாம் சிறந்தவை என்றால் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ராமதாஸ் ஏன் எதிர்க்கிறார்? மன்மோகன் ஆட்சி கொண்டு வந்தது தானே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, அதையும் ஆதரிப்பாரா மருத்துவர் ராமதாஸ்?

மத்தியில் ஆட்சியில் பங்கு இருக்கிறது, அதனால் அனைத்து திட்டங்களையும் ஆதரிக்கிறார்கள். அதே நேரத்தில் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு இல்லை, அதனால் அரசை விமர்சித்து வருகிறார்கள். இது அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கலாம். அதே அளவுகோலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் விவகாரத்தில் ராமதாஸ் எதிர்ப்புக்குரல் எழுப்பிய போது, தமிழக முதல்வர் சொன்ன பதில் இதுதான். ‘இது நீங்களும் நானும் சேர்ந்து டெல்லியில் மத்திய அமைச்சரவையில் கேட்க வேண்டிய கேள்வி’ என்று சொன்னார். கேட்டாரா ராமதாஸ்? அது மட்டுமல்ல மத்திய அரசு எடுக்கும் எல்லா முடிவுகளும் அமைச்சரவை கூடி முடிவு செய்யும் விஷயம் தானே. இதில் எந்த முடிவுகளிலாவது மத்திய அமைச்சர் அன்புமணி தலையிட்டு, ‘வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார் என்று பத்திரிகைகளிலாவது செய்தி படித்ததுண்டா? அல்லது ஏதாவது கிசுகிசுவாவது கசிந்ததுண்டா? ஆகவே அந்த அளவுகோலை வைத்து எங்களை ஏன் மதிப்பிடுகிறீர்கள்?

உங்களை அவர்களோடு ஒப்பிடவில்லை. அரசை நீங்கள் விமர்சிப்பதில்லையே என்பது தான் கேள்வி...

கடுமையாக விமர்சித்திருக்கிறோம். சென்னை மாநகராட்சித் தேர்தலில் எங்கள் அளவுக்கு யாராவது விமர்சித்தார்களா? அதில் பாட்டாளி மக்கள் கட்சி பயனாளியாக இருந்தது, அதனால் வாய்மூடிக்கொண்டு மௌனமாக இருந்தார்கள். கூட்டுறவு தேர்தலில் பயன் கிடைக்கவில்லை. அதனால் வாய் திறந்தார்கள். நாங்கள் தான் எல்லாவற்றையும் சரியாக விமர்சித்தோம்.

கடந்த அ.தி.மு.க.தேர்தலில் பொன்னையனின் நிதிநிலை அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு 50 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக சொன்னீர்களே, அது எங்கே போயிற்று என்ற கேள்வியையும் நாங்கள் தான் கேட்டோம். வீட்டுமனைப் பட்டாவிற்கான இயக்கத்தை நடத்துவதும் நாங்கள் தான். அருந்ததியர் மக்களுக்காக நாங்கள் போராடுகிறோமே, பா.ம.க. வாய் திறந்ததா? அரசியல் ஆதாயங்கள், வாக்கு வங்கி அடிப்படையில் நாங்கள் பிரச்சனையைப் பார்ப்பதில்லை.

இந்த ஆட்சி கடந்த ஆட்சியை விட வேறுபட்ட முறையிலே செயல்படுகிறது என்பதைப் பார்க்கிறோம், பதிவு செய்கிறோம். இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தவறிழைக்கிறபோது கடுமையாகக் கண்டிக்கிறோம்.

