அனைத்திந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மாநாட்டில் (நாக்பூர்) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் 8.8.1930 அன்று ஆற்றிய தலைமை உரை :

தாய்மார்களே, பெரியோர்களே!

Ambedkarஇன்றைய உங்கள் கருத்தரங்க நிகழ்வுக்குத் தலைமை வகிக்குமாறு என்னை அழைத்துப் பெருமைப்படுத்தியதற்கு, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நீங்கள் வைத்திருக்கும் இந்த நம்பிக்கையை நான் பெரிதும் மதிக்கிறேன். அதே வேளை என் மீது அன்பு கூர்ந்து நீங்கள் தந்திருக்கும் தகுதியையும் அதன் பொறுப்பையும் ஏற்றுச் செயல்படுவது, இயல்புக்கு மீறிய கடுமையான பொறுப்பு எனினும், இதனைத் தவிர்ப்பது அறிவுடைமையன்று என்பதை உணர்ந்து, இப்பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன்...

2. இந்திய அரசியல் அரங்கில் இன்று பெருமளவில் எழுப்பப்பட்டு வரும் கேள்வி – "ஒன்றுபட்ட தன்னாட்சி பெற்ற சமூகமாக மாற, இந்திய மக்களால் இயலுமா?' என்பதுதான். இந்திய நாட்டு மக்களின் சிந்தையில் மட்டுமின்றி, பிரிட்டிஷ் பேரரசின் சிந்தையிலும், உலகின் பிற மக்கள் அனைவரின் சிந்தையிலும் பெரிதும் கலக்கம் விளைவித்துக் கொண்டிருக்கும் இக்கேள்வி குறித்து, தாழ்த்தப்பட்ட மக்களின் கண்ணோட்டம் என்ன என்பதை வரையறுப்பதற்காகவே நாம் இங்கே கூடியுள்ளோம். இந்த நாட்டின் வருங்காலத்தைப் பற்றி எடுக்கப்படும் எந்த இறுதி முடிவிலும், இன்று நாம் எடுக்கவிருக்கும் முடிவு முக்கியப் பங்கினை வகிக்கும். இந்திய விடுதலை எனும் குறிக்கோளை அடைவதை விரைவுபடுத்துவதாகவோ, சீர்கேடு செய்வதாகவோ அமையக்கூடிய ஆற்றல் – நாம் எடுக்கப் போகும் முடிவுக்கு உண்டு.

எனவே இந்த கேள்விக்கு விடை அளிக்கும் பொறுப்பில் நாம் அக்கறையின்றி செயல்படக்கூடாது என்பதைத் தெளிவாக உணர வேண்டும். நாம் எடுக்கும் முடிவுகளின் நன்மை தீமைகள் குறித்து ஆழ்ந்து சிந்தித்தே செயல்பட வேண்டும். நாம் எடுக்கும் முடிவு மற்றவர்களின் முடிவுகளிலிருந்து மாறுபட்டிருக்குமோ என அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் நமது முடிவுகள் விடுதலை சிந்தனை, நேர்மையான நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

3. இந்தப் பிரச்சனைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்திய மக்கள் தனித்தன்மை கொண்ட பெரும் எண்ணிக்கையிலான இனங்களைச் சேர்ந்தவர்களென்றும், அவர்கள் பின்பற்றும் பல்வேறு மதங்களின் கோட்பாடுகள் – பகைமை ரீதியில் வேறுபட்டும் முரண்பட்டும் விளங்குபவை என்றும், பல்வேறு வகையான சடங்குகளைப் பின்பற்றுகிறவர்கள் என்றும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்கள் என்றும், ஒற்றுமையில்லாத பாரபட்சங்கள் பல கொண்டவர்கள் என்றும், முரண்படும் சமூக வழக்கங்கள் பல கொண்டவர்கள் என்றும், ஒருவருக்கொருவர் எதிரான பொருளியல் நலன்களைக் கொண்டவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறு பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டதொரு பெரும் மக்கள் திரள், எவ்வாறு தன்னாட்சி நடத்தும் சமூகமாக விளங்க முடியும் என கேள்வி எழுப்பப்படுகிறது.

