இலண்டனில் – அயோத்தியில் பயங்கரவாதத்திற்கு எதிரான பயங்கரவாதம்
சுபவீ
சில நாள்களுக்கு முன்பு, வெடிகுண்டுகளால் இலண்டன் நகரம் அதிர்ந்திருக்கிறது. நூற்றுக்கணக்கானோர் உயிர்ப்பலி ஆகியுள்ளனர். ஜி8 வல்லரசு நாடுகளின் தலைவர்களும், இந்தியத் தலைமை அமைச்சர் உள்ளிட்ட பிற நாட்டுத் தலைவர்களும் இலண்டனில் கூடியிருந்த அந்த நாளில் குண்டு வெடித்திருக்கிறது என்பதும் இங்கு நினைவில் கொள்ளப்படவேண்டியதாக உள்ளது.
இது ஒரு மோசமான பயங்கரவாதம் தான். மறுப்பதற்கில்லை. அதேவேளை ஈராக்கின் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் சென்ற ஆண்டு தொடுத்த அந்தப் போரும் பயங்கரவாதம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே பயங்கரவாதத்திற்கு எதிரான இன்னொரு பயங்கரவாதம் இப்போது அரங்கேறி உள்ளது. இதைப்போன்றே இன்னொரு நிகழ்வும் இந்தியாவில் நடந்துள்ளது.
13 ஆண்டுகளுக்கு முன்னால் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இந்து மத வெறியர்கள் இடித்துத் தள்ளினர். இடிந்து போனது இந்தியாவின் அமைதியும், மதச் சார்பின்மையும். அன்றிலிருந்தே எதிர் வினைகளும் தொடங்கிவிட்டன. மும்பையில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் சரம் சரமாய் இடிந்து விழுந்தன. கோவையிலும் குண்டுகள் வெடித்தன. மதக் கலவரங்கள் ஓய்ந்தபாடில்லை. ஒரிசாவில் கிறித்துவப் பாதிரியாரும், அவருடைய சின்னஞ்சிறு மகன்கள் இருவரும் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். குசராத்தில் கோத்ரா தொடர்வண்டி எரிப்பு நிகழ்வுகளும், பெஸ்ட் பேக்கரி கொடூரமும் இன்னும் நம் நெஞ்சில் நிழலாடுகின்றன.
இப்போது மீண்டும் அமைதியின்மை தலை தூக்குகிறது. சூன் முதல் வாரத்தில் அயோத்தில் இருக்கும் இராமர் கோயிலைத் தகர்க்க முயன்ற சிலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதை அரசியலாக்கிக்கொள்ளும் அவசரத்தில் பாரதிய சனதா கட்சி, தன் படை பரிவாரங்களை களத்தில் இறக்கி விட்டுள்ளது. ஜின்னா புகழ் அத்வானி, இழந்த தன் முகத்தை மீட்டுக்கொள்வதற்கு இதுவே தக்க தருணம் எனக்கருதி களத்தில் இறங்கி உள்ளார்.
இராமர் கோயிலுக்கு அருகே 15 மீட்டர் தொலைவு வரை நெருங்குவதற்குத் தீவிரவாதிகள் எப்படி அனுமதிக்கப்பட்டனர் என்று சட்டம் பேசுகிறார் மதன்லால் குரானா. பாபர் மசூதியை நெருங்குவதற்கும், தகர்ப்பதற்கும், தரை மட்டம் ஆக்குவதற்கும் கரசேவகர்களை எப்படி அரசு அனுமதித்தது என்று இதுவரை அவர்கள் யாரும் கேட்டதில்லை. பல்லுக்குப் பல், பழிக்குப் பழி, குருதிக்குக் குருதி என்பதுதானே மத அடிப்படைவாதிகள் வகுத்து வைத்திருக்கும் சட்டம். அந்த அடிப்படையில்தான் இன்றும் கலவரங்கள் தொடர்கின்றன.
சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் யார், எவர் என்னும் விவரங்கள் முழுமையாக வெளிவருவதற்கு முன்பே, அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று அவசரமாக முடிவு சொல்லப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் உள்ளூர் வழிகாட்டி என்று அடுத்தநாள் செய்தி வருகிறது. எனவே கண்டவரையும் சுட்டுத் தள்ளி விட்டு, சுடப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்வது பெருமை தராது.
போராட்டம், ஆர்ப்பாட்டம், கடை அடைப்பு, கலவரம் போன்ற செயல்களில் ஈடுபட நேரம் பார்த்திருக்கும் பாரதிய சனதா கட்சி, இப்போது அந்த நேரம் வந்து விட்டதாகக் கருதுகிறது. வெறிகொள்ளும் பேச்சுகளை அக்கட்சியின் தலைவர்கள் பேசி வருகின்றனர். சுட்டுக்கொன்ற சிப்பாய்களுக்கு குசராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பத்து இலட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாய் அறிவிக்கிறார். ஆனால் அவரது தலைவர் அத்வானியோ உ.பி. முதலமைச்சர் முலாயம்சிங் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்கிறார். மோடி பாராட்டுகிறார். அத்வானி பழிக்கிறார். முரண்பாடே உன்பெயர் இந்துத்வாவா? அதே நேரத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இன்னொரு பயங்கரவாதம் பயன்படாது என்பதனை எல்லா மத அடிப்படைவாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
- சூலை 16, 2005
(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|