இட ஒதுக்கீடாகட்டும், இன்னபிற சமூக விஷயங்களாகட்டும் அதற்கு எதிரான ஒரு நிலலயைத் தான் உச்சநீதிமன்றம் தொடச்சியாக எடுத்து வருகிறது. இதனால் தான் பெரியாரும் தனி நாடு கோரிக்கையை முன்வைத்தார். உச்சநீதிமன்றத்தின் இந்தப் போக்கு, தமிழ்த்தேசிய கோரிக்கை இவை இரண்டையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த பொருளாதார தாராளமய உலகில் நீதித்துறையும் அதே போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது கவலையளிக்கக் கூடிய விஷயம். நம் நாட்டில் நீதிமன்றங்களின் தலையீடு எல்லா இடத்திலும் வரம்பை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சராக, மாநில ஆளுநராக இருந்த பூட்டாசிங், அரசு வீட்டைக் காலி செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. நீதிபதி ‘தூக்கியெறியுங்கள் அவரை (throw him out)’ என்று பதில் சொல்கிறார். ஒரு நீதிபதியின் கண்ணியமான செயல்பாடா அது?

‘எய்ம்ஸ்’ மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக வழக்கு. பட்டமளிப்பு விழாவை உடனடியாக நடத்துங்கள் என்று சொல்ல நீதிபதிக்கு உரிமை உண்டு. ஆனால் ‘24 மணிநேரத்திற்குள் கையெழுத்திடுங்கள்’ என்று மத்திய அமைச்சருக்கு நீதிமன்றம் தாக்கீது பிறப்பிப்பது என்ன நியாயம்? நீதிமன்றம் தங்கள் உயரத்தை வரையறை செய்துகொண்டு செயல்பட வேண்டும். நீதிமன்றத்தை விட மேலானது மக்கள் மன்றம். அந்த மக்கள் மன்றத்துக்கு நாடாளுமன்றம் எப்படி பணிந்து நடக்க வேண்டுமோ அப்படித்தான் நீதிமன்றமும் நடக்க வேண்டும்.

அதேபோல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதன் மூலம் நீதிமன்றத்தின் தவறான தீர்ப்புகளை திருத்த முடியும். உதாரணமாக வேலை நிறுத்த உரிமை. நீதிமன்றத்தை எதிர்த்து சட்டம் இயற்ற வேண்டும் என்று 2004 முதல் வலியுறுத்தி வருகிறோம். அரசு சட்டம் இயற்ற மறுத்து வருகிறது.

இந்த தாரளமயச் சூழ்நிலையில் தமிழ்நாடு தனிநாடு ஆகிவிட்டால் மட்டும் நீதிமன்றம் சரியாக இயங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. அது ஒரு பிரமை அவ்வளவு தான். இப்படிப்பட்ட நீதிமன்ற தலையீட்டுப் பிரச்சனைகள் கியூபா, சோவியத் யூனியன் போன்ற எந்த நாட்டிலும் எழவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் முதலாளித்துவ அமைப்பு. இந்த முதலாளித்துவ அமைப்பு உலகமய பொருளாதாரத்தை தழுவுவதன் வாயிலாக ஏற்படக் கூடிய சிதைவுகள். அதன் ஒரு பகுதியாகத் தான் நீதிமன்றம் செயல்படுகிறது. இதற்கு தனிநாடு தீர்வாக முடியாது.

நக்சல்பாரி இயக்கங்களின் செயல்பாடுகள் மீது மார்க்சிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன?

நக்சல்பாரி இயக்கங்களின் செயல்பாடுகள் கம்யூனிஸ்டு இயக்கத்தை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் இந்திய மக்களின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. சீனத்தின் மகத்தான தலைவர் மாவோவின் கோஷங்களை அவர்கள் முன்வைத்தார்கள். சீன கம்யூனிசத் தலைவர்களே நக்சல்பாரி இயக்கத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு, ‘மாவோவின் செயல்பாடுகள் இந்திய நாட்டிற்கு ஒத்துவராது’ என்று சொன்னதாக எங்களுக்கு தகவல் உண்டு.

நக்சல்பாரிகளிடம் கொள்கைத் தெளிவு இல்லாதது தான் அவர்கள் இப்படி தனித்தனிக் குழுவாக பிரிந்து செயல்படுவதற்குக் காரணம். நாடாளுமன்றங்கள் வெறும் பன்றித் தொழுவங்கள் என்று லெனின் சொன்னதை மட்டும் வைத்துக் கொண்டு இந்த இயக்கங்கள் தங்கள் இருப்பை நியாயப்படுத்தி விட முடியாது.