இவையெல்லாம் நடைமுறை உண்மைகள். இந்தியாவின் தன்னாட்சி மீது இந்த உண்மை நிலைகள் செலுத்தக்கூடிய தாக்கத்தை அறிவுடைய மனிதர் எவரும் புறக்கணித்து விட முடியாது. இந்த நடைமுறை உண்மை நிலவரங்களை ஏற்றுக் கொண்டு அவற்றிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வர முடியும்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் பெரியோர்களே! இதைப் பற்றிய உங்கள் முடிவான கருத்துக்களை நீங்கள் வெளியிடத் தொடங்குவதற்கு முன்பு இவை போன்றே வேறு பல நடைமுறை உண்மை நிலைகள் சிலவற்றையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். லட்வியா, ருமேனியா, லிதுவேனியா, யுகோஸ்லோவேகியா, எஸ்தோனியா மற்றும் செக்கோஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் நிலைமை குறித்து எண்ணிப் பாருங்கள். இவையெல்லாம் உலகெங்கும் தன்னாட்சிக் கோட்பாட்டை நிறுவுவதை நோக்கமாகக் கூறிக் கொண்டு, 1914 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தப்பட்ட முதலாம் உலகப் பெரும் போரின் முடிவுக்குப் பின்னர் உருவாகிய புதிய நாடுகளாகும். புதிதாக அமைக்கப்பட்ட இந்நாடுகள் அனைத்தும் விடுதலையையும் இறைமையையும் கொண்ட தன்னாட்சி நாடுகளாகும். ஒவ்வொன்றும் தனது உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களில் முழுமையான இறைமை பெற்ற நாடுகளே.

இந்த நாடுகளில் உள்நாட்டு சமூக நிலைமைகள் என்ன? அங்குள்ள நிலைமைகள் இந்திய நிலைமைகளைப் போன்றில்லாமல், அதைவிட சீர்கேடானவை என்பதை நீங்கள் அறிய வியப்படையலாம். லாட்வியாவில், லாட் மக்களுடன் ரஷ்யர்கள், செருமானியர்கள், யூதர்கள் அன்றி மற்றும் பல்வேறு தேசிய இனத்தவரும் வாழ்கின்றனர். லிதுவேனியாவில் லிதுவேனியர்களுடன் யூதர்கள், போலந்தியர்கள், ரஷ்யர்கள் ஆகியோருடன் வேறு பல சிறுபான்மையினரும் வாழ்கின்றனர். யுகோஸ்லோவேகியாவில் செர்பியர்கள், குரோசியர்கள், சுலோவேனியர்கள், ருமேனியர்கள், அங்கேரியர்கள், அல்பேனியர்கள், ஜெர்மானியர்கள், மேகயர்கள், மற்றும் பல இனத்தவரும் வாழ்கின்றனர். அங்கேரியில் மேயர்கள், செருமானியர்க்ள, சுலேவியர்கள் ஆகியோர் வாழ்கின்றனர். மொழியால், இனத்தால் ஒன்றுக்கொன்று வேறுபட்டும் முரண்பட்டும், உள் நாட்டிலேயே போராடும் குழுக்கள் பலவற்றைக் கொண்டவை இந்நாடுகள்.

இத்தகைய பல்வகை வேறுபாட்டினை இணைக்க மத ரீதியான பாலமும்கூட அங்கெல்லாம் கிடையாது. ரோமன் கத்தோலிக்கர்கள், கிரேக்க கத்தோலிக்கர்கள், செக்கோஸ்லவேகிய கத்தோலிக்கர்கள் போன்று – கத்தோலிக்கர்களிலேயே நான்கைந்து பிரிவினர் இருப்பதுடன், எவாஞ்சலியர்கள், யூதர்கள், புராடஸ்டண்டுகள் ஆகியோருடன் வேறு பல சிறு மத குழுக்களும் காணப்படுகின்றன. இவை குறித்து சற்று எண்ணிப் பாருங்கள். இந்நாடுகளில் நிலவும் பரந்துபட்ட, பிளவுபட்ட பல்வேறு பாகுபாட்டு நிலைமைகளை விடவா இந்திய நிலைமை திகைக்க வைப்பதாக இருக்கிறது? இல்லை என்று நான் துணிந்து கூறுவேன்.

