Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
இந்து முன்னணியின் திடீர்த் தமிழ்ப் பற்று

சுப.வீ.

வரும் டிசம்பர் மாதம், திண்டுக்கல்லில் நடைபெறவிருக்கும் இந்து முன்னணியின் மாநாட்டையொட்டி, அப்பகுதியில் பலவிதமான சுவரெழுத்து விளம்பரங்களை எழுதியுள்ளனர். அனைத்து விளம்பரங்களிலும் தவறாமல் அவர்கள் குறித்துள்ள ஒரு தொடர் நம்மை வியப்பிற்குள்ளாக்குகிறது. "இந்துக்களின் எண்ணிக்கை குறையுமானால், தமிழ், தமிழரின் நிலை என்னவாகும்?'' என்பதே அத் தொடர்.

இரண்டு மோசடிகள் அத்தொடருக்குள் ஒளிந்திருக்கின்றன. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் தனக்கு மிகப்பெரும் அக்கறை இருப்பது போல இந்து முன்னணி காட்டிக்கொள்ள முயல்வது முதல் மோசடி. பிற மதத்தினர் அனைவரும் தமிழின் எதிரிகள் போலவும், தமிழர்கள் அல்லாதவர் போலவும் காட்டி, தமிழர்கள் என்றால் இந்துக்கள் மட்டுமே என்னும் மாயையை உருவாக்க முயல்வது இரண்டாவது மோசடி.

திடீரென்று தமிழ்ப்பாசத்தை வெளிப்படுத்தும் இந்து முன்னணி இதுவரையில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குச் செய்தது என்ன? மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து உருவான இந்து முன்னணி, அன்றிலிருந்து இன்றுவரை தமிழைச் சிதைத்து சமற்கிருதத்தைத் தூக்கி நிறுத்த முயன்றதையும், தமிழர்களிடையே மதக்கலவரத்தை உருவாக்கித் தமிழர்களைக் கூறுபோட்டதையும் தவிர வேறு எதையும் செய்யவில்லை.
கோயில்களில் தமிழ் வழிபாட்டிற்கு இவர்கள் ஒருநாளும் ஆதரவு தெரிவித்ததில்லை. சமற்கிருதமே இந்துக்களின் வேதமொழி என்ற கருத்தில், சமற்கிருத வழிபாட்டிற்கே இவர்கள் எப்போதும் காவடி தூக்கி வந்திருக்கிறார்கள்.

பெயர்களைக் கூட எந்தப் பார்ப்பனரும் தமிழில் சூட்டிக்கொள்வதில்லை. சுப்பிரமணிய அய்யர்தான் உண்டே தவிர, முருகன் அய்யரை எவரும் எங்கும் சந்தித்திருக்க முடியாது.

நல்ல தமிழில் இருந்த தமிழ்நாட்டுக் கோயில்களின் கடவுளர்கள் பெயர்களைக் கூட வடமொழியில் மாற்றியவர்கள்தான் இந்துப் பார்ப்பனர்கள். அப்படித்தான், யாழைப் பழித்த மொழியாள் என்னும் அம்மனின் பெயர், வீணாகான விதூசனி ஆயிற்று. தஞ்சைப் பெருவுடையாரின் பெயர் பிரகதிசுவரராக மாற்றப்பட்டது.
இந்துவிற்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்து என்ற சொல் கூட தமிழ்மொழியின் அகராதியில் இல்லை. இந்து சமயம் பற்றிய எந்தச் செய்தியும் எந்த ஒரு பழந்தமிழ் இலக்கியத்திலும் காணப்படவில்லை. 1799ஆம் ஆண்டுக்கு முன்பு சட்டப்புத்தகங்களில் கூட இந்து மதம் என்னும் சொல் இடம்பெறவில்லை. சைவம், மாலியம், ஆசிவகம் போன்ற பல்வேறு மதங்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றன. இந்து மதம் என்று ஒரு மதம் எப்போதும் இங்கு இருந்ததில்லை. ஆதிசங்கரரரின் முயற்சியிலும் இந்து மதம் முழுமையாக உருவாகிவிடவில்லை. வெள்ளைக்காரர்களே அப்பெயரை முதன்முதலாகச் சூட்டினர். இச்செய்தியை, இறந்துபோன பெரிய சங்கராச்சாரியே தெய்வத்தின் குரல் என்னும் நூலில் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட, பார்ப்பனர்களால் தலையில் வைத்து ஆடப்படுகின்ற இந்து மதத்திற்கும், தமிழ், தமிழருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இங்கே உள்ள கிறித்துவர்கள், இசுலாமியர்கள் ஆகியோரும் தமிழர்களே. அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்தோ, அரபு நாடுகளிலிருந்தோ இங்கு வந்து குடியேறியவர்கள் இல்லை. பார்ப்பனிய & வருணாசிரம கொடுமைகளைத் தாள முடியாமல் மதம் மாறியவர்களே அவர்கள். இசுலாமிய மக்களில் ஒரு பகுதியினருக்கு உருது தாய்மொழியாக இருந்தாலும், பெரும்பான்மையோர் தமிழையே தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஒரு சில ஆங்கிலோ&இந்தியக் கிறித்தவர்களைத் தவிர, அனைத்துக் கிறித்தவர்களும் தமிழர்களே. கிறித்தவ ஆலயங்கள் பலவற்றில் தமிழ் வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்துக்கள் என்றாலே தமிழர்கள்தான் என்பது நம்பமுடியாத பொய்யாகும். பார்ப்பனர்களைத் தவிர்த்து தம்மை இந்துக்கள் என நம்பிக்கொண்டிருக்கும் பல இலட்சக்கணக்கானோர் இந்தியா முழுவதும் பரவி உள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் முதலான பல்வேறு மொழிகளைத் தங்கள் தாய்மொழிகளாகக் கொண்டுள்ள "இந்துக்கள்” தமிழ் நாட்டிலேயே உள்ளனர். எனவே இந்துக்களின் எண்ணிக்கையும், தமிழின் வளர்ச்சியும் எப்போதும் இங்கே நேர்விகிதம் இல்லை.

இந்து முன்னணியின் இந்தத் திடீர்த் தமிழ்ப் பாசம், தமிழ் உணர்வுடையோர் மத்தியில் ஊடுருவும் ஒர் உத்தியாகவே தெரிகிறது. வாலை நுழைக்கும் போதே ஒட்ட வெட்டிவிடுவதுதான் நல்லது. வேண்டுமானால், இந்து முன்னணியின் வினாவிற்கு நாம் இப்படி விடை சொல்லலாம் : இந்துக்களின் எண்ணிக்கை குறைந்தால் சாதி ஒழியும், தீண்டாமை மறையும், தமிழ் மேம்படும், தமிழர் வாழ்வு வளம்பெறும்.

- நவம்பர் 16, 2005

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com