புரட்சியின் மூலம் சோஷலிசத்தைக் கொண்டு வருவதற்கு புறச்சூழ்நிலைகள் சாதகமாக இருக்கிறதா, மக்கள் தயாராக இருக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மதிப்பீட்டை உணர்ந்த பல நக்சலைட் இயக்கத் தோழர்கள் எங்களோடு இணைந்திருக்கிறார்கள்.

சிபிஎம்க்கு எதிராக தொடர்ச்சியான பிரச்சாரங்களை மக்கள் கலை இலக்கியக் கழகம் மேற்கொண்டு வருகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். இடதுசாரிகள் தங்களுக்குள்ளேயே பரிமாற்றங்களை நடத்திக் கொள்கிறார்கள், அதைத் தாண்டி மக்களிடம் செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதே போன்றுதான் ம.க.இ.க. எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் கவனம் செலுத்துகிற அளவுக்கு, மார்க்சிய சித்தாந்த்தை மக்களிடம் கொண்டு செல்வதில் செலுத்தியிருக்கிறதா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள் செய்து கொண்டிருப்பது மிகச் சுலபமான வேலை.

உலக சமூக மாமன்றத்தை மும்பையில் நடத்தினோம். உலகமயத்தை எதிர்க்கும் பல்வேறு இயக்கங்கள் அதை நடத்தின. மாற்று உலகம் சாத்தியம் என்ற நம்பிக்கையிலே உலகமயத்தை எதிர்த்து அந்தப் போராட்டத்தை நடத்தினோம். அதை எதிர்த்து ‘ஆப்பக்கடைக்கு எதிர்க்கடை போடுவது போல’, அதிதீவிரம் பேசக்கூடிய நக்சலைட் இயக்கங்கள் எங்களுக்கு எதிராக போட்டி சமூக மாமன்றத்தை நடத்தினார்கள். அதை வேறு நாட்களிலோ, அல்லது வேறு நகரத்திலோ நடத்தியிருக்கலாம். நடத்தவில்லை, அங்கேயே நடத்தினார்கள்.

அந்த மாநாட்டிலே விரும்பத்தகாத சம்பவம் ஒன்று நடந்தது. ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த வழக்கறிஞர் ஒருவர் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அந்த வழக்கு ஒன்றுமில்லாமல் போனது என்பது வேறு விஷயம். ஆனால் அதை வைத்துக் கொண்டு அந்த மாநாட்டையும், மார்க்சிஸ்ட் கட்சியையும் எந்தளவிற்குத் தரக்குறைவாக பேசினார்கள் என்பது, நான் திருப்பிச் சொல்லும் அளவுக்கோ, உங்கள் இணையதளத்தில் வெளியிடும் அளவிற்கோ கண்ணியமானதல்ல. மார்க்சிஸ்டுகளைத் தாக்குவதற்கு மட்டும் இவர்கள் இயக்கம் நடத்துவார்களேயானால் அதனால் பாதிக்கப்படுவது இடதுசாரி கருத்தோட்டமும், மார்க்சிய சிந்தனையும் தானே தவிர நாங்கள் அல்ல.

ஆந்திராவில் நிலத்திற்குப் பட்டா கேட்டு போராடிய இடதுசாரிகள் மீது நடந்த தாக்குதலில் பலர் பலியானார்கள். அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்திலும் பலர் பலியானார்கள். ஆந்திராவில் போராட்டம் நடத்தியது கம்யூனிஸ்டுகள். மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருப்பது கம்யூனிஸ்டுகள். இதைப் புரிந்து கொள்ள முடியவில்லையே?

நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் பிரச்சனையே எழவில்லை. ரசாயனத் தொழிற்சாலை அமைப்பதற்காக அந்த இடத்தை தேர்ந்தெடுத்தது மத்திய அரசு. மத்திய அரசின் குழு நந்திகிராம் சென்று அங்குள்ள பஞ்சாயத்து தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் தான் பிரச்சனையே ஆரம்பித்தது. இந்த விஷயத்தை அப்படியே திரித்து விட்டார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைய வேண்டும் என்று மாநில அரசு விரும்புவதாகவும், அதை மக்கள் எதிர்ப்பதாகவும் சித்தரித்து விட்டார்கள்.

இந்தப் பிரச்சனைகளுக்கு இரண்டு மாதம் முன்பு மேற்கு வங்க முதல்வர் நந்திகிராமுக்கே நேரடியாகச் சென்று இது மத்திய அரசின் ரசாயனத் தொழிற்சாலைத் திட்டம், இதை மக்கள் விரும்பாவிட்டால் இங்கே அமையாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

மார்க்சிஸ்ட் அரசை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது தான் நந்திகிராம் எதிர்ப்பு இயக்கம். உலகம் முழுவதும் கம்யூனிசம் வலியுறுத்துவது விவசாயப் புரட்சிக்கு அடுத்தபடியாக தொழிற்புரட்சி என்பது தான். ஒரு முதலாளித்துவ மத்திய அரசின் கீழ் இருந்து கொண்டு ஒரு மாநில அரசால் எந்த அளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இந்தத் தலைமுறையினர் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களையும் விவசாயத்தோடு கட்டிப்போடக் கூடாது, அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற சிறு முயற்சியைக் கூட ஒரு அரசு செய்யக்கூடாதா? இதில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாமே தவிர, இதை வைத்துக் கொண்டு மார்சிஸ்ட் அரசை சிறுமைப்படுத்துவது தவறானது.

சங்கர்ராமன் கொலை வழக்கில் தொடர்புடைய விஜயேந்திரனை கர்நாடக எல்லைக்கு போய் அழைத்து வந்தவர் இந்து ராம். அவர் தொடர்ச்சியாக மார்க்சிய மேடைகளில் பங்கு பெறுவது எதனால்?

இந்து ராம் ஒரு பத்திரிகையாளர். அவர் எடுக்கும் நிலைப்பாடுகள் மார்க்சிஸ்ட் நிலைப்பாடுகளுக்கு ஆதரவாக இருந்தால் அவரை பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு? எங்களை விமர்சிப்பவர்கள், காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகர சுவாமிகள் இறந்தபோது அவருக்கு இரங்கல் செய்தி அனுப்பாத கட்சிகள் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், திராவிடர் கழகமும்தான் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். மற்ற எல்லாக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இரங்கற்பா வாசித்தன.

இந்து ராம் காளஹஸ்தியில் போய் விஜயேந்திரரை அழைத்து வந்தது அவரது சொந்த விஷயம். அதற்கும் சிபிஎம் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்து ராம் சிபிஎம் உறுப்பினரா?

நிச்சயமாக இல்லை. அவரை நியாயப்படுத்த வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை.

சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் சிலர் சுயசாதியிலேயே திருமணம் செய்துகொள்வது, வரதட்சணை வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த பிற்போக்குத்தனங்களைக் களைவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

வரதட்சணை, சாதி போன்ற சமூக சீர்கேட்டுக்கு எதிராக உறுப்பினர்களை வழிப்படுத்த மத்திய நெறிப்படுத்தும் இயக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம்.