இந்தியாவைப் பற்றிய முடிவுக்கு நீங்கள் வருவதற்கு முன்னர், பல்வேறு நாட்டு நிலைமைகளையும் சீர்தூக்கிப் பார்த்து தன்னிச்சையான, நேர்மையான முடிவுக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆகவே பெரியோர்களே! இனம், மதம், மொழி, பண்பாடு ஆகிய பல்வேறு வகையாலும்; பாகுபாடற்ற பல்வேறு வகை மக்களைக் கொண்ட லாட்வியா, லிதுவேனியா, யுகோஸ்லேவியா, எஸ்தோனியா, செக்கோஸ்லவேகியா, அங்கேரி, ருமேனியா ஆகிய நாடுகளில் மக்கள் ஒன்றுபட்டு தமது நாட்டில் தன்னாட்சி சமூகங்களாய் விளங்க முடியும் என்னும் போது, இந்தியர்களால் ஏன் இயலாது என எண்ணிப் பாருங்கள். இயலாதென்பதற்கான காரணங்கள் எதையும் என்னால் காண இயலவில்லை. அப்படிக் காரணங்கள் கூற இயலும் எனக் கருதும் நண்பர்கள் இருப்பின், அவர்கள் கூறும் காரணங்களைக் கேட்டறிய விரும்புகிறேன்.

4. இத்தகைய பன்முக வேறுபாட்டுக் கூறுகள் அனைத்தையும் சீரான ஒரே கூறாக ஒன்றிணைத்த பிறகுதான் தன்னாட்சி நிலையைப் பெறத்தக்க சமூகம் உருவாக முடியும் என்று கருதுவது, தன்னாட்சி முறையே வேற்றுமைக் கூறுகளை ஒன்றிணைத்துப் பிணைக்கவல்ல ஆற்றல் கொண்டதென்பதை மறந்து, குதிரைக்கு முன் வண்டியைப் பூட்டுதல் போன்ற எண்ணப் போக்காகும் என்று எனக்குத் தோன்றுகிறது. தமது எல்லைக்குள் ஒரே மொழியால், ஒரே மதத்தால், ஒரே பண்பாட்டால் ஒன்றுபட்ட சீரான மக்கள் குழுமத்தைப் பெற்றிருப்பது, மிகச் சில நாடுகளுக்கே வாய்த்துள்ள அரியதோர் நிலையாகும். ஆனால் வரலாற்று, புவியியல், அரசியல் காரணங்களால், மொழியால், மதத்தால், பண்பாட்டால் வேறுபடும் மக்கள் குழுக்களே பெரும்பாலான நாடுகளில் காணப்படுகின்றன. அங்கெல்லாம் இவ்வேறுபாடுகள் காலத்தால் ஒன்றோடொன்று கலப்புற்று உள்ளன.

சீரான மக்கள் குழுமம் எனும் அளவுகோலை இம்மக்களின் பால் நீட்டியிருந்தால், அவர்களெல்லாம் இன்றைக்குத் தமது வாழ்க்கை வழியாக்கிக் கொண்டிருக்கும் தன்னாட்சி முறை எனும் திட்டத்தின் கீழ் வந்திருக்கவே முடியாது. மேலும் நன்கு சிந்தித்துப் பார்த்தால், தங்கள் பழைய நிலைகளில் உதிரிகளாய்ப் பிரிந்து வேறுபட்டிருந்த தனிக் குழுக்களை எல்லாம் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தன்னாட்சி அரசமைப்புச் சட்டமல்லவா ஜெர்மன் மக்களையெல்லாம் ஒன்றாக இணைத்தது? 1870 ஆம் ஆண்டுக்கு முன்னர் பவேரியர்கள், பிரஷ்யர்கள், சாக்சானியர்கள் எனத் தனித்தனிக் குழுக்களாக, இனங்களாக, நாடுகளாக இருந்த மக்களைப் பொது அரசின் கீழ் கொண்டு வராமல் ஒன்றிணைத்திருக்க முடியுமா?

