வாய்க் கூசாமல் நீ உதிர்த்துவிட்டுப் போன
ஆபாச வார்த்தைகளில்
நான் நிர்வாணமாய் நின்றதாக
அருவருப்படைந்தது உண்மைதான்
தனிமையாய் என் ஒருவனை மட்டுமே
காயப்படுத்திவிட்டுப் போனதில்
உனக்குப் போதுமான திருப்தி
இல்லைபோல
என் தாயையும் கொச்சைப்படுத்தி
என் தகப்பனையும் கொச்சைப்படுத்தி
என் மனைவியையும் கொச்சைப்படுத்தி
மிச்சம் வைக்காமல் என் ஜாதியையும்
குறைப்படுத்தியதில்
உன் அதிகாரம்
நிறைவேறியிருக்க வேண்டும்
உனக்குள்ளது போலவே
எங்களுக்கும்
எல்லா உறுப்புக்களும்
அதனதன் உறைக்குள்
வெற்று வார்த்தைகளால்
வெளிக்கொணர்ந்து
காட்சிப்படுத்திப் பார்ப்பதிலென்ன
உனக்கு அற்ப சந்தோசம்
சத்தியமாகவே என் உடுப்பை நெகிழ்த்தி
என் உயிர்க்குறியை
உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்
உன் ஆபாச வார்த்தைகளுக்கு
அதை ஆடையாக உடுத்திக் கொண்டு
போயேன்
- அபிமானி
தலித் எழுத்தாளர் அபிமானி, இரு மாதங்களுக்கு முன்பு எந்தக் காரணமுமின்றி காவல் துறையால் கைது செய்யப்பட்டு, அவர் மீது பொய் வழக்கு தொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.