கட்சிக்குள் வருபவர்கள் இந்த சமுதாயத்தில் உள்ள சீர்கேட்டை சுமந்து கொண்டு தான் வருகிறார்கள். அவர்களை சீர்ப்படுத்தி சிறந்த கம்யூனிஸ்டாக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். சிறுபகுதி சிக்குண்டு கிடக்கலாம். அவர்களையும் விடுவிக்க முயற்சி செய்வோம்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசு ஊழியர்கள் கூண்டோடு டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது, பொதுமக்களில் பெரும்பாலோனோர், ‘இவங்களுக்கு வேணும்யா’ என்ற கருத்துநிலையில்தான் இருந்தனர். அந்தளவுக்கு அரசு ஊழியர்களால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டிருந்தனர். இந்த அரசு ஊழியர் சங்கங்களில் பெரும்பாலானவை கம்யூனிஸ்டு கட்சிகளோடு தொடர்புடையவை. தங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெறும் அரசு ஊழியர்கள் தங்களது கடமைகளைச் செய்கிறார்களா? இதை கம்யூனிஸ்ட் இயக்கம் எப்படி சுட்டிக் காட்டுகிறது?

நாங்கள் எங்கள் சங்க ஊழியர்களிடம் சொல்வது இதுதான், ‘அரசுத்துறைகளை தனியார்மயமாக்குவது அரசின் நோக்கம். நீங்கள் உங்கள் கடமையைச் செய்யாமல் மக்கள் வெறுப்பை சம்பாதித்தால் அரசின் நோக்கம் எளிதில் நிறைவேறுவதற்கு நீங்களே உதவுவதுபோல் ஆகிவிடும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை எதிர்க்கும் உங்களது போராட்டமே உங்களது வேலைக்கலாச்சாரத்தால் ஊனப்படுகிறது’ என்பதைத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.

மத்தியில் காங்கிரஸ் அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை விலக்கினால் பி.ஜே.பி.ஆட்சிக்கு வந்துவிடும் அபாயம் இருப்பதால் காங்கிரஸை ஆதரிக்கிறீர்கள். இந்த இரண்டையும் தவிர்த்து மூன்றாவதாக கம்யூனிஸ்டுகள் தலைமையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறதா?

காங்கிரஸ், பி.ஜே.பி. அல்லாத ஒரு மூன்றாவது அணியை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களது நீண்டநாள் கோரிக்கை. இந்த நாடாளுமன்றத்திற்கு உட்பட்டு அப்படி ஒரு ஆட்சியை அமைப்பது இப்போது சாத்தியமில்லை என்றும் நாங்கள் கருதுகிறோம். அந்த மூன்றாவது அணி மாற்றுக் கொள்கையின் அடிப்படையில் மக்கள் ஆதரவோடு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இது உடனடியாக நடைபெறாவிட்டாலும் நாட்டு நிகழ்வுகள் அதை நோக்கி தள்ளிக்கொண்டு இருக்கின்றன. நிச்சயம் அப்படி ஒரு மூன்றாவது மாற்று உருவாகும். இந்தியா முழுவதும் மார்க்சிஸ்டுகள் தலைமையிலான ஒரு ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள், ஆனால் அது கைகூடவில்லையே என்ற ஏக்கமும் இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டிற்கும் மாற்று அரசாக ஒன்று அமையும் வாய்ப்பு இருக்கிறதா?

தி.மு.க., அ.தி.மு.க. அணிகளுக்கு மாற்றாக இடதுசாரிகளின் ஆட்சி தமிழகத்தில் அமைவது உடனடியாக சாத்தியமில்லை. தமிழகத்தில் எங்களது கட்சியின் செயல்பாடுகளைப் பொறுத்தே மக்கள் எங்களைத் தேர்ந்தெடுக்க முடியும். மக்கள் தான் அதை நோக்கி எங்களை அழைத்துச் செல்ல முடியும்.

இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் நீங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறீர்கள். இந்த ஒப்பந்தம் என்னமாதிரியான பாதகங்களைக் கொண்டிருக்கிறது?

சுதந்திர இந்தியாவின் 60 ஆண்டுகால வரலாற்றில் தன்னுடைய நாட்டை மற்றொரு நாட்டின் சட்டத்துக்கு உட்படுத்தும் ஓர் ஒப்பந்தத்தை இதுவரை யாரும் செய்ததில்லை.