பலவகையாலும் வேறுபட்ட மக்களை, ஒரு தேசிய இனமாக ஒன்றிணைப்பதற்கான ஒப்பற்ற கருவி, பொது அரசாங்கம் ஒன்றுதான். இதை விளங்கிக் கொள்வதற்கு ஜெர்மனியைத்தான் எடுத்துக்காட்டாகக் கூற வேண்டுமென்பதில்லை. இந்திய நாடே இதை மெய்ப்பிப்பதற்கானதோர் சிறந்த எடுத்துக்காட்டு அல்லவா? இத்துணை வேறுபாடுகளும் பாகுபாடுகளும் நிறைந்த இந்தியாவில், ஒரே நாட்டினர் எனும் உணர்வு நிலவுகிறது எனில், பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கியதிலிருந்து இப்பரப்பு முழுவதும் – ஒரே பொது ஆட்சியின் கீழ் இருப்பதுதான் காரணம் என்பதை ஏற்கத்தான் வேண்டும். எனவே வரலாற்று நோக்கிலும், காரண காரியவியல் நோக்கிலும், மக்கள் நிலைமைகள், அவற்றில் நிலவும் வேறுபாடுகள் இந்தியா தன்னாட்சி பெறுவதற்குத் தடையாக இருப்பதாக எவரும் கருதவியலாது என்றே எனக்குத் தோன்றுகிறது. சொல்லப் போனால், இந்தியா ஒன்றுபட்ட நாடாக வேண்டும் என்பதே நமது குறிக்கோள் எனில், அதை அடைவதற்குரிய வலிமை வாய்ந்த கருவி தன்னாட்சி அரசே என்பதைத் துணிந்து கூறுவேன்.

5. மக்களிடையேயும், நிலைமைகளிடை÷யயும் காணப்படும் வேறுபாடுகளால் எந்தப் பின்னடைவுகளும் கிடையாதா என்று நீங்கள் கேட்பீர்கள் என்பதில் அய்யமில்லை. தன்னாட்சி கொண்ட இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, இவற்றை எல்லாம் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தேவையில்லையா? எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று சிறிதும் தயக்கமின்றிக் கூறுவேன். மக்களிடையிலும், நிலைமைகளிலும் இந்த வேறுபாடுகளையெல்லாம் புறக்கணித்து விட்டு, தன்னாட்சி இந்தியாவுக்கு வரம்புகளோ, கட்டுப்பாடுகளோ ஏதும் இல்லாத அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்று கூறுவது, இன்றைய சராசரி காங்கிரஸ் அரசியல்வாதிகளின் போக்காக இருக்கிறது.

நாட்டின் சமூக நிலைமைகளைக் கருத்தில் கொள்ளாமல் உருவாக்கப்படும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ், அரசியல் அதிகார மய்யம் எவரிடம் இருக்கும் என்பதை படித்த பெருமக்களாகிய நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். சிறுபான்மை இன மக்களிடையே அது இருக்குமென்றா எண்ணுகிறீர்கள்? இந்திய சமூகத்தின் நடைமுறை நிலைமைகளைப் புறக்கணித்துவிட்டு அமைக்கப்படும் தன்னாட்சி அரசாங்கத்தில் அரசியல் அதிகாரத்தின் பிடிகள், அனைத்து வசதியும் பெற்று கல்வியில் சிறந்து விளங்கும் முன்னணி சாதிகளைச் சேர்ந்த மேல்தட்டு மக்களின் கைகளில்தான் போய்ச் சேரும் என்பதை நான் மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். அதாவது, செல்வத்திலும், கல்வியிலும், சமூகத் தகுதியிலும், அரச போகத்திலும் திளைத்துக் கொண்டிருப்போர் கைகளில்தான் போய்ச் சேரும்.

அரசியலில் ஆகட்டும்; பிற துறைகளிலாகட்டும்; வல்லவர்களுக்கே வெற்றி என்பது தேற்றம். மேல்தட்டினருக்குக் கல்வியாலும் செல்வத்தாலும் பெற்ற வளங்கள் துணை நிற்கும். ஆனால் சிறுபான்மை மற்றும் நலிவடைந்த சமூக மக்கள், மேல்தட்டு மக்களின் இந்தவொரு வளத்திற்கு எதிராக மட்டுமே போராட வேண்டியிருக்குமென்று எண்ண வேண்டாம். செயல்பாட்டில் மிக நுட்பமானதாயினும் உண்மையான கூறு மற்றொன்று உண்டு. அதுதான் அவர்களது நிலைத்த சமூகப் பிடிப்பு. இந்த உறுதியான பிடிப்பில் தகுதிக்கோ, திறமைக்கோ சற்றும் இடமில்லை. இந்திய மக்கள் – உறவு மற்றும் குழுப்பற்று மிக்கவர்கள். தமது உறவோ, குழுவோ அல்லாத மனிதர்களிடையே பாரபட்ச உணர்வு காட்டி ஒதுக்கும் தன்மை மிகுந்தவர்கள். பெரும்பான்மைச் சமூக மக்களிடையே இந்தப் பாகுபாட்டுணர்வு ஆழமாக வேரூன்றி செயல்படும் நிலையில், சிறிய சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு இது கடும் பின்னடைவாகவே விளங்கி, அரசியல் அதிகாரம் எதையும் அவர்களுக்கு எட்டாக் கனியாக்கிவிடும்.

இந்த மனப்பான்மையின் செயல்விளைவு, தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பெருந்தீங்காகவே முடியும். மத அடிப்படையில் அமைந்த இந்திய சாதி அமைப்பு, ஏணிப்படிகளைப் போன்று வரிசையான பல தர நிலைகளைக் கொண்டது என்பதையும், ஏணியின் படிகளில் மேலே இருப்பவர்களுக்கு மிகுந்த மதிப்பும், கீழ்நிலையில் இருப்பவர்களுக்கு இழிவும் காணப்படும் நிலையையும் நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள். இந்தப்படி நிலைஅமைப்பு முறையின் விளைவாக கீழ் படியில் உள்ள மக்கள், தமக்கு மேல்படிகளில் உள்ளவர்கள்பால் மரியாதை செலுத்தி முன்னுரிமை அளிப்பதையும், கீழ் படிளில் உள்ளவர்களை இழிவுபடுத்தி புறக்கணிப்பதையும் வழக்கமாக்கி வைத்துள்ளது.