W.R.Varadharajan இந்த ஒப்பந்தம் நிறைவேறி விட்டால் அடுத்த ஆண்டே நம்முடைய மின்சாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பதும் பொய்யானது. அணுமின் நிலையத்தை உருவாக்கி செயல்படுத்துவதற்கு 12 முதல் 15 வருடங்கள் ஆகும். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக எத்தனை ஆண்டுகள் காத்துக் கொண்டிருக்கிறோம்? அது செயல்படுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று செய்திகள் சொல்கின்றன.

இன்றைக்கு மத்தியில் இருக்கக்கூடிய கூட்டணி அரசு ஒரு சிறுபான்மை அரசு. இந்த அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடையாது. மன்மோகன் சிங் சார்ந்த காங்கிரஸ் கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது.

அன்றைக்கு பா.ஜ.கவின் அணு ஆயுதச் சோதனையை தடுத்து நிறுத்தும் வலிமை அப்போது எங்களுக்கு இல்லை. ஆனால் இன்றைக்கு எங்கள் ஆதரவு இருந்தால் தான் ஆட்சி நீடிக்கும் என்ற நிலையில் எங்கள் கருத்தைப் புறந்தள்ளி விட்டு அரசு நிர்வாக ரீதியாக ஒரு முடிவை எடுக்கும், அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல.

இன்றைய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் அணுசக்தி ஒப்பந்தந்தை எதிர்க்கிறார்கள். நாடாளுமன்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை அரசு ஏற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு எதுவும் இல்லை.

சர்வதேச ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலைமை நீடிக்கிறது. உலகின் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச ஒப்பந்தங்களை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்ற முடியாது. அதை ஏன் இந்தியா ஏற்கக்கூடாது என்பது தான் எங்களது கேள்வி.

அணுசக்தி ஒப்பந்தம் என்பதைத் தாண்டி நீண்டகாலத்திற்கு அமெரிக்காவிற்கு இந்திய ராணுவத்தை அடகுவைக்கும் செயல் இந்த ஒப்பந்தம். கூட்டுசேரா நாடுகளின் ஒப்பந்தத்தை மீறி அமெரிக்காவிற்கு நாட்டை அடகுவைக்கும் ஒரு நிலைக்கு தான் இந்தியாவை கொண்டு செல்கிறார்கள். அமெரிக்காவுடன் கூட்டு என்பதால் அதை நாங்கள் வெறுமனே எதிர்க்கிறோம் என்று கூறுவது மிகவும் தவறானது.

ஜவஹர்லால் நேரு காலத்திலும், இந்திராகாந்தி காலத்திலும் காங்கிரஸ் எடுத்த முடிவு என்பது இந்தியா அமெரிக்காவின் நேட்டோ ராணுவ ஒப்பந்தத்திலும் சேராது, சோவியத் யூனியனுடன் வார்சா ஒப்பந்தத்திலும் சேராது என்பதுதான். நாங்கள் அதை ஆதரித்தோம். அதே நிலைப்பாட்டை இப்போதும் தொடர்கிறோம். அதிலிருந்து பிறழ்ந்து பாரதீய ஜனதாக் கட்சி ஆரம்பித்து வைத்த இடத்திற்கு இவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

தன்னுடைய சொந்த நாட்டிலேயே மக்களிடம் செல்வாக்கை இழந்து செல்லாக்காசாகி விட்டவர் ஜார்ஜ் புஷ். அவரை நம் பிரதமர் ஆரத் தழுவிக் கொள்வதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியா கூட்டுசேரா நாடுகளின் நட்பை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், எந்த நாட்டுடனும் ராணுவக் கூட்டு செய்யக் கூடாது என்பதில் நாங்கள் பிடிவாதமாக இருக்கிறோம்.

இந்தியா ஒரு அணு ஆயுத வல்லரசு என்று சொல்வதை விட உலகத்தில் எல்லா நாடுகளிலும் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன என்று சொல்வதைத் தான் நாங்கள் விரும்புகிறோம். இந்தியா ஒரு வல்லரசாக இருப்பதை விட நல்லரசாக இருப்பது தான் சிறந்தது.