இத்தகைய உளவியல் செயல்பாடு, தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரத்தின் போராட்டத்திற்குப் பேரழிவாய் முடிந்து விடும். இந்த நிலையில் தீண்டத்தகாத மக்களுக்கு ஆதரவாக ஒற்றை வாக்குகூட அளிக்காமல், தீண்டப்படும் மக்களே தீண்டத்தகாத மக்களின் வாக்குகளில் பெரும் பகுதியைப் பெற்றுவிட முடியும். இவ்வாறாக, தீண்டத்தகாத மக்கள் தங்கள் போராட்டத்தில் தோல்வியைப் பெற நேர்வதுடன், தம்மையறியாமலே தமது எதிரிகளின் வெற்றிக்குத் துணை போகவும் நேரிடும். எனவே, நடைமுறை சமூக நிலைமைகளைப் புறக்கணிப்பதன் விளைவு – செல்வம், கல்வி, சமூக நிலை ஆகியவற்றால் மேம்பட்டு நிற்கும் மேல் சாதி மக்களிடம் அரசியல் அதிகாரம் முழுவதையும் அளித்து, அவர்களை ஆளும் சாதியாக ஏற்பதுதான் என்றால், நமது குறிக்கோளுக்கு ஏற்ற வழிமுறைகள் அனைத்தையும் பயன்படுத்தி அதைத் தடுப்பதே நமது கடமையாகும். நமக்கு மேல் ஆட்சி செய்பவர்கள் மாறுவது மட்டுமே நமக்கொன்றும் நிறைவு தந்துவிடாது. பிறிதொரு நாட்டை ஆளும் தகுதி எந்தவொரு நாட்டுக்கும் கிடையாது என்ற கருத்தில் காங்கிரசாருடன் நான் ஒன்றுபடுகிறேன். ஆனால் அதோடு நின்றுவிடாமல்; அதே நியாயத்தை மேலும் விரித்து, பிறிதொரு வகுப்பை ஆளும் தகுதி எந்தவொரு வகுப்புக்கும் கிடையாது எனும் கருத்தை அவர்களிடம் அடித்துக் கூறுவதில் தயக்கம் தேவையில்லை.

அய்ரோப்பிய அதிகார வர்க்கம், இந்திய ஆளும் சாதியினர் எனும் இரு தரப்பினரையும் ஒப்பிட்டால் – செல்வம், கல்வி, உயர் சமூகத் தகுதி ஆகியவற்றின் மேம்பாட்டால் பெற்ற வலிமையின் விளைவுகளைத்தான் இங்கு குறிப்பிடுகிறேன். இந்த இரு பிரிவினரில் இந்தியப் பொது மக்களை யார் நன்கு ஆள முடியும் என்ற கேள்விக்கு, நாட்டு மக்களின் வாழ்க்கையும் அவர்களது நிலைகள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, சிந்தனைப் போக்கு, அவர்களது தேவைகள், முறையீடுகள் ஆகியவற்றை நன்கறிந்தவர்கள் என்ற முறையிலும், மக்கள் என்ன சிந்திக்கிறார்கள், எதை விரும்புகிறார்கள், எதில் அக்கறை கொள்கிறார்கள் என்பனவற்றை அறிய வல்லவர்கள் என்ற முறையிலும், தாங்களே இந்திய அரசுப் பொறுப்பை மேற்கொள்ள அதிக தகுதியுøடயவர்கள் என்று இந்திய மேல்தட்டு சாதியினர் உரிமை கொண்டாடுகின்றனர்.

அவர்கள் கூற்று உண்மையாயிருக்கலாம். ஆனால் அம்மேல் தட்டு சாதியினர், தம்மீது சுமத்தப்படும் வகுப்புப் பாரபட்சம், குழுப்பற்று, தமது உற்றார் உறவினர்களுக்கே நன்மை செய்யும் மனப்பான்மை ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துவிட முடியாது. பெரும்பாலான மக்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் அதிகாரங்களைப் பெறுவதற்கு அவர்கள் முற்றிலும் தகுதியற்றவர்கள் என்பதை இக்குற்றச்சாட்டுகள் உணர்த்துகின்றன. இன்னும் ஒருபடி மேலே சென்று, பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கும் இந்த உயர் வகுப்பினருக்குமிடையே நிலவும் பெருத்த இடைவெளி காரணமாக, எளிய மக்களின் தேவைகள், உணர்வுகள், விளைவுகள், குறிக்கோள்கள் ஆகியவற்றை இவர்கள் அறியவும் இயலாதவர்கள் என்றும் கூறலாம். அதற்கும் மேலாக அவ்வெளிய மக்களின் எதிர்காலக் கனவுகளுக்கு இவர்கள் பகையாகவே விளங்குவர் என்பதும் உண்மை.

இதை நான் வலியுறுத்தி ஆணித்தரமாகக் கூறுவதற்கு மற்றொரு அடிப்படைக் காரணம், மக்களாட்சியின் ஆணிவேர்க் கருத்தான சமத்துவத்தை ஏற்காத வகுப்பினரின் பிடியில் இந்தியத் தன்னாட்சி அரசை நம்பி ஒப்படைக்க முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாகுபாட்டு உணர்வில் ஊறித் திளைத்துத் தாமே உயர்ந்தவர்கள் என்று வாழும் இவர்களிடம், எளிய பொதுமக்களின் வாழ்க்கை நலன்கள் பாதுகாப்பாக இருக்கõது. ஒவ்வொரு தனித்தனி மனிதரின் மதிப்பையும் தனியே உணர்ந்து மதித்தல், ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வாழ்க்கைதான் உண்டு என்பதை உணர்ந்து, அவ்வாழ்க்கையில் அவர் தனது தகுதிகளுக்கேற்ப உச்ச கட்ட உயர்வை அடைய, அனைத்து வாய்ப்புகளையும் அளித்தல் ஆகியவையே நிகழ்கால மக்களாட்சி அரசின் கோட்பாடுகளாகும். இந்திய மேல்தட்டு வகுப்பு மக்களின் சிந்தையிலேõ, செயல்களிலோ, மெய்ப்பொருளியலிலோ இவ்வடிப்படைக் கோட்பாடுகள் கிஞ்சித்தும் இடம் பெறவில்லை.

மாறாக, இக்கோட்பாடுகளுக்கு முரண்பட்ட வகையில், ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள பல்வேறு பிரிவுகளில் ஒரு கட்டமே இப்போதைய பிறவி என்றும், இப்பிறவியில் பெற்றிருக்கும் உயர்வு, தாழ்வுகள், முற்பிறவியில் செய்த வினைகளின் விளைவே என்றும், இப்பிறவியில் எத்தகைய தகுதி, திறமை, பண்புகள் கொண்டிருந்தாலும் முற்பிறவியின் வினையால் கிடைக்கப் பெற்ற சமூகப் படிநிலைபடுத்தப்பட்ட நிலையில் எவ்வித மாற்றமும் அடைந்துவிட முடியாதென்றும் அவர்கள் கூறிவரும் மூடப் பழக்கங்களுக்கும் மக்களாட்சியின் அடிப்படைகளுக்கும் தொடர்பு ஏதுமில்லை. அவர்கள் கருத்துப்படி பார்ப்பனராகப் பிறந்தவர் பார்ப்பனராகவே இருப்பார்; பறையராகப் பிறந்தவர் தொடர்ந்து பறையராகவே இருப்பார் என்பது வெற்றுப் பேச்சன்று, நடைமுறை செயல்பாட்டிலிருக்கும் நம்பிக்கை. இத்தகைய மனப்பான்மை உள்ளவர்களிடம் அரசியல் அதிகாரத்தை கொடுத்தால், கொலைகாரன் கையில் நாமே வாளையெடுத்துக் கொடுப்பதற்கு ஒப்பாகும்.

6. இத்தகைய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் நாம் வகுப்புவாதிகள் என்றும், நாட்டின் பகைவர்கள் என்றும் இரக்கமின்றிப் பழி தூற்றப்படுகிறோம். எந்தவொரு நாட்டிலும் அறிவாளி மக்களிடமே அரசியல் அதிகாரம் போய்ச் சேருதல் இயற்கை என்றும், திறமையான நிர்வாகத்துக்கு அதுவே ஏற்ற முறை என்றும் காங்கிரசார் சலிப்பின்றிக் கூறி வருகிறார்கள். வரவிருக்கும் அரசியல் அதிகாரத்தை மேல்தட்டு சாதியினரிடமே விட்டுவிடலாம் என்று நம்மிடம் பரிந்துரைப்பவர்கள், சமூகமும் அரசியலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு வேறு மனித வாழ்க்கைக் கூறுகள் என்று எண்ணிக் கொண்டுள்ளார்கள் போலும்.