இந்த மாதிரியான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு ஊடகம் ஒரு வலிமையான ஆயுதம். ஆனால் தமிழகத்தில் இடதுசாரிகள் ஊடகத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. கட்சிப் பத்திரிகையான தீக்கதிர் கூட மிகவும் குறைவாகத்தானே விற்பனை ஆகிறதே?

இடதுசாரிகளின் பலத்துக்கு ஏற்பத் தான் ஊடகங்களில் இடதுசாரிகளின் தலையீடும் இருக்கமுடியும். இப்போது எங்களுக்கு இருக்கும் சக்திக்கு குறைவாக நாங்கள் செயல்படவில்லை. பத்திரிகை, சிறு பிரசுரங்கள், கலைக்குழுக்கள் மூலமாக தொடர்ந்து எங்கள் பிரச்சாரத்தை செய்து வருகிறோம். இதை இன்னும் அதிகப்படுத்தவும் முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

தீக்கதிர் பத்திரிகையிலும் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மலர்கள் வெளிவருகின்றன. ‘மதம் மக்களுக்கு அபின்’ என்ற கருத்துடைய இடதுசாரிகள் இவ்வாறு சமரசம் செய்துகொள்வது சரியா?

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாடுவார்கள். அது ஒரு மத நம்பிக்கை என்பதை விட பண்பாட்டுத் திருவிழா என்ற வகையில் அது முக்கியத்துவம் பெறும். அப்படித்தான் இந்த திருவிழாக்களை பார்க்கிறோம். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த சிறப்பிதழ்களையும் பார்க்கிறோம். அதிலே என்ன கருத்துக்களைச் சொல்கிறோம் என்பது தான் முக்கியம். மதக் கருத்துக்கள் எதையும் நாங்கள் சொல்வதில்லை. அதுமட்டுமல்லாமல் வணிக ரீதியாக எங்களை தக்க வைத்துக் கொள்வதற்கும் இந்த சிறப்பிதழ்கள் உதவி செய்கின்றன என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். ‘ஆற்றிலே நின்று அரோகரா என்றாலும் சோற்றிலே இருக்கிறான் சொக்கப்பன்’ என்பது எங்களுக்கு மட்டும் பொருந்தாத பழமொழியா?

கடைசியாக ஒரு கேள்வி. மார்க்சியத் தலைவர்கள் மிக எளிமையானவர்களாக இருந்தாலும் அவர்கள் பேசுவது எளிமையானதாக, தொண்டர்களுக்குப் புரிவதாக இருப்பதில்லை. இது ஏன்?

என்ன செய்வது நாடு சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை நாங்கள் பேசித்தானே ஆக வேண்டியிருக்கிறது. இந்த 123 ஒப்பந்தம் கூட நூற்றுக்கு 99 பேருக்குப் புரியவில்லை. அதற்காக அதைப் பேசாமல் இருக்க முடியாது. எளிமையான தொழிலாளர்களுக்காக அவர்களின் பிரச்சனைகளை புரிந்தும் போராட வேண்டியிருக்கிறது, அதே நேரத்தில் சர்வதேச பிரச்சனைகளிலும் தலையிட வேண்டியிருக்கிறது. இந்த இரண்டையும் சரியாக இணைப்பதில் தான் எங்களது வெற்றி இருக்கிறது.

கம்யூனிஸ்டு ஆவதற்காக வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கிறது. ஒருவன் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்ததால் மட்டும் கம்யூனிஸ்டு ஆக முடியாது. கம்யூனிசத்தை புரிந்து கொண்டு கம்யூனிஸ்டாவதற்கும், வாழ்நாள் முழுவதற்கும் கம்யூனிஸ்டாகவே வாழ்வதற்கும் அவன் மிகப்பெரிய போராட்டத்தை தனக்குள்ளேயே நிகழ்த்த வேண்டியிருக்கிறது. அந்தப் போராட்டம் நிறைவேறும்போது உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

- உ.ரா.வரதராஜன் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com