பெரியோர்களே! மனித நடத்தையைப் பற்றிய இத்தகையதொரு எந்திரமயமான சிந்தனைப் பள்ளத்தில் வீழ்ந்து விடாமல் விழிப்புடன் காத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்படிப்பட்ட பிழையான கருத்துகளிலிருந்து தப்பி சிந்திந்துப் பார்த்தõல், மனிதர்கள் ஒன்றின் மீதொன்றாய் வரிசைகளிலும் வரிசை மாற்றியும் அடுக்கி வைக்கக் கூடிய பொம்மைகள் அல்லர் என்பதை உணர முடியும். வாக்களிக்க வேண்டி வரும் மனிதர் ஒருவர் தமது நலன்கள், கருத்துக்கள், மனப்பான்மை ஆகியவற்றைச் சட்டையைக் கழற்றுவது போல கழற்றிவிட்டு, வெறும் அரசியல்வாதியாக வருவது இயலாத ஒன்று என உணர்வோம். அவன் தனது முற்றாளுமையுடன் வாழ்க்கையைப் பற்றிய சொந்தக் கண்ணோட்டத்துடன்தான் வருகிறான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மேல்தட்டு மக்களின் திறமைகள் நாட்டின் பெருஞ்செல்வம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்தத் திறமைகள் மட்டுமே நாட்டின் விவகாரங்களில் மேலாதிக்கம் செய்வதற்கான உரிமை எதையும் தந்துவிடவில்லை. அவர்களது நன்னடத்தையும் இந்தத் திறமைகளை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதையும் பொறுத்துத்தான் இந்த உரிமையைப் பெற முடியும். அந்த வகுப்பினருக்கு நம்மை ஆளும் உரிமையைத் தருவதற்கு முன்பு திறமையைவிடப் பயனைக் குறித்தே பார்க்க வேண்டும்.

அடிசன் கூறியதை இங்கு நினைவு கூறலாம். “எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தாமல், நல்ல திறமைகள் இருக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக அவற்றை (திறமைவாய்க்கப் பெறாதவர்கள்) மதித்துப் போற்றுவதைவிட, மனித சமுதாயத்திற்குப் பெருந்தீங்கு வேறெதுவும் இருக்க முடியாது. இயற்கைத் திறமைகளும் கலைகளில் தேர்ச்சியும், அவை அறவழியிலும் கண்ணியத்துடனும் பயன்படுத்தப்படும்போதுதான் மதிக்கப்பட வேண்டும்.

நம்முன் ஒருவர் உரையாடும்போதுகூட, அவரது (உரையாடல்) திறமையை மெச்சிப் போற்றத் தொடங்கு முன்பு அவரது மனப்பான்மை குறித்து நேரடியாகவோ, பிற வழியிலோ சரியான தகவல் அறிந்த பின்னரே செயல்பட வேண்டும். இல்லை எனில், நியாயமாக நாம் அருவெறுத்து ஒதுக்கத்தக்க மனிதர்களின் அழகு, சொல்திறன் ஆகியவற்றில் மயங்கி அவர்களை ஏற்றிப் போற்றுவதில் முடியும்.''

அரசியல் அதிகாரத்தைப் பெற்று அனுபவிக்கத் துடிக்கும் மேல்தட்டு வகுப்பு மக்களின் தன்மைகள், நடத்தை குறித்த ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்; அதற்கு மேல் ஏதும் கூறத் தேவையில்லை. ஆனால் இன்றும் நமது நாட்டில் தொடரும் சில இழிவான அவலங்களுக்கு இந்த மேல்தட்டு மக்கள் பொறுப்பாயிருக்கும் நிலைமை குறித்து நான் வாய்மூடி அமைதியாக இருந்து விட முடியாது. உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணவியலாத தீண்டாமை என்னும் தீக்கொடுமையை இந்த நாட்டில்தான் அய்ந்தாறு கோடி மக்கள் அனுபவித்து வருகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய எளிய உரிமைகள்கூட அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

– தொடரும்